பல்லி அனுமதி கொடுத்தால் மட்டுமே திருவிழா.. மதுரையின் விசித்திரக் கோவில்...
பொதுவாக, மதுரை என்றாலே நமக்கு மீனாட்சி அம்மனும், கள்ளழகர் தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால் கோச்சடையில் மதுரையின் காவல் தெய்வமாக வீற்றிருக்கக்கூடிய வில்லாயுதம் உடைய அய்யனார் கோவிலில் நடக்கும் அதிசயம் பலருக்கும் தெரியாத நிலையிலே இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

இந்தக் கோவிலின் சில சுவாரஸ்யமான தகவல்கள்:
பல்லி சொல்லும் உத்தரவு:
இந்த கோவிலில் விசித்திரமான நிகழ்வு ஒன்று நடக்கிறது. அதாவது சுமார் 2000 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தில் இருக்கக்கூடிய பல்லி சப்தம் எழுப்பினால் மட்டுமே திருவிழா நடைபெறுகிறது. அதுவரை ஊர் முழுவதுமாக காத்திருப்பார்கள். ஒருவேளை பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றால் அந்த ஆண்டு திருவிழாவே இல்லை என்பது அய்யனார் கொடுக்கக்கூடிய உத்தரவாக ஊர் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
2000 ஆண்டு காலத்து புளியமரம்:
இந்த ஆலயத்தில் தல விருட்சமாக புளியமரம் இருக்கிறது. இந்த புளியமரம் மிகவும் பழமையானதாகவும் காணப்படுகிறது. இங்கு திருமண தடை உள்ளவர்கள் தாலி கயிறு கட்டியும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும் பக்தர்கள் இங்கு மனம் உருகி பிரார்த்தனை செய்கிறார்கள்.

கம்பீரமான வரவேற்பு:
இந்த கோவிலில் நுழைவாயிலில் அய்யனாரும் முத்தையாவும் குதிரை மீது அமர்ந்து பஞ்ச பூதங்களுடன் நம்மை வரவேற்க கூடிய அந்த காட்சி நம்மை மெய் சிலர்க்க வைக்கிறது. சேர, சோழ பாண்டியர்களுக்கும் கோவிலில் சிலைகள் இருப்பது கூடுதல் சிறப்பை பெறுகிறது.
நீதி கேட்கும் தலம்:
தொடர்ந்து வாழ்க்கையில் கஷ்டம், நியாயத்திற்கான தீர்ப்பு கிடைக்கவில்லை உங்களை சுற்றி அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது, நம்பியவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று பல்வேறு முறையீடுகளை பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வைக்கிறார்கள்.
ஆதலால் இந்த கோவில் ஒரு சக்தி வாய்ந்த "முறைப்பாட்டுத் தலம்" ஆகவும் விளங்குகிறது. ஆக, இனி நீங்கள் மதுரை பக்கம் சென்றால் கோச்சடை அய்யனாரை தரிசிக்க தவறாதீர்கள். உங்களுக்கு நீதியும் தர்மத்தையும் அவர் வாங்கி கொடுத்து வாழ வைப்பார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |