ஒருமுறையாவது கட்டாயம் பௌர்ணமி அன்று தரிசனம் செய்யவேண்டிய ஆலயம்
பொதுவாக, பௌர்ணமி மிகவும் விஷேசம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் இறை அருள் அதிக அளவில் காணப்படுவதால் அன்று நாம் வைக்கும் வழிபாட்டிற்கு பல மடங்கு பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பௌர்ணமி தினமாவது நாம் இந்த ஆலயம் சென்று தரிசித்து விட வேண்டும். அவ்வாறு செய்து வர எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்த பலன் நம்மை தொடரும் என்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
52 சக்தி பீடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக காஞ்சி காமாட்சி அம்மன் அருள் பாலித்து வருகின்றாள். மேலும், தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக அன்னை இருக்கிறாள். இத்தலத்தில் காமாட்சி அம்மனின் இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் தேவியும் உள்ளார்கள்.
அதனால், பௌர்ணமி நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்திற்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபிணியாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் தான் பல ரிஷிகள் தவம் இருந்து அன்னை காமாட்சியின் அருளைப்பெற்றார்கள். மேலும், இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
அப்படியாக, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெறும் பொழுது இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை ஸ்ரீ ஆதிசங்கரர் சிலாரூபமாக பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீ சக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்தில் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய நவசித்தி தேவதைகள் உள்ளனர்.
இங்கு பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெறுகின்றது. 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைப்பெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்த பூஜை மிகவும் விஷேசம் வாய்ந்தது மட்டும் அல்லாமல் பல பலன்களை கொடுக்கக்கூடியது. இந்த பூஜையை நன்கு உபதேசம் செய்தவர்களால் மட்டுமே செய்யமுடியும். இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீ சக்ரத்தை சாதாரண நாட்களில் தரிசனம் செய்தாலே அதீத பலன்கள் கிடைக்கும்.
அப்படி இருக்கும் பொழுது மிகவும் சக்தி வாய்ந்த பௌர்ணமி நாளில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்வது நமக்கு பல கோடி நன்மைகளை கொடுக்கிறது. இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது நம் மனதில் உள்ள அழுக்குகள் விலகி வாழ்க்கையில் வளம் உண்டாகிறது.
மேலும், இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். அதனால் ஸ்ரீசக்ரத்தில் பூஜை செய்து பெறப்படும் குங்குமத்திற்கு அதீத சக்திகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |