புரட்டாசி மாதத்தில் இந்த ஒரு வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்
புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த மாதமாகும். இந்த புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திரமும் கூடிய திருநாளில் மகாவிஷ்ணு பூலோகத்தில் ஸ்ரீனிவாச பெருமாளாக அவதரித்தார்.
இதன் அடிப்படையில் தான் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்கிறார்கள். அந்த வகையில், ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் துன்பம் என்பது அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது. இன்பத்தை அவன் பல நாள் பேசுவதில்லை. ஆனால், துன்பத்தை அவன் பல காலம் எனக்கு இப்படி நடந்து விட்டது என்று புலம்புவது உண்டு.

இதற்கெல்லாம் நம்முடைய கர்ம வினை ஒரு காரணம் என்று இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவது தான் மானிட வாழ்க்கையின் கடமையாகும். அந்த வகையில், புரட்டாசி மாதங்களில் நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்தால் நம்முடைய வாழ்க்கையை மாற்றலாம். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
இந்த துளசி என்னும் சொல்லுக்கு ஒப்பிட முடியாதது அல்லது உயர்ந்தது என்று பொருள். ஆகையால் துளசியால் நாம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதும் துளசி மாலை சாற்றுவதும் மிகவும் விருப்பமானவையாக பெருமாளுக்கு இருக்கிறது.
அதோடு, இந்த துளசிக்கு தோஷமே கிடையாது என்பதால் நாம் முதல் நாள் பறித்த வாடிய துளசியை கூட நாம் பூஜைக்கு பயன்படுத்தலாம்.
அதே போல், சுவாமிக்கு நெய்வேத்தியம் வைக்கின்ற பொழுது அதன் மீது துளசி சேர்ப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. நாம் ஒருவருக்கு அன்னம், ஆடை என தானம் வழங்கும்பொழுது கூட இந்த துளசி அதன் மீது வைத்துக் கொடுத்தால் நமக்கு இரட்டிப்பு பலன் வந்து சேரும் என்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் "ஒரே ஒரு துளசி இலை கொண்டு பூஜித்தாலும் அவர்களை தன்னுடைய அடியவராக ஏற்பேன்" கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார் அதை அவர் நிரூபித்தும் காட்டிருக்கிறார்.

அதாவது ஒருமுறை சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் நடந்த போட்டியில் கிருஷ்ணருக்கு துலாபாரமாக பொன் வைத்த போது அந்த தரசின் தட்டுகள் சமமாகவில்லை. இறுதியில் ருக்மணி மிகுந்த பக்தி உடன் ஒரு துளசி இலையை வைக்க அது சமநிலை அடைந்தது. இதுதான் துளசியின் மகிமையும் பகவான் கிருஷ்ணருடைய அருளும்.
ஆக, இந்த புரட்டாசி மாதத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும், இறைவனை நோக்கிய பயணம் வேண்டும், அவமானங்களில் இருந்து விடுபட வேண்டும், நல்ல பொருளாதாரம் வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், திருமணம் நடைபெற வேண்டும், ஆரோக்கியம் மேம்பட வேண்டும், இழந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என்று எதுவாக இருந்தாலும் காலையில் எழுந்து துளசி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு விளக்கேற்றி "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ" என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது நிச்சயம் புரட்டாசி மாதம் முடிவதற்குள் உங்களுடைய மனநிலையிலும் உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் மிக உயர்ந்த மாற்றத்தை காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |