பல சேத்திரப் பெருமைகள் கொண்ட சீர்காழி சட்டை நாதர்

By பிரபா எஸ். ராஜேஷ் Jun 21, 2025 05:28 AM GMT
Report

 திருக்கழுமலம் என்றும் சீர்காழி என்றும் அழைக்கப்படும் சட்டநாதர் திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலமாகும். அவர் ஞானப் பால் உண்ட பிரம்ம தீர்த்தம் படித்துறை இக்கோவிலில் தான் உள்ளது.

இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே ஞானக் குழந்தையான திருஞானசம்பந்தருக்கும் ஒரு சன்னதி உள்ளது. காவிரி வடகரை இல் அமைந்த திருத்தலங்களில் 14வது சிவத்தலம் சீர்காழி ஆகும். தேவாரம் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் இக்கோவில் 14வது தேவாரத் திருத்தலமாகும்.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

கருவறைக் கடவுள்

சீர்காழி சட்டை நாதர் கோவிலின் கருவறைத் தெய்வமான சிவபெருமானை சட்டை நாதர் என்றும் பிரம்மபுரீஸ்வரர் என்றும்  தோணியப்பர் என்றும் அழைக்கின்றனர். இத்தலத்தில் குரு ரூபம், லிங்க ரூபம், சங்கம ரூபம் என்று மூன்று ரூபங்களில் காட்சி தருகின்றார்.

குருவாக பிரம்மபுரீஸ்வரரும் லிங்கமாக தோணியப்பரும் சங்கமமாக பரிபூரண கடாட்சரான சட்டநாதரும் உள்ளனர். சிவபெருமான் தெற்கு நோக்கி கருவறையில் அருள் பாலிக்கின்றார்.

பல சேத்திரப் பெருமைகள் கொண்ட சீர்காழி சட்டை நாதர் | Sirkali Sattainathar Temple

அம்மன் திருநிலை நாயகி

அம்மனை பெரிய நாயகி என்றும் ஸ்திர நாயகி என்றும் திருநிலை நாயகி என்றும் அழைப்பர். திருநிலை நாயகி சன்னதி முன்பு திருமணங்கள் நடைபெறும் பெரிய மண்டபம் உள்ளது

தீர்த்தமும் விருட்சமும்

மற்ற கோவில்களுக்கு சொல்வதைப் போல எங்கும் 22 தீர்த்தங்கள் இருந்தன என்று கூறப்பட்டாலும் பிரம்ம தீர்த்தம் ஒன்றே என்று கோயில் தீர்த்தமாக இருந்து வருகிறது.  தலவிருட்சமாக பவளமல்லி மரம் உள்ளது.  

பாடல் பெற்ற தலம்

சீர்காழி கோயில் நாயகனை தேவார மூவர் தொடங்கி அருணகிரிநாதர், கனநாதர், மாணிக்கவாசகர் நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார் ,அருணாச்சல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துத் தாண்டவ தீட்சிதர் வரை பாடிப் போற்றித் துதித்துள்ளனர்  

தோணியப்பர்

ஊழிக் காலத்தில் கடல் பொங்கி எழுந்து பூமியை அழித்தபோது சிவபெருமான் மட்டும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தைத் தோணியாகக் கொண்டு பிரவாகக் கடலில் மிதந்து சீர்காழிக்கு வந்து மீண்டும் இவ்வுலகின் அனைத்து உயிர்களையும் இங்கிருந்து படைத்தார்.  எனவே அவரை தோணியப்பர் என்று அழைக்கின்றனர். கோவில் விமானத்தில் தோணியப்பர் பெரியநாயகி உடன் சுதையால் ஆன சிற்பம் உள்ளது

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்

சட்டநாதர்

சட்டநாதர் என்ற பெயர் காரணமாக அமைவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8:30 மணி பூஜையில் அவருக்கு நெற்றியில் சாட்டப் படும் புனுகு சட்டமாகும். புனுகுச் சட்டம் என்றால் புனுகுப் பூனையின் மலவழியாக அமைந்த ஒரு சுரப்பி அல்லது ஓர் உறுப்பு ஆகும்.

இதுவே புனுகுச் சட்டம் என்று அழைக்கப்படும். இப் புனுகை உருட்டி எடுத்து நல்லெண்ணையில் ஊற வைத்துப் பிழிந்து அதனைச் சாமியின் நெற்றியில் பொட்டாக சாத்தும் மரபு திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வைத்தீஸ்வரன் செல்வமுத்துக்குமாரசாமி கோவில் அண்ணாமலையார் கோவில் போன்ற கோவில்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சீர்காழியிலும் உள்ளது  

பல சேத்திரப் பெருமைகள் கொண்ட சீர்காழி சட்டை நாதர் | Sirkali Sattainathar Temple

புனுகணி ஈசன்  

அண்ணாமலை ஈஸ்வரரை புனுகணி ஈசன் என்றே அழைக்கின்றனர். காரணம் அவர் புனுகு அரசன் என்பவன் சிவன் அருளால் புனுகுப் பூனையாக இருந்து சிவபூஜைக்கு புனுகு கொடுத்து வந்தான். அவன் ஆயுள் முடிந்து சொர்க்கம் சென்றடையும் நாள் வந்தபோது அவன் அண்ணாமலையாரிடம் ஓர் வரம் கேட்டான்.

இனிவரும் காலங்களில் இறைவனைப் புனுகு அணி ஈசன் என்றும் அழைக்கப்பட வேண்டும் என்றான். இறைவனும் அவ்வரத்தைத் தந்தருளினார். அன்று முதல் அண்ணாமலையார்  புனுகணி ஈசர் என்றும் அழைக்கப்படுகின்றார்.   சீர்காழியில்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எட்டரை மணிக்கு நடைபெறும் இரவு பூசையின் போது சட்டநாதரின் நெற்றியில் புனுகு அணிவிப்பது வழக்கம்.

அதன் பின்பு அவருக்கு ஒரு முழு தேங்காய் சாற்றி அந்த தேங்காயை நேர்ச்சை செய்த பக்தரிடம் கொடுப்பார்கள். இந்த முழுட் தேங்காயை அவர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு போய் பூசை செய்து பூஜை அறையில் வைத்து வணங்கி வர அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். அதனை உடைக்கவோ சாப்பிடவோ கூடாது.  

பரிபூரண கடாட்சகர்

இக்கோயிலில் இறைவன் பைரவ ரூபத்தில் பீஜ சொரூபமாக (விந்து உருவாக)  இருக்கின்றார். எனவே அவர் வேண்டும் வரம் எல்லாம் அருளும் பரிபூரண கடாட்சகர் ஆவார்.

அஷ்ட பைரவர் சேத்திரம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் அஷ்ட பைரவ சேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது, இங்கு இறைவன் பைரவராகவும் உள்ளார்.  எட்டுக்கு எட்டு என 64 பைரவர்களின் ஆனந்த ரூபமாக ஆனந்த பைரவராக விளங்குகின்றார்.

எனவே இத்தலம் யோகஸ்தலம் எனப்படுகின்றது. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் கோவிலின் தெற்கு பக்கத்தில் இருக்கும் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்: தொன்மைச் சிறப்பும் ஆன்மிகப் பெருமையும்!

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்: தொன்மைச் சிறப்பும் ஆன்மிகப் பெருமையும்!

சோமாஸ்கந்தர் ஸ்தலம்

சீர்காழி சட்டநாதர் கோவில் ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட கோவில் . அவர் முருகப்பெருமானின் அவதாரம் என்றும் நம்பப்படுகிறது. ஈசன் மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு நடுவே இவர் இருப்பதால் இத்தலம் சோமாஸ்கந்தர் தலம் ஆகும். இது சோமனும் ஸ்கந்தனும் சேர்ந்து இருக்கும் ஸ்தலம் ஆகும்.  சிவனும் ஞானசம்பந்தரும் சேர்ந்து இருக்கம் கோவில் என்பதால் இக்கோவில் சோமா ஸ்கந்தர் ஸ்தலம் எனப் பெயர் பெற்றுள்ளது.  

பல சேத்திரப் பெருமைகள் கொண்ட சீர்காழி சட்டை நாதர் | Sirkali Sattainathar Temple

சித்தர்களின் இரவு பூசை

சட்ட நாதர் கோவிலின் அருகில் பதினெண் புராணேஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவில் உள்ளது. இக்கோவிலில் வாழும் 18 சித்தர்கள் சட்டநாதர் கோவிலுக்கு இரவில் வந்து சிவனை வணங்கிச் செல்வர்.

இதுபோல இரவில் வந்து இறைவனை வணங்கிச் செல்லும் மரபு தாணுமாலயன் சுவாமி கோவில், வேதகிரீஸ்வரர் கோவில் போன்ற வேறு சில கோவில்களிலும் உண்டு. இக் கோவில்களில் இந்திரன் இரவில் வந்து பூஜை சிவ பூஜை செய்வான். சட்டநாதர் கோவிலில் சித்தர்கள் வந்து இரவு பூஜை செய்கின்றனர்.

தோலை சட்டை தைத்துப் போட்டவர்

ஹரி நாராயணா என்று பெருமாளை வணங்கக்கூடாது. தன்னை மட்டுமே மக்கள் வணங்க வேண்டும் என்று சட்டம் பிறப்பித்த இரணிய மன்னனை அவனது மகனே ஹரியை மட்டுமே நான் வணங்குவேன் என்று எதிர் சவால் விடுத்தான்.

அப்போது இரணியன் உன் ஹரி எங்கிருக்கிறார் என்று கேட்டான். அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் பதிலளித்தான் இரணியன் ஒரு தூணைக் காட்டி இதில் உன் ஹரி இருக்கின்றானா என்றதும் பிரகலாதன் ஆம் என் ஹரி எங்கும் நிறைந்து இருக்கின்றான்.

இந்த தூணில் இருந்தும் அவன் வருவான் என்று சொல்லவும் அரண்மனையின் வாயில் தூணில் இருந்து வெளிப்பட்ட பெருமாள் நரசிங்க உருவத்தில் தோன்றி இரணியனின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டார்.

நரசிங்கப் பெருமாளின் கோபம் குறையாமல் அகங்காரம் கொண்டு திரிந்த போது ஈசன் அவர் தோலை உரித்து தனக்குச் சட்டையாக்கி போட்டுக் கொண்டார். இந்த வடுகநாதரே சட்டநாதர் எனப்பட்டார்.  

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: பக்தி, கலை மற்றும் மரபின் பொக்கிஷம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: பக்தி, கலை மற்றும் மரபின் பொக்கிஷம்

முத்தங்கி - முத்து சட்டை

சீர்காழி ஈசன் முத்துச்சட்டை நாதர் என்ற பெயரில் வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்களில் ஒருவராகவும் காட்சி அளிக்கின்றார். கோயில் சிலைகளுக்கு முத்து அங்கி செய்து காணிக்கையாக்கும் பழக்கம் நாயக்க மன்னர்கள் காலத்தில் அதிகமாக காணப்பட்டது. எனவே இவரை முத்துச்சட்டை வடுகநாதர் என்றும் அழைக்கின்றனர்.

பிரம்மபுரம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் பக்தி இயக்க காலத்திற்கு முன்பு பிரம்மதேவன் கோவிலாக இருந்த காரணத்தினால் இங்கு உள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

பல சேத்திரப் பெருமைகள் கொண்ட சீர்காழி சட்டை நாதர் | Sirkali Sattainathar Temple

 காசிக்கு முந்திய காழி

 சீர்காழி திருத்தலம் சிவனருள் பொழிவதில் காசிக்கு முந்தியதாகும். ஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் என்பதாலும் ஞானப்பால் உண்ட கதை மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றதாலும் ஞானசம்பந்தர்க்கு இங்கு தனிச் சன்னதி இருப்பதாலும் இத்திருத்தலம் இன்று சமய நெறி பரப்பும் சைவப்பெருந்தலங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்குகின்றது.   

முருகனின் அஷ்டோத்திரம்

பிரம்மபுரீஸ்வரருக்கு வலது பக்கத்தில் உள்ள மகாமண்டபத்தில் திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தி ஆக எழுந்தருளியுள்ளார் இவர் சிவபெருமான் கொடுத்த பொன்னாலாகிய தாளத்தைக்  கையில் வைத்திருக்கவில்லை மாறாக கையில் பால் கிண்ணத்துடன் இன்னொரு கையை தனக்குப் பாலூட்டிய இறைவியை நோக்கி காட்டிய வண்ணம் காட்சியளிக்கின்றார்.

எனவே இவரை முருகப்பெருமான் என்று கருதி முருகனுக்கு உரிய அஷ்டோத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்கின்றனர். அருணகிரிநாதர் வடலூர் வள்ளலார் ஆகியோர் முருகப்பெருமானை திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்று நம்பினர்.

மக்களிடையே இக்கருத்தை பரப்பியும் வந்தனர். இத்திருத்தலத்தில் இறைவனை பாடுவதற்கு சிவபெருமான் இவருக்குப் பொன்னால் ஆகிய தாளத்தை கொடுத்தார் என்பதால் மற்ற திருத்தலங்களில் ஞானசம்பந்தர் சிலை கையில் பொற்றாளத்துடன் காட்சியளிக்கும்.  

கல்வெட்டுக்கள்

 சீர்காழி சட்டை நாதர் கோவிலில் சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. அவற்றைத் தொடர்ந்து கிருஷ்ணர் தேவராயர் கல்வெட்டுக்களும் வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும் உள்ளன.

'ராஜராஜ வள நாட்டு திருக்கழுமல நாட்டு பிரம்மதேசம் திருக்கழுமலம்' என்று கல்வெட்டில் இவ்வூர் கழுமலம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜ சோழன், ராஜாதி ராஜ சோழன் போன்ற சோழ மன்னர்கள் இக்கோவிலுக்கு அதிக அளவில் நிபந்தங்கள் வழங்கி உள்ளனர்.

பல சேத்திரப் பெருமைகள் கொண்ட சீர்காழி சட்டை நாதர் | Sirkali Sattainathar Temple

பெரியபுராணத்தில் சீர்காழி

சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் தோன்ற சீர்காழி திருநகரை

வேத நெறி தழைத்தோங்க
மிகு சைவத்துறை விளங்க
பூத பரம்பரை பொலியப்
புனித வாய் மலர்ந்தழுத
சீதவள வயல் புகலி
திருஞானசம்பந்தர் பாதமலர்
தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுமாம்

 என்று வேத நெறி தழைத்தோங்க/ தோன்றிய ஊர்  என்று புகழ்கிறார். மேலும் திருஞானசம்பந்தரை வணங்கி சைவர்களின் திருத்தொண்டை பற்றி விளக்குவோம் என்கின்றார்.  

சீர்காழி நாதரின் தோற்றம்  

சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருத்தோற்றத்தை திருஞானசம்பந்தரின் பதிகம் ஓன்றால் தெளிவாக அறியலாம் பிரம்ம தீர்த்தப் படித்துறையில் பால் வாயுடன் இருந்த மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரைப் பார்த்து உனக்கு யார் பால் கொடுத்தார்? என்று கேட்டபோது அக்குழந்தை

  தோடுடைய செவியன் விடையேறி
ஓர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான்
முனை நாள் பணிந்தேத்த
அருள் செய்த
பீடுடைய பிரம்மபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

என்று கைநீட்டிக் காட்ட அங்கு சிவபெருமான் அன்னை உமையவளுடன் திருக்காட்சி அளித்தார்.

பல சேத்திரப் பெருமைகள் கொண்ட சீர்காழி சட்டை நாதர் | Sirkali Sattainathar Temple

காளிச்வரர்

சீர்காழி சட்டை நாதர் கோவிலில் காளிபுரீஸ்வரருக்கு தனி சன்னதியும் உண்டு. பிரம்மபுரம் என்ற பெயரில் பௌத்தக் கோவில் ஒரு இங்கு இருந்த காலத்தில் இங்கிருந்த பெண் தெய்வம் காளியைப் போன்று துடியான தெய்வமாக இருந்தது. அவள் மயான காளியாக இருந்தாள் பௌத்த வருகைக்கு முன்பு அவள் மயானம் காக்கும் பிடாரியாக இருந்தாள். இக்கோவிலுக்கு அருகிலும் காளி மயானம் உள்ளது.

காளியும் உமையும்  

காளி என்றால் கொலைத் தெய்வம். அவள் தண்டனை கொடுத்து தலையை வெட்டுவாள். வெட்டுப்பட்ட தலையில் இருந்து வடியும் ரத்தத்தை கிண்ணத்தில் பிடித்து இருப்பாள்.

பெண் தெய்வத்தின் இக் கோர ரூபத்தை மாற்றிப் பெண் என்றால் சாந்த வடிவானவள், தாய்மைப் பண்பு நிறைந்தவள், குழந்தைக்கு பால் ஊட்டும் கருணை வடிவானவள், என்ற புதிய கருத்தாக்கத்தை உருவாக்க ஞானப்பால் ஊட்டும் கதை வழங்கப்படுகின்றது. எனினும் இக்கோவிலுக்குள் பழைய காளியும் தனி சன்னிதியில் இடம்பெற்றுள்ளாள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US