நீங்கள் எப்படிப்பட்ட மனிதராக வாழப்போறீங்க? இந்த கதையின் இறுதியில் முடிவு செய்யுங்கள்
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிந்தனை கொண்டிருக்கிறார்கள். அப்படியாக, ஒருமுறை கடவுள் மனிதர்கள் முன் காட்சி அளிக்கிறார். அவர் மனிதர்களை பார்த்து நான் உங்களுக்கு வரம் கொடுக்கப் போகின்றேன். நீங்கள் என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள் என்று கடவுள் சொல்லுகிறார்.
அப்பொழுது, அங்கிருந்த பத்து நபர்கள் அவர்களுடைய விருப்பத்தை ஒவ்வொன்றாக கடவுளிடம் தெரிவிக்கிறார்கள். அதில் முதல் நபர் தனக்கு ஒரு மிகப்பெரிய அளவில் தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகளையும், கைநிறைய பணம் வேண்டும் என்று ஒரு வரத்தை கேட்கிறார்.
அவரை தொடர்ந்து இரண்டாவது நபர் தனக்கு அதிகாரமிக்க பதவியை வரம் அளியுங்கள் என்று இறைவனைப் பார்த்து கேட்கிறார். மூன்றாவது நபர் தான் மிகச்சிறந்த நடிகர் ஆகி மக்கள் மத்தியில் பெயரும் புகழுடனும் வாழ வேண்டும் என்ற ஒரு வரத்தை கேட்கிறார்.

நான்காவதாக வந்த ஒரு பெண் தான் அழகில் சிறந்தவளாகவும் இந்த உலகமே அவருடைய அழகை கண்டு மயங்க வேண்டும் என்று அவர் ஒரு வரத்தை கேட்கிறார். இப்படியாக, கடவுள் முன்பு ஒவ்வொருவரும் அவர்களுக்கு மனதில் இருக்கக்கூடிய ஆசைகளை வரமாக கேட்டுக் கொண்டனர்.
அப்பொழுது கடைசியாக ஒரு நபர் மட்டும் மிகுந்த தயக்கத்துடன் கடவுள் முன்பு வந்து கடவுளே எனக்கு நிம்மதியும் மன நிறைவுடன் வாழக்கூடிய வாழ்க்கையும் வரமாக தாருங்கள் என்று கேட்கிறார். அதை கேட்ட அங்கிருந்த பலரும் சிரித்தபடி விருப்பம் நிறைவேறினால் மனநிறைவு தானாக வந்து விடப் போகிறது? என கிண்டல் செய்தனர்.
அப்பொழுது, கடவுள் அங்கிருந்த நபர்களை பார்த்து, இங்கு வரம் பெற்றவர்கள் எல்லோரும் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு, அந்த பத்தாம் நபரிடம் மட்டும் நீ சற்று நேரம் காத்திரு! உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டி உள்ளது. சிறிது நேரம் கழித்து நீ கேட்ட வரத்தை நான் தருகின்றேன் என்று சொல்லி அங்கிருந்து கடவுள் புறப்படுகிறார்.
அந்த பத்தாம் நபருக்கு கடவுள் என்ன தரப் போகிறாரோ என்று வரம் பெற்ற நபர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு பத்தாம் நபர் மீது பொறாமை ஏற்படுத்துவங்கியது. என்ன கடவுள் இவரை மட்டும் தனியாக அமர வைத்து சிறிது நேரம் கழித்து வரம் தருகிறேன் என்று சொல்கிறார்.

வரம் பெற்றவர்களுக்கு பத்தாவது நபருக்கு என்ன வரம் தரப் போகிறார் என்று அவர்கள் மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் குழப்பங்கள் எழத் துவங்கியது. அவர்கள் பெற்ற வரத்தை மறந்து விட்டு இவருக்கு கடவுள் என்ன வரம் கொடுக்கப் போகிறார் என்ற சிந்தனையில் அவர்களுடைய மன நிம்மதியை அங்கு இழக்கத்தொடங்கினார்கள்.
ஆனால், பத்தாம் நபர் அவர் மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறார். தன்னிடம் கடவுள் வந்து என்ன பேசப் போகிறார் என்ற எண்ணத்தினால் அவர் மன நிறைவு ஏற்பட்டது. இப்போ சிந்தித்து பாருங்கள்? நீங்கள் தான் பத்தாவது மனிதனா அல்லது பத்தாது (போதாது) என்கின்ற மனிதனா? நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் பேராசை அகன்று விட்டாலே நிம்மதி என்கின்ற வரம் நம்மை தேடி வரும். அதுதான் நிலையானதும் உண்மையான மகிழ்ச்சியும் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |