12 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அத்திவரதர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனாய அத்தி வரதரை சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
பொதுவாக அத்திவரதர் என்றாலே நமக்கு முதலில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தான் நினைவிற்கு வரும். ஆனால் அத்திவரதர் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அரிய திருவுருவமாகும். இது அத்தி மரத்தால் செதுக்கப்பட்டதால் அத்தி வரதர் என அழைக்கப்பட்டு வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றதாகிறது.

இந்த அத்தி மரம் என்பது ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் நிறைய நன்மைகள் கொண்டது. அதனால் இந்த அத்தி மரத்தில் செய்யப்பட்ட திருமேனி சக்தி நிறைந்தது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
புராண கதைகளின் படி மூல வரதராஜர் சிலை சேதமடைந்ததால் அதனை அத்திமர மூர்த்தி நீரில் பாதுகாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த அத்திவரதர் ஆலய தெப்பக்குளமான அனந்த சரஸ் குளத்து நீரில் பாதுகாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே 48 நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கடந்த 2019 ஆம் ஆண்டு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு 24 நாட்கள் சயன நிலையிலும் அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் தரிசனம் வழங்கினார். அந்த நேரத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட காஞ்சி அத்திவரதரை மறு பிம்பமாக குறிப்பிட்ட சில வேறுபாடுகளுடன் கும்பகோணம் அத்தி வரதர் இருக்கிறார். ஆனால் இவர் காஞ்சிபுரம் போல் 40 வருடங்களுக்கு ஒரு முறை என்ற அரசு விதிப்படி இல்லாமல் 12 ஆண்டு ஒரு முறை வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு மீண்டும் பாதாள அறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.

கும்பகோணத்தில் இருக்கக்கூடிய அத்திவரதர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி பூதேவி உடனாகிய அத்தி வரதரை மார்ச் 1ஆம் தேதி வெளியில் எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மார்ச் 10 ஆம் தேதி வரை இந்த சிலை பக்தர்களுக்காக தரிசனம் செய்யலாம் என்றும் விதிகளின்படி காலை 8:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை சுவாமிக்கு தைலக்காப்பு, புஷ்பா சேவை ஊஞ்சல் போன்ற சேவைகளை பக்தர்களே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகவே அத்தி வரதரை தரிசனம் செய்தால் நமக்கு கல்வி, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் குடும்பத்தில் மகிழ்ச்சி, நோய் நிவாரணம் போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது. ஆதலால் கும்பகோணத்தில் இருக்கக்கூடிய இந்த அத்திவரதர் தரிசிப்பதற்கு பக்தர்கள் பல இடங்களில் வருகை தந்து வழிபாடு செய்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |