ருத்ராட்சம் அணிந்த பிறகு அதை அடிக்கடி கழட்டி வைக்கலாமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
இறைவழிபாட்டில் ஒரு பகுதியாக ருத்ராட்சம் அணிவது உள்ளது. ருத்ராட்சம் அணிவதால் நம் மனம் ஒருநிலை அடைகிறது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கிடைக்கிறது. அதோடு மிக முக்கியமாக நம்முடைய கர்மவினைகள் விலகுகிறது.
அப்படியாக, சமீப காலத்தில் ருத்ராட்சம் அணிபவரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மேலும், ருத்ராட்சம் பற்றிய சரியான புரிதல் இல்லாமலும் பலர் அணிந்து வருகின்றனர். அந்த வகையில் பலருக்கும் இருக்கும் ஒரு மிக பெரிய சந்தேகம் ஒருமுறை ருத்ராட்சம் அணிந்து விட்டால் அதை கழட்டலாமா என்பதே. அதைப் பற்றி பார்ப்போம்.
இந்து மதத்தில் ருத்ராட்சம் சிவபெருமானின் சிவ அம்சமாக கருதப்படுவது. இது சிவ பெருமானின் கண்களில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர் துளியில் இருந்து தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன. இவ்வளவு சிறப்பான ருத்ராட்சம் அணிவதற்கும் நமக்கு கட்டாயம் சிவபெருமானின் அருள் வேண்டும்.
மேலும், எவர் ஒருவர் ருத்ராட்சம் அணிந்து எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலன் கொடுக்கிறது. அதை விட சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த மகாம்ருத்யுஞ்சய மந்திரத்தை ருத்ராட்சம் அணிந்து உச்சரிப்பவர்களுக்கு எந்த வித நோயும், அகால மரணமும் நெருங்குவதில்லை. அதே போல் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானலும் அணியலாம்.
சிறுவர், பெரியவர், திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்று எவர் வேண்டுமானலும் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தில் பல முகங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் 5 முக ருத்ராட்சத்தை அணிவதை நாம் பார்க்க முடியும்.
ஈசனின் திருமுகங்கள் ஐந்து. நமச்சிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் எத்தனை முக ருத்ராட்சம் இருந்தாலும் 5 முக ருத்ராட்சம் அணிவது சிறந்தது. அதுவே எல்லா முகம் ருத்ராட்சம் அணிந்த பலனைக் கொடுத்து விடுகிறது.
மேலும், ருத்ராட்சத்தை நாம் எந்த சூழ்நிலையிலும் கழட்டாமல் இருப்பதே நல்லது. ஒரு சிலர் ஏதேனும் சடங்குகள் அல்லது சூழ்நிலை காரணமாக கழட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு கழட்டுவதால் எந்த ஒரு பயனும் கிடைக்கபோவது இல்லை. அதிலும் மிக முக்கியமாக பெண்கள் தீட்டு, கணவன் மனைவி இல்லற தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷத்தை அணியக் கூடாது என்று பலரும் எண்ணுவதுண்டு.
இந்த உலகில் எல்லாம் இயற்கையானது இவை எல்லாம் அனுபவித்து கடந்து செல்லத்தான் இறைவன் படைத்திருக்கின்றான். ஆதலால் ருத்ராட்சம் அணிவதற்கும் இந்த விஷயங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
ருத்ராட்சம் போல் சிறந்த பொன் இந்த உலகத்தில் இல்லை. அதை அணிந்து கொள்வதால் நம்முடைய ஆன்மா புனிதமாகிறது. நம் மனம் தெளிவை நோக்கி செல்கிறது. உண்மை நிலை அறிய அந்த ருத்திராட்சம் வழி காட்டுகிறது. ஆதலால் அதை இந்த சூழ்நிலையிலும், எதற்காகவும் நாம் அதை கழட்டி வைக்கவேண்டாம் என்பதே உண்மை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |