நாக தோஷம் போக்கும் கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Jun 26, 2025 03:54 AM GMT
Report

கார்கோடகன் என்ற பாம்பிற்கு அருள் பாலித்த பிருகன் மாதவப் பெருமாள் கோவில் நாக தோஷ பரிகாரங்களுக்குதப் பேர் பெற்ற கோயிலாகும்.  இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோடகனூரில் அமைந்துள்ளது.

கதை 1
பிரம்ம ஞானம் கிட்டும்

மகாபாரதத்தில் கார்க்கோடகன் என்ற பாம்பினைக் காப்பாற்ற முனைந்த போது அப்பாம்பு நள மகராஜனைத் தீண்டி விட்டது. இதனால் நள மகாராஜன் ஏழரை ஆண்டு உருமாறி ஊர் மாறி சிரமப்பட்டான். கார்க்கோடகன் தனது நன்றிகெட்ட செயலை நினைத்து வருந்தி தான் பிரம்ம ஞானம் அடைய வேண்டும் என்று பெருமாளை நோக்கி தவமிருக்க இத்திருத்தலத்திற்கு வந்தது.

 தாமிரபரணியின் கரையில் உள்ள மண்ணாலும் சேற்றாலும் பெருமாள் சிலையைச் செய்து வைத்து தவம் இருந்தது. பெருமாள் கார்கோடகனின் தவத்தை மெச்சி தன் மாணவனாக ஏற்றுக்கொண்டு இத்திருத்தலத்தில் அதற்கு பிரம்ம ஞானத்தைப் போதித்தார்.  

பிரம்ம ஞானம் போதித்த தலம் என்பதால் இத் திருத்தலம் கல்வியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உரிய சிறப்பான தலமாக விளங்குகின்றது.  

தன் பிள்ளைகளின் குறை தீர்க்கும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

தன் பிள்ளைகளின் குறை தீர்க்கும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

திருமணத் தடை

நீங்கும் கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோயில் நாக தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்களுக்கும் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது.

வைரஸ் பாக்டீரியா போன்ற விஷ நுண்ணுயிரிகளாலும் கிருமிகளாலும் ஏற்பட்ட நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து கார்கோடகனுக்கு நற்கதி அளித்த பெருமாளை வணங்கிக் குணம் அடைகின்றனர்.  

நாக தோஷம் போக்கும் கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவில் | Kodaganallur Perumal Temple

மூலவர்

கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவிலின் இறைவன் பெயர் பிருகன் மாதவன்.  ப்ருகன் என்றால் உலகம். இவ் உலகத்தின் சிறந்த தலைவன் ப்ருகன் மாதவன் ஆவான். இவர் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் கருவறையில் காட்சி அளிக்கின்றார்.  

தீர்த்தங்கள்

தாமிரபரணி நதியே இங்குப் புண்ணிய தீர்த்தமாக விளங்குகின்றது. தட்சின கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.  இது தவிர மற்றொரு தீர்த்தத்தின் பெயர் கார்க்கோடக தீர்த்தம் ஆகும். அதாவது நாக தீர்த்தம்  

ஊர்ப்பெயர்

கார்க்கோடகனுக்கு முக்தி அளித்த ஊர் என்பதனால் கார்க்கோடகநல்லூர் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. பின்பு கோடகநல்லூர் என்று பெயர் மாறியது. இவ்வூர் குலசேகர பாண்டிய மன்னனால் வேத பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டதனால் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் என்றும கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டுள்ளது.

இவ் ஊருக்கு குலசேகர பாண்டியன், மதுரையை மீட்ட மாறவர்ம சுந்தரபாண்டியன் போன்றோர் நிவந்தங்கள் அளித்துள்ளனர். இக்கோயில் பாண்டிய நாட்டு கட்டட அமைப்பில் அமைந்துள்ளது. தாமிரபரணி தட்சண கங்கை என்று அழைக்கப்படுவதால் ஆதிசங்கரர் கோடகநல்லூரை தட்சிண சிருங்கேரி என்றார்.

திருக்காலிமேடு கோயில்: தொன்மைமிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம் !

திருக்காலிமேடு கோயில்: தொன்மைமிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம் !

 

மூலத் திருமேனி

கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் இக்கோவிலில் கருவறையில் பிருகன் மாதவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றார். மூலத் திருமேனி சுதையினால் ஆனது என்பதால் திருமஞ்சனம் கிடையாது. இவர் நீல நிறத் திருமேனியுடன் காட்சியளிக்கின்றார். உபய நாச்சியாருடனும் சக்கரத்தாழ்வாருடனும் இருக்கும் உற்சவருக்கு மட்டுமே மஞ்சனம் உண்டு  

திருச்சுற்றுத் தெய்வங்கள்

கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவிலிலும் மற்ற வைணவக் கோயில்களில் இருப்பது போல கருடன், நவநீதகிருஷ்ணன், ஹயக்ரீவர் ஆகியோருக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் இக்கோயிலில் தனிச் சன்னதிகள் உண்டு. ஆழ்வார்கள் வரிசையில் ஸ்ரீ ராமானுஜர் மற்றும் தேசிகாச்சாரியாரும்  எழுந்தருளி உள்ளனர்.

நாக தோஷம் போக்கும் கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவில் | Kodaganallur Perumal Temple

சர்ப்ப தோஷ பரிகாரம்

ஒருவர் ஜாதகத்தில் இரண்டு, நான்கு, 7 போன்ற இடங்களில் ராகு கேது கிரகங்கள் இருந்தால் அவருக்குக் குடும்ப ஸ்தானம், சுகஸ்தானம், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படும். எனவே இவர்கள் சர்ப்ப தோஷம நிவர்த்தி செய்து கொள்வதால் திருமணம் குழந்தை பாக்கியம், லௌகீக சுகம், வாகன சுகம் ஆகியன எவ்விதக் குறைவும் இல்லாமல் கிட்டும்.

இதற்கான சர்ப்ப தோஷ பரிகாரங்கள் சில முக்கியக் கோவில்களில் நடைபெறுகின்றன. அவற்றுள் ஒன்று இப்பெருமாள் கோவிலாகும்.   கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவிலில் வந்து சர்ப்ப சாந்தி செய்து கொள்பவர்களுக்குத் திருமணத் தாமதம் குறைகிறது. குழந்தைப்  பேறு விரைவில் கிடைக்கின்றது.  

 இது தவிர ராகு கேதுகளுக்குள் மற்ற கிரகங்கள் நடைபெற்று இருந்தால் அது காலசர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படும் இவர்களுக்கு 36 வயதுக்கு வரை திருமணம் நடைபெறாது. இது போன்ற தோஷமுள்ள  ஜாதகர்களும் இங்கு வந்து சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்டால் சிறப்பான திருமண வாழ்வு அமையும்.  

சர்ப்ப சாந்தி செய்முறை

நாக தோஷப் பரிகாரம் செய்பவர்கள் நாகர் சன்னதிக்கு வந்து விளக்கேற்றி வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். மஞ்சள் பொடியால் நாகர் உருவம் செய்து அதனைக் கையில் எடுத்துக் கொண்டு நாகர் சன்னதியைச் சுற்றி வர வேண்டும்.

நவதானியங்களைப் பரப்பி வைத்து ராகு கேது காயத்ரி மந்திரங்களைச் சொல்லி வணங்கிய பின்பு பெருமாள் சன்னதியை 9 முறை சுற்றிவர வேண்டும். பரிகாரம் செய்பவர் பெயரில் பெருமாள் சன்னதியில் அர்ச்சனை செய்யப்படும்.  

அதன் பிறகு நாகர் தீர்த்தத்திற்குப் போய் மூன்று முறை முழுக்குப் போட்டு விட்டு உடுத்தியிருந்த உடைகளை அங்கேயே  தண்ணீருக்குள் களைந்து விட்டு புதிய உடைகளை உடுத்திக் கொண்டு கரை ஏற வேண்டும். இதனால் சகல நாக தோஷங்களும் நிவர்த்தியாகி வம்சம் தழைக்கும்.  

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்: பக்தி, வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் சங்கமம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்: பக்தி, வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் சங்கமம்

கருடன் வழிபாடும் நாக வழிபாடும்

கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவிலில் நாகத்தின் தோல்வியைக் குறிக்கும் வகையில் கருட பூஜையும்  சிறப்பாக நடைபெறுகின்றது. இங்குக் கருடன் அமிர்த கலசத்துடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.   நாக வழிபாடு என்பது பழந்தமிழர்களின் குலதெய்வ வழிபாடாகும்.

நாகர்களைத் தம் முன்னோர்கள் என்று கருதிய குமரிக்கண்டத்து மக்கள் நாகத்தை ஆண் வடிவில் நாக ராஜாவாகவும் பெண் வடிவில் பிடாரியாகவும் தமது குல முன்னோராகக் கொண்டு வழிபட்டு வந்தனர். இதுவும் முன்னோர் வழிபாட்டை சேர்ந்ததாகும்.  

கிமு மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த பௌத்த சமயம் நாக வழிபாட்டை தம்முடைய சமய வழிபாடாக உட் கிரகித்துக் கொண்டது.  அஷ்ட நாகங்கள் புத்தர் உபதேசித்த தாமரை ஸ்லோகத்தை அருகில் இருந்து கேட்டதாகக் கதை புனைந்தனர்.  அஷ்ட நாகங்கள் புத்தர் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கின. இவற்றால் நாக வழிபாடு தொடர்ந்து நடந்தது.

அமோகசித்தியின் வாகனம் கருடன்

பௌத்த சமயம் யானை, சிங்கம், கருடன், மயில் போன்றவற்றைத் தமது  சமய குறியீடுகளாகக் கொண்டு அவற்றைச் சிறந்த பண்புகளுக்கு அடையாளச் சின்னங்கள் ஆக்கியது.  இச்சின்னங்கள் பௌத்த மடாலயங்களில் நிறுவப்பட்டு மக்களின் போற்றுதலுக்கு உரியனவாயின. 

பின்னர் இங்குப் பரவிய வைதிக சமயங்கள் யானை, சிங்கம், கருடன், மயில், தமது தெய்வங்களுக்கு உரியனவாக மாற்றி கொண்டன.  இச்சின்னங்கள்  தொடர்ந்து சிறப்புப் பெற்றன. பௌத்த சமயத்தில் கருடன் புத்தர் நிலை அடைந்த அமோகசித்தியின் வாகனமாகக் கொள்ளப்பட்டது.

புத்தரை கருடன் வடிவாகவே பௌத்தர்கள் போற்றினர். புராணங்கள் கௌதம புத்தரை பெருமாளின் அவதாரமாக மாற்றின. புத்தரின் வாகனமான கருடனும் பெருமாளின் வாகனமாகப் போற்றும் மரபு வைணவ சமயத்தில் தொடர்ந்தது.  

நாகர் -  கருடப் பூசல்

நாகம் தென்னிந்தியரின் சமயச் சின்னமாக விளங்கியதால்  வட இந்தியாவின் ஆரிய வைதீகச் சமயங்கள் நாகத்தை இழிவானதாகவும் கருடனை உயர்வானதாகவும் போற்றின. இது இனத்தின் அடிப்படையிலான சமயப் பூசல் ஆகும். புராணங்களின் மூலம் இக்கருத்தைப் பரப்பின.

கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் புனையப்பட்ட கதைகளில் தென்னிந்தியாவில் வழிபடப்பட்ட நாகர்கள் கருடனால் தோற்கடிக்கப்பட்டனர்.  நாக சதுர்த்தியின் சிறப்பு மாறி கருட பஞ்சமி சிறப்பு பெறலாயிற்று.

வேளாண் குடியினரின் நண்பன் நாகம் என்ற நிலை மாறி மக்களின் பகைவன் நாகம் என்ற கருத்து பரப்பப்பட்டது. பௌத்தர்கள் நாகம் கருடன் இரண்டையும் போற்றினர். ஆனால் வைதீக சமயங்கள் இரண்டு க்கும் இடையே பகை உருவாக்கிக் கருடனை வெற்றி வீரன் ஆக்கின.  

நிறைவு  

பழந்தமிழரின்  சமயத்தில் நாகர் வழிபாட்டில் கருடன் கிடையாது. கருடனை அறிமுகம் செய்தது பௌத்த சமயம். நாகத்தை விட கருடன் உயர்ந்தது என்றது வைணவ சமயம்.  பௌத்தர்களால் போற்றப்பட்ட கருடன்  பக்தி இயக்கக் காலத்தில் வைணவ சமயத்தில் தொடர்ந்து வழிபடு தகுதியைப் பெற்றது.

பௌத்த மடாலயங்கள் வைணவத் திருக்கோயில்களாக மாறிய போது அங்கிருந்த கருடன்  கருடாழ்வாராகப் போற்றப்பட்டார். மக்கள் தொடர்ந்து நாகத்தையும் கருடனையும் வழக்கம் போல் வணங்கி வந்தனர். வழிபாடுகள் மாறவில்லை,  கதைகளும் காரணங்களும்  மாறின.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US