மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ளும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்
மதுரை அரசி என்றால் அம்மா மீனாட்சி அம்மா தான். மதுரை பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்தவள் தான் தாய் மீனாட்சி. இவள் மதுரையில் பிறந்து, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவர்களை போரில் வென்று பிறகு சிவபெருமானை திருமணம் முடித்து கொண்டார்.
அப்படியாக, சித்திரை மாதம் அம்பாளுக்கு மதுரையில் திருமணம் வைபோகம் திருவிழா போல் நடைபெறும். இந்தாண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழா நாட்களில் காலை, மாலை என்று இரு வேளையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்த சித்திரை திருவிழாவில் பல்வேறு முக்கிய சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதில், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் வைபவம் மே 6-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சி தாயாருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்குவார்கள். அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக, சிவபெருமானுடன் அம்பாள் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மே 8-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இந்த திருமணத்தில் பங்கு கொள்ள திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தேவானையுடனும், பவளகனிவாய் பெருமாளும் வந்து பங்கேற்பார்கள். அது மட்டும் அல்லாமல் இந்த முக்கிய விழாவில் பல பெண்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்ப நலன் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.
மறுநாள் (9-ந்தேதி) மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். அதைத்தொடர்ந்து அழகர்கோவிலில் நடக்கும் சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 10-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ மதுரையை நோக்கி கோலாகலமாக புறப்படுகிறார். 18 கி.மீ. தூரம் வரும் அவர், வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிறகு மே 11-ந்தேதி மூன்று மாவடியில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெறும். அதோடு மே 12-ந்தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ, கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார்.
அதை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் அவரை குளிர்விக்க தீர்த்தவாரியும் நடக்கிறது. அடுத்த நாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்குவார். பின்னர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இந்த சேவை எல்லாம் முடித்து மே 15-ந்தேதி அழகர் மலைக்கு புறப்படுகிறார். சித்திரை திருவிழாவிற்காக பல லட்ச பக்தர்கள் காத்திருக்கின்றனர். திருவிழாவின் பொழுது மதுரையே வண்ண கோலமாக காட்சி கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |