மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அதற்கான தீர்வும் பரிகாரங்களும்
ஜோதிடத்தில் பெண்களுக்கு முக்கியமாக பார்க்கக்கூடிய தோஷங்களில் இந்த மாங்கல்ய தோஷம் ஒன்று. இதை பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும் முக்கியமான ஒன்றாகும். மாங்கல்ய தோஷமானது, சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணிகளால், அந்த பெண்ணிற்கு திருமணம் தாமதத்தை உண்டு செய்யும்.
அப்படியாக, இந்த மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அதற்கான தீர்வும் பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானத்தை குறிக்கக்கூடிய இடம் ஆகும்.
இதில் சுரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் அமைந்து இருப்பது அவ்வளவு சிறப்பானது அல்ல. 8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும்.
அதோடு அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தாலும் தோஷம் விலகும். இவ்வாறு அமைப்புகள் கொண்டவர்கள், ஒரு புதிய பொட்டு தாலி ஒன்றை தங்கத்தில் வாங்கி அவர்களது குலதெய்வ கோயில் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை, ஒரு கோயிலில் வைத்தோ அல்லது தங்களது வீட்டில் வைத்தோ ஒரு சுமங்கலிப் பெண் கொண்டு இந்த மங்கள தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற பெண்ணிற்கு கட்ட வேண்டும்.
பிறகு, இரண்டு மணி நேரம் கழித்து அந்த தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணை மீண்டும் அமர செய்து தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த மாங்கல்யத்தை அவிழ்த்து விடவேண்டும்.
அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும். அதே போல் அந்த தோஷம் கழிக்கும் பொழுது அந்த பெண் அணிந்து இருந்த ஆடையை மீண்டும் அந்த பெண் உடுத்த கூடாது. வெளியே போட்டு விட வேண்டும்.
அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண் தெய்வங்களுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து காணிக்கையாக கொடுத்து விட வேண்டும்.
அல்லது அந்த தாலியை கோயில் உண்டியலில் போட்டு விடலாம். இந்த தோஷத்தை கழிக்கும் நாள் செவ்வாய் வெள்ளி இல்லாமல் இருப்பது நன்மை அளிக்கும். இவ்வாறு செய்ய திருமண தாமதத்தை சந்திக்கும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும், அதோடு அவர்களின் தோஷம் விலகி கணவனோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலை உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |