மருதமலை முருகன் கோவிலுக்கு போறீங்களா.. இதை தெரிந்து கொள்ளுங்கள்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில் சமீபத்தில் முக்கிய அறிவிப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது, மருதமலை முருகன் கோவிலுக்கு செல்பவர்கள் மொபைல் போன்கள் எடுத்து செல்ல மார்ச் 10ஆம் தேதி அன்று முதல் தடை விதிக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கோவை மாவட்டம் மருதமலை மீது அமைந்திருக்கின்ற மருதாச்சல மூர்த்தி முருகன் கோவில் தமிழகத்தில் உள்ள முக்கியமான பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
இங்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மொபைல் போனை எடுத்துச் சொல்ல கூடாது என்று புதிதாக ஒரு கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்கள்.

அதாவது, மருதமலை கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு ராஜகோபுரத்தின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் கோவிலின் பாரம்பரியத்தையும், ஆன்மீக சூழலையும் பக்தர்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் பக்தர்கள் மொபைல் போன்கள் எடுத்து வர தடை விதிக்க தீர்மானித்துள்ளது.
கோவில் நிர்வாகம் அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலரும் வீடியோ, போட்டோ எடுப்பதாலும் கோவிலுக்குள் மொபைல் போனில் பேசுவதாலும் அங்குள்ள ஆன்மீக சூழல் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதிலும், அதிக அளவிலான பக்தர்கள் கூடும் நேரத்தில் முக்கியமான விழாக்களின் பொழுது இது அதிகரிப்பதால் இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதமலை கோவிலில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்:
கோவில் வளாகத்திற்குள் யாரும் மொபைல் போன்களை பயன்படுத்தவும், பேசவோ புகைப்படம் எடுக்கவும் கூடாது. ராஜகோபுரம் நுழைவாயில் துவங்கி உள்ளே உள்ள ஆதிமூலவர் சுப்பிரமணிய சுவாமி பாம்பாட்டி சித்தர் சன்னதிகளுக்கும் இந்த தடை பொருந்தும்.
கோவில் ராஜகோபுரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக பக்தர்கள் தங்களுடைய மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் நுழைப்பகுதியில் இருக்கும் ஊழியர்களுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டினால் இனி வரும் காலங்களில் முக்கிய திருவிழாக்கள் மற்றும் வார இறுதி நாட்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நேரங்களில் கூட்ட நெரிசல் இன்றி சுமூகமாக சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |