பூஜையில் நைவேத்தியமாக வைக்கும் பிரசாதத்தை எப்பொழுது எடுக்க வேண்டும் ?
நம்முடைய இந்து மதத்தில் இறைவழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றோம். நமக்கு எவ்வளவு வேலை பளு இருந்தாலும் காலை அல்லது மாலை வேளைகளில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி கட்டாயம் குடும்பமாக வழிபாடு செய்து விடுவோம்.
அந்த வகையில் நாம் சுவாமிக்கு ஏதேனும் விஷேச நாட்கள் அல்லது வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் நம்மால் முடிந்த நைவேத்தியம் படைப்பதுண்டு.
காரணம், நைவேத்தியம் படைக்காமல் செய்யப்படும் பூஜை பூர்த்தி ஆகாது என்பது நம்பிக்கை. அதனால்பாயசம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் என பலவகையான உணவுகளை நாம் நைவேத்தியமாக வைத்து பூஜை செய்வோம்.
இதை தயார் செய்ய முடியாதவர்கள் எளிமையாக பால், வாழைப்பழம், கற்கண்டு, பேரிச்சம்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்து விடுவார்கள். அதே போல் நைவேத்தியம் படைக்கும் பொழுது நாம் சில முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு படைக்கும் உணவுகளில் கட்டாயம் வெங்காயம், பூண்டு சேர்க்கக் கூடாது. சாத்வீகமான உணவுகளை மட்டுமே நாம் படைக்க வேண்டும். அதே போல் படைக்கும் நைவேத்தியம் எப்பொழுதும் தனியாக ஒரு இலையில் வைக்கவேண்டும்.
அல்லது பூஜைக்கு என்றும் தனியே வைத்திருக்கும் பாத்திரங்களில் தான் வைத்து வழிபாடு செய்யவேண்டும். அதே போல் பிரசாதத்தை வெறும் தரையில் இலை அல்லது பாத்திரம் வைத்து படைக்கக் கூடாது. ஒரு சிறிய துணி விரித்து அல்லது சிறிய பலகையில் வைத்து படைக்க வேண்டும்.
அப்படியாக, நாம் நைவேத்தியம் படைப்பதில் எப்படி சில வழிமுறைகள் பின்பற்றுகின்றமோ, அதே போல் சுவாமிக்கு படைத்த நெய்வேத்தியதை எடுக்கும் பொழுதும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள்.
அதாவது நாம் கடவுளுக்கு படைக்கும் நைவேத்தியம் உடனே அகற்றி விடவும் கூடாது. அதே போல் நீண்ட நேரமும் நாம் வைத்திருக்கவும் கூடாது. இவ்வாறு செய்யும் பொழுது வீடுகளில் எதிர்மறை ஆற்றல் சூழ்கிறது.
சிலர் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்து முடித்த பிறகு உடனே அதை குடும்பத்தினருடன் பரிமாறி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு செய்யாமல் கடவுளுக்கு முன் 15 முதல் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு தான் நாம் அதை எடுத்து குடும்பங்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |