இன்று வைகாசி விசாகம் அன்று சொல்ல வேண்டிய முருகப்பெருமானின் திருப்புகழ்
முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு வாய்ந்த நாட்கள் இருந்தாலும், வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர தினம் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தான் முருகப்பெருமான் அவதரித்தார் என்பது புராணம்.
விசாகம் என்றால்" “கிளைத்து வருவது” என்பது பொருள். அதாவது, சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப்பெருமான் ஒரு கிளையாக அவதரித்தார் என்பதை இவை குறிக்கிறது.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த நாளில் நாம் முருகப்பெருமானை மனதார விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு வாழ்க்கையில் நிறைவான வளமும் செல்வமும் கிடைக்கும்.
மேலும், இன்றைய நாள் நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்கள் முருகப்பெருமானை கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து வழிபாடு செய்யும் பொழுது அவர்களுக்கு விரைவில் முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பல யுகங்களாக நம்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முருகப்பெருமான் அவதரித்த இந்த வைகாசி விசாக நாளில் நாம் முருகப்பெருமானின் அருள் கிடைக்க பாட வேண்டிய திருப்புகழ் பற்றி பார்ப்போம்.
திருப்புகழ்:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே .
அருணகிரிநாதர் முருகப்பெருமான் குழந்தை ரூபத்தில் வந்து தன் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்பதற்காக பாடிய பாடல் இது. இந்த பாடலை எவர் ஒருவர் மனதார, முருகரை படுகிறார்களோ அவர்களுக்கு விரைவில் திருமணமும் முருகன் அருளால் கட்டாயம் குழந்தை வரமும் கிடைக்கும்.
ஆக, கடந்து செல்லும் கஷ்டங்களை நினைத்து துவண்டு போகாமல் முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்தால் முருகன் அருளால் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்களை காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |