திருவாரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான கோயில்கள்
திருவாரூர் என்றால் தேர் தான் நமக்கு நினைவிற்கு வரும்.இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டு பாடல்பெற்ற தலமாதலால் 'திரு' சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
திருவாரூர் ஆழி தேர் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.பிரமாண்ட தேரில் தியாகேச பவனி வருவதை பார்ப்பதற்கே கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அப்படியாக திருவாரூரில் பிரசித்தி பெற்ற கோயில்கள் யாவை.
அவற்றின் வரலாறுகள் பற்றி பார்ப்போம்.
1.அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,திருவாரூர்
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் 1000 முதல் 2000 ஆண்டு மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும்.இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் பெற்றோர்கள் தங்களுடைய மகன் மகள் அவர்கள் ஜாதகம் வந்து வைத்து பூஜை செய்தால் அவர்களுடைய திருமண தடை விலகி விரைவில் திருமணம் நாடாகும் என்பது ஐதீகம்.
இங்குள்ள அம்பிகை இறைவனையே தன்னுடைய கணவனாக வேண்டும் என்று எண்ணி தவம் இருந்து திருமணம் செய்த தலம் என்ற பெருமை பெற்றது,அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சொர்ணபுரீஸ்வரர். மந்தாரவனேஸ்வரர் என்பது இறைவனின் இன்னொரு பெயர்.
இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம்.
சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
வழிபாட்டு நேரம்
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இடம்
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் ஆண்டான்கோவில் அஞ்சல் வலங்கைமான் திருவாரூர் மாவட்டம்- 612804
2.அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்,திருவாரூர்
திருவாரூர் என்றால் தியாகராஜர் கோயில் தான் எல்லோருக்கும் நினைவில் வரும்.தமிழகத்தில் புகழ் பெற்ற தலங்களில் இத்தலம் மிக முக்கியமான ஒன்றாகும்.இக்கோயிலை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் முழுமையாக ஒரு நாள் வேண்டும்.ஆரூரரா தியாகேச என்று போற்றி பாடாத நா இல்லை.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில்.தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் மஹாராஜா என்று பொருள். தியாகராஜர் கோயில்களின் கோயில் என விளங்குகிறது.
மேலும்,இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கோயிலில் 9 ராஜ கோபுரங்கள், அவற்றில் 80 விமானங்கள், 12 பெரிய மதில்களும், 13 மண்டபங்களும் என தல அமைப்பு பரந்து விரிந்துள்ளது.
இத்தலத்திற்கு உட்பட்டு 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனம், கோவில் தலத்தை சுற்றிலும் 365 லிங்கங்கள், நூற்றுன்னும் அதிகமான சன்னிதிகள், 80க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் என கோவிலைச் சுற்றிலும் வியப்பளிக்கக் கூடிய வகையில் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.
அடுத்தபடியாக இத்தல தியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இந்திரன் வழிபட்ட சிறிய மரகதலிங்கத்திற்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது
. இந்த லிங்கத்தின் மேல் வெள்ளிக்குவளை அமைத்து மூலவருக்கு அருகில் வைக்கப்படுகிறது. அபிஷேக நேரத்தைத் தவிற பிற நேரங்களில் அச்சை வெளியில் தென்படுவதில்லை.
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி முதல் 12 வரி,மாலை 4 மணி முதல் 9 மணி வரி
இடம்
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்,திருவாரூர்-610001
3.அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,திருவாரூர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம் ஆகும்.இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார்.இவருக்கு பின்னால் சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசனம் செய்யமுடியும். மணலால் ஆன லிங்கம் ஆனதால் அமாவாசை அன்றுமட்டும்சாம்பிராணி தைலம் சாத்தி அபிஷேகம், மற்ற நாட்களில் குவளை சாத்தி அபிஷேகம் நடைபெறுகிறது.
கோச்செங்கட் சோழன் மன்னரால் திருப்பணி செய்யப்பட்ட மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். நவகோள்களும் தோஷம் நீங்கி பூசித்துப் பேறு பெற்றமையால் கோளிலி என வழங்கப்பெறுகிறது. இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. விநாயகர் தியாக விநாயகர்.
முருகன் சுந்தரவடிவேலன். சுந்தரமூர்த்திகளுக்குக் குண்டையூர்கிழார் தந்த நெல்மலையைப் பூதங்களைக் கொண்டு திருவாரூரில் சேர்ப்பித்த அற்புதத்தலம். தீர்த்தம் முத்திநதியாகிய சந்திரநதி, மணிகர்ணிகை, இந்திர தீர்த்தம், அகத்தியதீர்த்தம், விநாயகதீர்த்தம், சக்தி தீர்த்தம் என்பன. விருட்சம் தேற்றாமரம்.
பிரமதேவர், திருமால், இந்திரன், அகத்தியன்,முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகோள்கள், ஒமகாந்தன் முதலியோர் வழிபட்ட தலம் . இது தருமை ஆதீன திருக்கோயில்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
இடம்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம் 610204.
4.அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்,திருவாரூர்
திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.
இராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. கொடிமரத்தின்கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். அடுத்துள்ள மண்டபத்தில் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், சம்பந்தர், அப்பர், நாகர், சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், அகஸ்தீஸ்வரர், சுபகமகரிஷி, பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
கோயிலின் இடது புறம் வண்டமர் பூங்குழலி அம்மன் சன்னதியும், குமார புவனேசுவரர் சன்னதியும் உள்ளது. குமார புனேசுவரர் சன்னதியின் மூலவராக லிங்கத்திருமேனி உள்ளது.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 11.30 வரை,மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை
5.அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் குடவாசல்
திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.அதாவது இங்கு பெருமாள் விரும்பி கோயில் கொண்டுள்ள தலம் என்ற பல பெருமைகள் கொண்டது.
இக்கோயிலில் உள்ள யோக நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.அதாவது இவருக்கு பிரதோஷ காலங்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும் கல்வியில் சிறக்க ஹயக்ரீவருக்கு இங்கு சந்நதி உண்டு.இவரை படிப்பில் சிறக்க வியாழன் அன்று வழிபாடு செய்ய மந்தமான பிள்ளைகளும் சிறந்து விளங்குவார்கள்.மேலும் இங்கு இருக்கும் ஆஞ்சிநேயர் காரிய சித்திக்காக நூதன முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுஇருக்கிறார்.
வழிபாட்டி நேரம்
காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |