கருட புராணம்: மரணத்திற்குப் பிறகு ஒரு ஆன்மா எவ்வளவு நாள் வீட்டில் இருக்கும் தெரியுமா ?
இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் கட்டாயம் ஒருநாள் மரணம் நிச்சயம் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் இங்கு இருக்க கூடிய ஒரு மிகப்பெரிய கேள்வி மரணத்திற்குப் பிறகு நமக்கு என்ன நடக்கிறது ? இதைப்பற்றி கருட புராணம் நமக்கு மிகப்பெரிய அளவில் ஒரு தகவல்களை கொடுக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
இந்து மதத்தில் உள்ள 18 புராணங்களில் கருட புராணமும் ஒன்று. இதில் ஒருவருக்கு மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்? அந்த ஆன்மா பயணம் மற்றும் சில விஷயங்களை பற்றி நமக்கு அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் கருட புராணத்தில் ஒருவரின் ஆன்மா இறந்த பிறகு உடனடியாக வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. உடல் அழிந்தாலும் ஆன்மாவானது குடும்பத்தினர் மற்றும் வீட்டின் மீதான பற்றுதல் காரணமாக சில நாட்கள் அங்கேயே சுற்றி வரும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், ஒருவர் இறந்த பிறகும் அந்த ஆன்மாவை பிடித்து எமதூதர்கள் எமலோகத்திற்கு அழைத்து செல்வார்களாம். அங்கு ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் சித்திரகுப்தனால் சரிபார்க்கப்படும். பிறகு அந்த ஆன்மா உடனடியாக அவர்களுடைய சொந்த வீட்டிற்கு கொண்டு வந்து விடப்படுகிறது. இந்த நிகழ்வு மரணம் முடிந்து 24 மணி நேரத்தில் முடிந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
வீட்டிற்கு திரும்பும் ஆன்மா தன் உடலை எரித்த சாம்பல் அல்லது புதைத்த இடத்தில் அருகிலும் தன் வாழ்ந்த வீட்டை சுற்றியும் வந்து கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த நாட்களில் ஆன்மாவிற்கு மிகச் சிறிய அளவிலான உடல் அதாவது சூட்சும சரீரம் மட்டுமே இருக்குமாம்.
குடும்பத்தினர் இந்த காலகட்டங்களில் செய்யும் பிண்ட தானம் மற்றும் கிரியைகள் அந்த ஆன்மாவிற்கு உணவாகவும் அடுத்த கட்ட பயணத்திற்கு ஆற்றல் ஆகவும் அமைகிறது. மேலும், இந்த நிகழ்வு ஒரு ஆன்மா மரணம் அடைந்து பத்து நாட்கள் வரை நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள்.
அதாவது, மரணம் நடந்து 11 மற்றும் 12 ஆம் நாட்களில் செய்யப்படும் சடங்குகள் தானம் மற்றும் பிற காரியங்கள் மூலம் பசியை ஆற்றிக்கொண்டு பூலோக பற்றுக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடத் தொடங்குகிறது, இந்த காலகட்டம் ஆன்மா எமலோக பயணத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கக் கூடியதாகும்.

இந்த காலகட்டத்தில் நாம் செய்யக்கூடிய பூஜைகள் மற்றும் மாலைகள், ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தின் துணைகொண்டு ஆன்மா எமலோக பயணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளுமாம். புராணத்தின் அடிப்படையில் மரணத்திற்கு பிறகு 13 வது நாள் ஆன்மா தன்னுடைய வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறது.
வெறும் வீட்டை விட்டு மட்டுமல்ல நிரந்தரமாக பூலோகத்தை விட்டும் அது விலகிச் செல்கிறது. 13ஆம் நாள் செய்யப்படும் சடங்கிற்கு பிறகு எமதூதர்கள் ஆன்மாவை எமலோகத்தை நோக்கி அழைத்து செல்ல தொடங்குகிறார்கள்.
இவ்வாறு பயணம் சுமார் 47 நாட்கள் அல்லது சில மத நூல்களின் அடிப்படையில் ஒரு வருடம் வரை நீடித்து அதன் பிறகு அடுத்த நிலையை ஆன்மா அடையும் என்று சொல்கிறார்கள். இதனால்தான் 13 நாட்கள் வரை வீட்டில் தீட்டு காக்கப்பட்டு சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆதலால் மரணம் நிகழ்ந்த வீட்டில் 13 நாட்கள் தூய்மை ஆக இருக்க வேண்டும். அதிகாலை எழுந்து கட்டாயம் குளிக்க வேண்டும். முடிந்தவரை இரவில் அழுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.
காரணம், இறந்தவரை அது மீண்டும் மீண்டும் அழைப்பதற்கு சமமாகும். அவ்வாறு செய்வது இறந்தவரின் ஆன்மாவுக்கு மன அழுத்தத்தையும் துன்பத்தை கொடுக்கக் கூடியதாகவும் இருக்குமாம். ஆதலால் 13 நாட்கள் இறந்தவர்களை மனதார நினைத்து அவர்கள் ஆன்மா முக்தி அடைய வேண்டும் என்று பூஜைகளும் பிரார்த்தனையும் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |