2026: காரடையான் விரதம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?
இந்து மதத்தில் மிகவும் முக்கியமான விரதமாக காரடையான் நோன்பு இருக்கிறது. அதாவது மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் பொழுது இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. சூரிய பகவான் அந்த காலத்தில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுவார்.
இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்களுடைய கணவனின் உடல் ஆரோக்கியம் குடும்பத்தின் அமைதியை வேண்டி கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொண்டு விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதே போல் திருமணமாகாத பெண்கள் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும் கைகளில் மஞ்சள் கயிறு கட்டி விரதம் இருப்பார்கள்.

காரடையான் நோன்பு சிறப்புகள்:
இந்த வழிபாட்டில் கார அடை நெய் வைத்தியமாக படைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதால் இந்த விரதத்திற்கு காரடையான் நோன்பு என்று பெயர் வந்தது. இந்த நாளில் பெண்கள் பார்வதி தேவி அல்லது காமாட்சி தேவி வழிபாடு செய்வது வழக்கம்.
அதாவது கணவன் மீது இருக்கக்கூடிய அன்பினால் எமதர்மராஜாவிடமிருந்து தன்னுடைய கணவன் சத்தியவானின் உயிரை மீட்பதற்காக சாவித்திரி கடைப்பிடித்த நோன்பு இதுவாகும். அதனால் இந்த விரதத்தை நாம் கடைபிடிக்கும் பொழுது கணவன் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியமும், குடும்ப அமைதியும், ஒற்றுமையும் கிடைக்கிறது.
இந்த நாளில் அன்னை கௌரிக்கு அரிசி மாவு, வெள்ளம், கருப்பு காராமணி ஆகியவற்றை பயன்படுத்தி இனிப்பு மற்றும் காரம் என இருவகையான அடைகள் செய்து படைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. மார்ச் 14 காலை 6. 48 மணிக்கு தொடங்கி மார்ச் 15 அதிகாலை 1.08 மணி வரை இந்த விரதம் கடைபிடிக்க வேண்டும். அன்றைய தினம் சுபமுகூர்த்த நேரத்தில் பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.

அன்று செய்யவேண்டியவை:
காரடையான் விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து மஞ்சள் பூசி குளித்துவிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் கடைபிடிக்க முடிந்தவர்கள் கடைபிடிக்கலாம்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் புளிப்பு, உப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மேலும், வீடுகளில் காமாட்சி அம்மன் படத்திற்கு முன்பு மஞ்சள், சல்லடை வைத்து விளக்கேற்றி வழிபாடுகள் மற்றும் பூஜைகள் செய்ய வேண்டும். பிறகு மஞ்சள் சரடை எடுத்து கணவரின் கைகளால் கொடுத்து கட்டிக் கொள்ளலாம்.
இந்த நாளில் அக்கம் பக்கத்தில் இருக்கக்கூடிய பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். இதனால் நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மஞ்சள். குங்குமம் பூ, தாலி சரடு ஆகியவற்றையும் இந்த நாளில் தானம் செய்யலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |