செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இன்று இந்த வழிபாடு செய்ய தவறாதீர்கள்
விவாஹ பஞ்சமி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் திருமண தாமதத்தையும் தடைகளையும் அகற்றக் கூடிய ஒரு முக்கிய வழிபாட்டுக்குரிய நாளாக இருக்கிறது. இந்த நாளில் ஒருவர் மனதார வழிபாடு செய்யும்பொழுது அவர்கள் நினைத்த கணவன் மனைவி அவர்களுக்கு துணையாக கிடைப்பார்கள் என்பது ஐதீகம்.
அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு விவாஹ பஞ்சமி நவம்பர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் இந்த நாள் வருவது கூடுதல் விசேஷமாகும்.
ஆக இந்த நாளில் செவ்வாய் தோஷத்தால் திருமண தாமதத்தை சந்திப்பவர்கள் அல்லது ஜாதகத்தில் ஏதேனும் கிரக பலவீனத்தால் திருமண தாமதம் சந்தித்து கொண்டு இருப்பவர்கள் இந்த நாளில் கட்டாயம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றங்களை பெறலாம். ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது ஒவ்வொரு விசேஷங்களை கொண்டு உள்ளது.

அப்படியாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பஞ்சமி திதியானது விவாஹ பஞ்சமி என கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் ராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு தெய்வத்தின் திருமணம் நடைபெற்ற இந்த தினத்தை போற்றும் வகையில் தான் விவாஹ பஞ்சமி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் திருமணத்தில் தாமதம் மற்றும் தடைகள் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் கட்டாயமாக வழிபாடு செய்ய அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அதே போல் கணவன் மனைவி இடையே பிரச்சனை இருந்தால் அதுவும் விலகி ஒரு நல்ல வாழ்க்கை அவர்களுக்கு அமையும்.
வழிபாட்டு முறைகள்:
விவாஹ பஞ்சமி நாளில் திருமண தடைகளை சந்திப்பவர்கள் கட்டாயமாக வாழை மரத்தை வழிபாடு செய்வது அவர்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும். அதாவது ஜோதிட ரீதியாக வாழைமரம் என்பது குருபகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தீர்க்கக்கூடியதாகும். மேலும், குரு பகவான் தான் ஒருவருடைய திருமணம் குழந்தை கல்வி வேலை ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறார்.
ஆக திருமண தடை விலக குரு பகவானை அவர்கள் வழிபாடு செய்வது என்பது மிக முக்கியமாகும். அதேபோல் குழந்தை பிறப்பதில் தாமதத்தை சந்திப்பவர்களும் கட்டாயமாக குரு பகவானை வழிபாடு செய்வது அவசியம். அதனால் விவாஹ பஞ்சமி அன்று வாழை மரத்திற்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி வைத்து அதை மூன்று முறை வலம் வந்து சுற்றி வழிபாடு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

ராமர் சீதை வழிபாடு:
விவாஹ பஞ்சமி நாள் என்று தான் ராமர் சீதைக்கு திருமணம் நடைபெற்றதால் இந்த நாளில் இவர்கள் இருவரையும் மனதார வழிபாடு செய்வது நல்ல துணை கிடைப்பதற்கான ஆசிர்வாதத்தை பெற்று கொடுக்கும்.
மேலும் சீதாதேவிக்கு சிவப்பு நிற வஸ்திரம் அல்லது ரவிக்கை படைத்து, வளையல்கள் மஞ்சள், குங்குமம் பொட்டு பிற மங்களப் பொருட்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலமாக திருமண வாய்ப்புகள் வெகு விரைவில் உங்களுக்கு கூடி வரும். அதோடு சீதாதேவிக்கு படைத்த மங்களப் பொருட்களை சுமங்கலி பெண்ணிற்கு தானமாக வழங்குவது நன்மை தரும்.
துளசி தேவி வழிபாடு:
விவாஹ பஞ்சமி நாளில் வீடுகளில் வைத்திருக்கக்கூடிய துளசி அல்லது அரச மரம் அருகில் விளக்கேற்றி மனதார தங்களுடைய பிரார்த்தனை வைப்பது அவர்களுக்கு நல்ல ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும். இவ்வாறு செய்யும் பொழுது அவர்களுக்கு பெருமாள் மற்றும் லக்ஷ்மி தேவியின் முழு அருள் கிடைத்து திருமணத்தில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகும்.
ஆக, ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது அதனால் இந்த திருமண வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சனைகள் விலகவும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வருவதற்கு இன்றைய தினத்தை தவற விடாமல் பயன்படுத்தி வழிபாடு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |