எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட பகவத் கீதை சொல்லும் வழிகள்
மனிதனாக பிறந்தால் அவன் கட்டாயம் கால சூழ்நிலையால் பயம், பதட்டம், வெறுப்பு, கோபம், துரோகம், வலி, இழப்புகள் இவை அனைத்தையும் சந்தித்து கடந்தாக வேண்டும்.
ஆனால், இவை எல்லாம் கடந்து செல்லும் முன் அவன் பல வேதனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அப்படியாக, மனிதன் சந்திக்கும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழ பகவத் கீதை சொல்லும் வழிகள் பற்றிப் பார்ப்போம்.
1. நாம் கட்டாயமாக ஒரு இயல்பான விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். மனம் அது அலைபாயும் என்றாலும் அதை கட்டுக்குள் கொண்டு வந்து கடமையை செய்து பற்றற்ற வாழ்வை வாழ பழக வேண்டும். இதற்கு நம் மனதை தயார் செய்யவேண்டும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
2. இந்த பூமியில் மனிதர்களுடைய வேலை அவர்களின் கடமையை செய்வது மட்டுமே ஆகும். அதற்கான பலனை அவர்கள் ஒரு பொழுதும் எதிர்ப்பார்க்காமல் இருக்க வேண்டும். மனிதனுக்கு எதிர்பார்ப்புகள் பல விதமான வேதனையை கொடுத்து விடும்.
இந்த கடமையை சொந்தங்களுடன் எவ்வாறு செய்வது என்று சந்தேகங்கள் இருக்கும். அதாவது உறவுகளுக்கு தேவையான அன்பும், உதவியும் செய்து விடுவது நம் கடமை ஆனால் அதில் எதிர்பார்ப்புகள் கொண்டால் ஏமாற்றம் தான் கிடைக்கும். ஆக, கடமையை தவறாது செய்தவன் வீழ்ந்து போகமாட்டான் என்கிறார் கிருஷ்ணர்.
3. நாம் எப்பொழுதும் நிகழ்காலத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். எதிர்காலம் என்பது மாயை அதை சிந்தித்து கொண்டு இருப்பதால் எந்த ஒரு பலனும் கிடைப்பது இல்லை. இன்று நடப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியை கொடுக்கும்.
4. மனிதன் மனநிலையை ஒருமுகப்படுத்த இருக்கக்கூடிய முக்கியமான விஷயம் தியானம். தியானம் செய்வதால் நாம் உடலும் மனமும் அமைதிப்பெரும். சிந்தனை அலைகள் கட்டுக்குள் வரும்.
5. மேலும், மனிதனின் முதல் எதிரி அவனின் மனம் தான். அந்த மனதை அவன் அலைபாய விட்டால் அவனே அவனுக்கு முதல் எதிரி ஆகிவிடுகின்றான். அதனால் சிந்தையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |