2026: ஆடி முதல்வெள்ளி விரதம் இருந்தால் எப்பேர்ப்பட்ட கிரகதோஷமும் விலகுமாம்
ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. அதில் மாடி வெள்ளிக்கிழமை வழிபாடு மிகச்சிறந்த விசேஷத்தை நமக்கு பெற்றுக் கொடுக்கும். மேலும், சந்திரனும் மகாலட்சுமியும் பாற்கடலில் தோன்றியவர்கள்.
ஆதலால், சந்திர சகோதரி என்று மகாலட்சுமியை அழைப்பார்கள். மேலும், சந்திர பகவான் கடக ராசிக்கு உச்சம் அடையும் மாதம் தான் ஆடி மாதமாகும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு மிக உகந்த நாளாகும்.

அதிலும், 2026 ஆம் வருடம் ஆடி மாதம் முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளும் பெண்கள் விரதம் இருந்து தங்களுடைய குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்து கொள்வார்கள். மேலும், இதனை சுக்கிர வார விரதம் என்றும் சொல்வது உண்டு.
இவ்வாறு ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் நமக்கு கிரக தோஷங்கள் விலகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் நீங்கும்.

கடன் பிரச்சனை தீர்வதற்கான வழி பிறக்கும். நீண்ட நாட்கள் நம்மை வாட்டி வதைத்த நோயிலிருந்து விடுபடுவோம். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும், இன்று எல்லா பெருமாள் கோயில்களிலும் தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். உற்சவருக்கு மாலை நேரத்தில் கண்ணாடி அறைசேவை நடைபெறும்.
பிறகு பிரகார புறப்பாடு நடந்து தாயாருக்கும் பெருமாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று தாயாருக்கு விசேஷமான ஒய்யார நடை சேவை நடைபெறுவது வழக்கம். அன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று தாயாரை தரிசிப்பதால் நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |