பலரும் அறிந்திடாத திருவண்ணாமலையில் இருக்கும் 5 ரகசிய குகைகள்
இறைவழிபாட்டில் சில ஆலயங்களுக்கு சென்றால் தான் நமக்கு புண்ணியம் சேரும். ஆனால், ஓர் இடத்தில் இருந்து நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஆலயம் என்றால் அது திருவண்ணாமலை தான். இந்த திருவண்ணாமலை தலம் என்பது பல அதிசயங்களையும் அற்புதங்களையும் மனிதனுடைய அறிவிற்கு எட்டாத அளவிற்கு பல ஆன்மிக ஆச்சரியங்களையும் தெய்வீக ஆற்றல்களையும் கொண்ட அற்புத திருத்தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் கட்டாயம் அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு மிக முக்கியமாக கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களையும் அங்கு இருக்க கூடிய ஜீவ சமாதிகளையும் குளங்களையும் தரிசித்து விட்டு தான் வருவார்கள்.
இன்னும், சிலர் கிரிவலம் செல்வதற்காகவே திருவண்ணாமலை பயணம் செய்து வருவதையும் நாம் பார்க்கலாம். அப்படியாக அண்ணாமலையார் கிரிவல பாதையில் பலருக்கும் தெரியாத ரகசிய குகைகளும் அங்கு பல அதிசயங்களும் நிறைந்து இருக்கின்றன.
அதைப்பற்றி நாம் இப்பொழுது தெரிந்துகொள்வோம். திருவண்ணாமலை அதிசய குகைககள்.

1. விருபாக்ஷி குகை :
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லக்கூடிய பாதையில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான அதிசய குகை தான் இந்த விருபாக்ஷி குகை. இதை "ஓம்" வடிவ குகை என்றும் அழைப்பார்கள். காரணம் இந்த குகை ஓம் என்கின்ற பிரணவ மந்திரத்தின் வடிவில் அமைந்துள்ளது. இங்குதான் பகவான் ரமணர் 17 ஆண்டுகள் தவம் புரிந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
2. ஸ்கந்தாஸ்ரமம் :
திருவண்ணாமலையின் உச்சிக்கு அருகில் உள்ளது தான் இந்த ஸ்கந்தாஸ்ரமம். இந்த மலையில் அதிசயம் என்னவென்றால் இங்கு ஊரும் அதிசய தீர்த்தம் தான். இது எந்த காலத்திலும் வற்றாத அதிசயமான இயற்கை அற்புதம் நிறைந்த தீர்த்தமாக காணப்படுகிறது.
3. சித்தர்கள் வாழும் குகை :
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லக்கூடிய பாதையில் சில குகைகளில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் அவர்கள் தவம் செய்வதாக பல பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு அருபமாய் வாழும் சித்தர்கள் அவ்வப்பொழுது கிரிவலம் செல்வதும் அண்ணாமலையாரை சென்று தரிசனம் செய்வதும் வழக்கமாக வைத்திருப்பதாகவும் பக்தர்கள் மத்தியில் தீராத நம்பிக்கையாக இருக்கிறது. இன்னும் பலர் அந்த சித்தர்களை தான் பார்த்ததாகவும் சொல்லக்கூடியதை நாம் காணலாம்.

4. மாமரக் குகை :
முன்னொரு காலங்களில் இங்கு அடர்ந்த மா மரங்கள் வளர்ந்து இருந்ததால் இந்த பெயரை பெற்றிருக்கிறது. மேலும் பகவான் ரமணர் இங்கு தவம் செய்த பொழுது இங்கு இருந்த சிறிய நீர்ச்சுனை இன்றும் வற்றாமல் ஒரு இயற்கை அதிசயமாய் இருக்கிறது. இதனால் இதை தாகம் தீர்க்கும் குகை என்றும் பக்தர்கள் அழைத்து வருகிறார்கள்.
5. நமசிவாயர் குகை :
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த குகை நமச்சிவாயர் என்ற சித்தர் ஒருவர் இங்குதான் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த குகையில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது ஒருவிதமான தெய்வீக உஷ்ணத்தை நம்மால் உணர முடியும். காரணம் இங்கு தவம் செய்த குகை நமச்சிவாய சித்தர் நெருப்பாக மாறியதாகவும் இவரின் இருப்பையே அந்த தெய்வீக உஷ்ணம் உணர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆக, திருவண்ணாமலையில் நாம் அறியாத பல அற்புதங்களும் பல குகைகளும் இருந்து வருகிறது. அதனால் திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் கட்டாயம் கிரிவலம் செல்லும் பாதையில் இருக்கக்கூடிய முக்கியமான குகைகள் தெரிந்து கொண்டு வழிபாடு செய்து வரும்பொழுது அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றமும் மனதில் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |