குல தெய்வத்தின் அருளை பெற புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்ளுங்கள்
புரட்டாசி மாதம் பிறக்க இருக்கிறது.புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்று அனைவரும் அறிந்தது.பொதுவாக சனிக்கிழமை என்றாலே பெருமாளுக்கு உகந்த நாளாகும்.அதிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை இன்னும் கூடுதல் விசேஷமாக கருதபப்டுகிறது.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு அன்று சாளக்கிராம பூஜை செய்தல் மற்றும் விரதம் இருப்பது மிகவும் நல்லது. ஒருவர் புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் இருப்பதால் அவர்கள் சனிபகவான் கொடுக்கும் தொல்லையில் இருந்து தப்பிப்பதோடு அவர்களுக்கு குல தெய்வத்தின் பரிபூர்ண அருளும் கிடைக்கும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.
பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து அன்றைய நாளின் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். கலசம் வைத்து வழிபாடு செய்தால் பலன்கள் இரட்டிப்பாகும். பெருமாளுக்கு சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
சாளக்கிராம பூஜை வழக்கம் போல செய்து பின்னர் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.
துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, பவளமல்லி நந்தியாவட்டை தாமரை மல்லிகை முல்லை சங்குப்பூ வில்வம் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
இவ்வாறு விரதம் இருப்பதால் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகி வீட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிகளும் விலகுவதோடு மட்டும் அல்லாமல் பெருமாளின் பரிபூர்ண அருளுடன் சேர்த்து நம்முடைய குலதெய்வத்தின் அருளையும் பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |