பலரும் அறிந்திடாத சக்திவாய்ந்த லிங்கம்- மார்கழி மாதத்தில் மட்டுமே காணலாம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் உள்ளது. இங்கு நமக்கு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம் பிரியாளும் அருள் பாலித்து வருகிறார்கள்.
இங்கு பலரும் அறிந்திடாத சுயம்பு லிங்கத்தின் மர்மம் ஒன்று இருக்கிறது. அதாவது மார்கழி மாதம் 5 மணிக்கு முன்பாக சென்றால் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை நாம் தரிசித்து விடலாம். அதாவது மார்கழியில் மட்டும் தான் இந்த மரகதலிங்கம் வழிபாடு செய்ப்படும் மற்றும் மாதங்களில் அதற்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள்.

இப்பொழுது பிருங்கி முனிவர் வழிபாடு மரகத லிங்கத்தின்வரலாறு பற்றி பார்ப்போம்.
முன்பு ஒரு காலத்தில் ஆதிசேஷனும் வாயுதேவனும் தங்களின் யார் மிகச் சிறந்த பலசாலிகள் என்று அறிந்து கொள்ள இருவரும் போர் செய்து கொண்டனர். அந்த போரினால் உலகில் பேரழிவுகள் ஏற்பட தொடங்கியது. இந்த துன்பங்களை கண்ட முனிவர்களும் தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழியை சொல்லி அதில் யார் வெற்றி அடைகிறார்களோ அவர்களே பலசாலி என தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
அதன்படி ஆதிசேஷன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைதளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், வாயு தேவனால் பிடியை தளர்த்தவே முடியவில்லை. இதனால் மிகுந்த கோபம் கொண்ட வாயு தேவன் அவருடைய சக்தியை அடக்கி கொண்டார்.
இதனால் உயிரினங்கள் அனைத்தும் மயங்கி விழுந்தார்கள். இந்தப் பேரழிவை கண்ட முனிவர்களும் தேவர்களும் ஆதிசேஷனிடம் பிடியை தளர்த்த வேண்டும் படி கேட்டுக் கொண்டார்கள். ஆதிசேஷனும் அவர்களுடைய சொல்லுக்கு ஏற்ப பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வாயு தேவன் அவருடைய சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அந்த சிகரத்துடன் ஆதிசேஷனின் சிரத்தையும் சேர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாக சிதறி விழுந்தது.

அதில் ஒன்று திருவண்ணாமலையாகும், மற்றொன்று இலங்கையாகும், மற்றொன்று நாக மாலைஅதாவது திருச்செங்கோடு ஆகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாகம் மலையில் பல பல அற்புதங்கள் இருக்கிறது. அப்படியாக, ஒருமுறை பிருங்கி முனிவர் கைலாயம் வரும் நேரத்தில் சிவபெருமானை மட்டுமே வழிபாடு செய்து விட்டு அவரது அருகில் இருக்கக்கூடிய உமா தேவியை வழிபாடு செய்யாமல் விட்டுவிட்டார்.
இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரத்தில் சிவனை மட்டும் வணங்கும் வகையில் வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபாடு செய்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த உமா தேவியாருக்கு பெரும் கோபம் ஏற்பட்டுவிட்டது. சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீ சக்தி இழந்து போவாய் என பிருங்கி முனிவருக்கு சாபமிட்டார்.
இதனை அறிந்து கொண்ட சிவபெருமான், உலகிற்கு நானும் சக்தியும் வேறு வேறு அல்ல, இருவரும் ஒன்றுதான் "சக்தி இல்லையேல் சிவமில்லை", "சிவம் இல்லையேல் சக்தி இல்லை" என்று கூறி உமையவளுக்கு அவருடைய இடப்பாகத்தில் இடம் கொடுத்து விட்டார். மேலும் பார்வதி தேவி சிவபெருமானுடைய இடப்பாகம் பெறுவதற்காக இந்த நாகமலையில் வந்து தான் தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இக்கோவிலில் கேதார கௌரி புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாட்கள் கடைபிடிக்கப்படும். அவ்வாறு பார்வதி தேவி தவம் செய்யும் பொழுது சிவபெருமான் லிங்க வடிவமாக காட்சி தந்து மறைந்தார். பின்பு பார்வதி தேவியும் அந்த லிங்கத்திலேயே கலந்து கொண்டார். இந்த லிங்கத்தின் அருமையை அறிந்து கொண்ட பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்து வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார்.

பிறகு தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியையும் அவர் மீட்டுக் கொண்டார். அதன்படி அந்த லிங்கத்தை அவர் அங்கேயே நிறுவினார். அந்த லிங்கத்தின் சக்தியை அவருடைய சீடர்களுக்கு எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டுமே எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும், அதோடு சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விட வேண்டும் என்று அவருடைய சீடர்களுக்கு கட்டளையிட்டார்.
மற்ற நேரங்களில் சாதாரண லிங்கத்தை மட்டுமே வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். ஆக இவ்வளவு சக்தி வாய்ந்த லிங்கத்தை நாம் வழிபாடு செய்தால் நமக்கு கட்டாயம் மோட்சம் நிச்சயம்.
ஆதலால் மார்கழி மாதம் முடிந்தவரை திருச்செங்கோட்டில் இருக்கக்கூடிய இந்த லிங்கத்தை வழிபாடு செய்து சிவபெருமானின் அருளையும் பார்வதி தேவையும் அருளையும் பெற்று நம் வாழ்க்கையில் மோட்சம் அடைவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |