குபேர சம்பத்து வழங்கும் அழகிய முருகன் ஆலயம்
திருச்சி அருகில் உள்ள துறையூர் நகரில் அழகிய முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் கொல்லிமலை சித்தர் ஒருவரால் கட்டப்பட்டது.
அவருடைய ஜீவ சமாதியும் இங்கே உள்ளது. இங்கு குபேரர், பைரவர், காளி ஆகியோர் தனிசன்னதிகளில் இருந்து தம்மை வணங்கும் பக்தர்களுக்குக் குபேர சம்பத்து வழங்குகின்றனர்.
கருவறை நாதர்:
அழகிய முருகன் கோவிலில் முருகன் தனியாக நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். மேல் இரு கரங்களில் கொடியும் வேலும் கொண்டு முன்னிரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரை காட்டி நிற்கின்றார்.
அவருக்கு வலப்பக்கத்தில் சூரியனும் இடப்பக்கத்தில் சண்டிகேஸ்வரரும் உள்ளனர். எதிரே சிவபெருமான் பார்வதி வலம்புரி விநாயகர் சந்நிதிகள் உள்ளன. இவர்களின் வாகனங்களான மயில் குதிரை நந்தி மூஞ்சூறு ஆகியவை கருவறைக்கு முன்பு காணப்படுகின்றன. கருவறைக்கு முன்பு பலிபீடமும் உள்ளது.
திருச்சுற்றுத் தெய்வங்கள்:
அழகிய முருகன் கோவிலின் திருச் சுற்றில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். தெற்கே விநாயகர் சன்னதி உள்ளது.
மேல் தளத்தில் சந்நிதிகள்:
அழகிய முருகன் கோவிலின் மேல் தளத்தில் முருகனே குரு பகவானாகத் தோன்றும் குமார குரு பகவான் சன்னதி உள்ளது. இதனால் இங்கு குரு பெயர்ச்சி காலத்தில் முருகனை வழிபட்டு குருவின் பலனை பெறுகின்றனர்
கலியுக குபேர பைரவர்:
அழகிய முருகன் கோவில் திருச் சுற்றில் வடக்கே பைரவர் சன்னதி உள்ளது இவரைக் கலியுகக் குபேர கால சக்கர பைரவர் என்பர். 800 ஆண்டுகளுக்கு முன்பு இவர் குகைக்குள் சுயம்புவாக உருவானார். இவருடைய உக்கிரத்தைக் குறைக்க இவரின் பாதங்களுக்கு கீழே ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டு உள்ளது.
குபேர காளி சன்னதி:
அழகிய முருகன் கோவிலின் மேல் தளத்தில் குபேர மூலையில் குபேர காளி வடக்கு நோக்கி வடக்கு வாய்ச் செல்வியாகக் காட்சி தருகின்றாள். பௌத்த துறவிகள் வாழ்ந்த இடங்களில் குபேரனுக்குத் தனி சந்நிதி வைத்து வழிபட்டனர்.
குபேரனை இவர்கள் தேவேந்திரனின் தம்பி என்று போற்றினர். பன்னிரண்டு குபேரர் உள்ள கோவில்களும் தமிழ்நாட்டில் உண்டு. குபேர காளி இங்கு அதிக பிரசித்தம். இக் கோவிலில் குபேர காளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு
சனி பகவான்:
அழகிய முருகன் கோவிலின் மேல் தளத்தில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். எனவே ஈஸ்வரனுக்கு நிகரான பலனை இச்சனீஸ்வரன் வழங்குகின்றார். கண்ட சனி அஷ்டமச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இச் சனி பகவானை வணங்கி நலம் பெறலாம்.
புதுமையான அபிஷேகம்:
அழகிய முருகன் கோவிலில் கோவில் பூசாரிகள் அண்டாவில் இருந்து தண்ணீரை எடுத்து முருகனின் தலை மீது ஊற்றி அபிஷேகம் செய்வது கிடையாது. சன்னதிக்குள் ஷவர் குழாய் உள்ளது. அந்த ஷவரில் இருந்து தண்ணீர் முருகன் மீது இளம் சாரல் போல பொழியும்.
முருகன் நீராட்டப்படுவார் கருவறைக்குள் உள்ள சண்டிகேஸ்வரர் மற்றும் சூரியனுக்கும் ஷவர் மூலம் தான் குளியல் நடைபெறும். வேறு எந்த கோவிலிலும் கருவறை தெய்வங்களுக்கு ஷவர் குளியல் கிடையாது.
கோவில் விழாக்கள்:
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா அழகிய முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெறும். முருகன் வேல் வாங்கும் சமயத்தில் கருவறை முருகனுக்கு வியர்க்கும் என்பது ஐதீகம். திருக்கார்த்திகை நாள் அன்று கோவில் வாசலில் சொக்கப்பனை ஏற்றப்படும்.
அடைமழை கனமழை முடிந்த பிறகு மழை காரணமாக வந்த புழு பூச்சிகள் அழிந்து போவதற்காக வீடுகளில் விளக்கேற்றுவதும் சொக்கப்பனையேற்றுவதும் தொன்று தொட்டு இருந்து வரும் வேளாண் சடங்காகும்.
விளக்கின் புகைக்கும் நெருப்பின் புகைக்கும் புழு பூச்சிகள் அழிந்துவிடும். திருக்கார்த்திகை அன்று கிராமங்களில் சுளுந்து சுற்றுவதும் உண்டு. அழகிய முருகன் கோவிலில் தைப்பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
நேர்த்திக்கடன்கள்:
அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் செய்யும் நேர்த்திக் கடன்கள் இந்த அழகிய முருகன் கோவிலிலும் உண்டு.
குறிப்பாக குரு பெயர்ச்சி நாட்களில் மற்றும் சிறப்பு தைப்பூசம் பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் ஏராளமானோர் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் வருகின்றனர். இவர்களுக்கு கோவிலில் மட்டுமல்ல ஊருக்குள் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகின்றது.
சாமிக்குத் தத்துக் கொடுத்தல்
செட்டிநாட்டு பகுதிகளில் உள்ள கோவில்களில் பிள்ளைகளை இறைவனுக்குத் தத்து கொடுத்து வேறு பெயர் ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற முறை உண்டு. திருக்கோஷ்டியூர், குன்றக்குடி கோவில்களில் பெற்றோருக்கு தோஷமாக பிறந்த பிள்ளைகளை இறைவனிடம் கோவிலுக்கு தத்து கொடுத்து வேறு பெயர் சூட்டி பெற்றோர்கள் வளர்ப்பார்கள்.
அழகிய முருகன் ஆலயத்திலும் தன்னைத்தானே தத்து கொடுக்கும் முறையைப் பெரியவர்களும் செய்கின்றனர். அன்றைக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பூ மாலை சாத்தி புத்தாடை அணிவித்து தங்கள் குறை தீர வேண்டிக் கொண்டு தங்களால் இயன்ற அளவு அன்னதானம் வழங்குகின்றனர்.
மூன்று பெயர்களை சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டு அதில் எந்த பெயர் தெரிவாகின்றதோ அந்தப் பெயரைத் தங்களுக்குச் சூட்டுகின்றனர். புதுப் பெயர் சாமி கொடுத்த பெயராகக் கருதப்படுகிறது.
இதனால் அவர்கள் ஜாதக தோஷங்கள் விலகி அவர்கள் புது பிறப்பு எடுத்தவர்களாக கருதப்படுகின்றனர். கருதிக் கொள்கின்றனர். அனைத்து தோஷங்களுக்கும் நிவாரணம்அளிக்கக்கூடிய இறைவனாக அழகிய முருகப்பெருமான் அருள் பாலிக்கின்றார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |