அதிர்ஷ்டம் கொடுக்கும் அரச மரம்.. எப்படி வழிபாடு செய்ய வேண்டும்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தை பொருத்தவரை நாம் மரங்களை தெய்வமாக போற்றி வழிபாடு செய்து வருகின்றோம். அதாவது, வேம்பை அம்மனாகவும், வில்வத்தை சிவனாகவும், துளசியை மகாலட்சுமியாகவும் போற்றி வழிபாடு செய்கின்றோம்.
அதேபோல், அரசமரத்திற்கு அடியில் இன்றளவும் கிராமங்களில் விநாயகர் சிலை நாகர் சிலை போன்றவை இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. பலரும் அரச மரத்திற்கு அடியில் விளக்கேற்றி அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்வார்கள். அப்படியாக, இந்த அரசமரத்தை வழிபாடு செய்வதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

அரச மர சிறப்புகள் :
பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் சொல்லுகிறார். நான் விருட்சங்களில் அசுவத்த மரமாக இருக்கிறேன்…” என்று. ஆக, இதில் இருந்து நாம் அரசமரத்தின் தெய்வீக தன்மையை தெரிந்து கொள்ள முடிகிறது.
அதேபோல், புராணங்களில் ஸ்ரீமன் நாராயணன் வலது கண்ணில் இருந்து தோன்றிய விருட்சமே இந்த அரச மரம் என்றும், இந்த அரச மரமே அனைத்து மரங்களுக்கும் தலைமை மரமாக விளங்கவேண்டும் என்பதற்காக அதற்கு “அரசு” என்ற பெயர் வழங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
ஆகையால், இன்றளவும் நாம் அரசமரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்கின்றோம். அதோடு கோவில்களிலும் அரசமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதும் உண்டு. மேலும், அதிகாலை வேளையில் நாம் அரசமரத்திற்கு அருகில் நின்று சுவாசித்து பார்த்தால் நாம் ஒரு விதமான அமைதியை உணரலாம்.
இதற்கு அரசமரம் வெளியிடும் தூய காற்றே காரணமாக இருக்கிறது. அதோடு, அரச மரம் உடலிற்கும் மனதிற்கும் பல நன்மைகள் வழங்கக்கூடியது என்று சித்த மருத்துவ குறிப்புகளிலும், நாட்டு மருத்துவ குறிப்புகளிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. இன்னும் குறிப்பாக வீடுகளில் பெரியவர்கள் காலை எழுந்தவுடன் ஈரத் துணியோடு அரச மரத்தை சுற்றி வருவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

இவ்வாறு ஈரத்துணையோடு அதிகாலையில் அரச மரத்தை சுற்றி வருவதற்கு பின்னால் இருக்கக்கூடிய அற்புதமான காரணங்கள் தெரியுமா? அதை பற்றி பார்ப்போம்.
பண்டைய காலத்தின் மரபுகளின் நம்பிக்கையின் அடிப்படையில் அரச மரத்தில் இயற்கையாகவே உயிர் சக்தி அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ஈரமான உடலுடன் மரத்தை சுற்றி வரும் பொழுது அந்த சக்தி உடலுக்குள் பரவுகிறது என்று நம்பப்படுகிறது. இதனால், நம்முடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது, மன அமைதியை நாம் பெறுகின்றோம். இந்த நம்பிக்கை என்பது ஆன்மீக ரீதியாகவும் இயற்கை மருத்துவ ரீதியாகவும் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கமாக உள்ளது. அதேபோல் வேப்பமரம் உடலுக்கு பாதுகாப்பு தரக்கூடிய மரமாகவும் கருதப்படுகிறது.

ஆதலால் அரசும் வேம்பும் ஒன்றாக நட்டால் அது மிகப் பெரிய அளவில் புண்ணியத்தை சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு அரசு — ஆண் சக்தி சக்தியை குறிக்கக் கூடியதாகவும், வேம்பு — பெண் சக்தி சக்தியை குறிக்கக் கூடியது இன்று அடையாளப்படுத்தப் படுகிறது.
இந்த இரண்டு மரங்களுக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடிய வழக்கமும் பல இடங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதனால் இன்றும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அரசும் வேம்பும் சேர்ந்திருக்கக்கூடிய இடங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள்.
புராணங்களில் அரச மரத்தின் வேர் பகுதியில் பிரம்மா இருப்பதாகவும், நடுப்பகுதியில் விஷ்ணு பகவான், இருப்பதாகவும் உச்சியில் சிவபெருமான் வாசம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. அதனால், அரச மரத்தை சுற்றி வருவது மும்மூர்த்திகளையும் சுற்றி வந்து வழிபாடு செய்வதற்கு சமம் என்று நம்பப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |