ஜோதிடம்: நீங்கள் பிறந்த கிழமையும் உங்கள் குணநலன்களும் அதற்கான பரிகாரமும்
ஜோதிடத்தில் எண்ணற்ற விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர் குண நலன்கள் சொல்லி விட முடியும். அப்படியாக, நாம் இப்பொழுது எந்த கிழமையில் பிறந்தால் என்ன குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் :
ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள் நல்ல ஆளுமை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எதையும் எளிதாக முடிக்க கூடிய தன்மை படைத்தவராக இருப்பார்கள். பிறரை ஏமாற்றும் குணம் இவர்களிடம் சுத்தமாக இருக்காது.
நேர்மையாகவும், நேர்வழியில் சென்று ஜெயிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இருந்தாலும் எளிதில் உணர்ச்சி வசம் அடைவார்கள். அதனால் இவர்கள் கோபத்தில் வார்த்தைகளை கொட்டி விட இவர்களை சிலருக்கு பிடிக்காமல் போயிவிடும். அவ்வப்பொழுது குழப்ப மனநிலை கொண்டவர்களாக காணப்பட்டாலும், நிதானம் இழக்காமல் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
இவர்கள் வாழ்வில் தடை இன்றி வெற்றி பெற ஞாயிற்று கிழமையில் ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும்.
திங்கட்கிழமை பிறந்தவர்கள் :
இவர்கள் தங்களுடைய பேச்சு ஆற்றல் கொண்டு எளிதில் பிறரை கவர கூடியவர்கள். ஆனால், மிகுந்த பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பார்கள். திறமையும் அறிவும் இவர்களுக்கு அதிகம் இருக்கும். பேச்சால் சாதிக்க முடியாது என்று நினைத்த காரியத்தையும் வெற்றிகரமாக சாதித்து காட்டுவார்கள்.
இவர்களுக்கு விபரீத நியாபக சக்திகள் இருக்கும். இவர்களுடைய ஒரே பலவீனம் இவ்ரகளுடைய குழப்பமான மனநிலை. இவர்களுக்கு எப்பொழுதும் முடிவு எடுக்கும் பொழுது ஒருவருடைய துணை தேவை. நிறைய ஏமாற்றம் அடைந்தவராக இருப்பார்கள்.
இவர்கள் திங்கட்கிழமை அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது வாழ்க்கை முன்னேற்றம் அளிக்கும்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் :
செவ்வாய்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல தைரிய மிக்கவர்களாக இருப்பார்கள். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் உண்டு. முன்கோபம் அதிகம் வந்தாலும், பிறரிடம் பாசமாக பழகுவார்கள். அவர்களுடைய கருத்துக்களை தைரியமாக முன் வைப்பார்கள்.
எதையும் மறைத்து பேச தெரியாதவர்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள். தாயின் மீது அதிக அன்பு வைப்பவர்கள். இவர்கள் ஒருவர் மீது கோபம் கொண்டால் அது நியாமான கோபமாக இருக்கும்.
இவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும்.
புதன்கிழமை பிறந்தவர்கள் :
புதன் கிழமையில் பிறந்தவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இயல்பாகவே இவர்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகம் இருக்கும். எப்பொழுதும் மற்றவர்களின் உணர்வு புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். இனிமையாக பேசி காரியம் சாதிப்பார்கள்.
இவர்கள் தான் உண்டு, என் வேலை உண்டு என்று கடந்து செல்வார்கள். இவர்களுக்கு தேடி ஒரு விஷயத்தை படிப்பதில் நிறைய விருப்பம் இருக்கும்.
புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறந்த பலன் கொடுக்கும்.
வியாழக்கிழமை பிறந்தவர்கள் :
இவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் பிறருக்கு தனக்கு தெரிந்ததை காற்று கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே பிறரை மன்னிக்கும் குணம் இருக்கும்.
சுயநலம் பாராமல் பிறருக்கு தேடி சென்று உதவி செய்வார்கள். உண்மை நீதிக்கு குரல் கொடுப்பவர்கள். இவர்களுக்கு சமயங்களில் அதிக அளவில் கோபம் வருவதை பார்க்க முடியும். ஆதலால் வார்த்தைகளை கொட்டி தீர்த்து விடுவார்கள்.
இவர்கள் வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்து வர நல்ல பலன் பெறலாம்.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் :
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் சுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் இவர்கள் பேச்சில் ஒரு வசீகரம் இருக்கும். இவர்கள் குடும்பத்தில் நல்ல பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். எதையும் நிதானமாக யோசித்து செயல்பட்டாலும், இவர்கள் வாழ்க்கையில் எதையும் கொஞ்சம் கஷ்டப்பட்ட பிறகே அடையும் பாக்கியம் உடையவர்களாக இருப்பார்கள்.
மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு கேலியும், கிண்டலும் கலந்து பேசி விடுவார்கள்.எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு உடையவர்கள்.
இவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம்.
சனிக்கிழமை பிறந்தவர்கள்:
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் எப்பொழுதும் நீதி நேர்மை என்று பேசுபவர்கள். பெரியவர்களிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருப்பவர்கள். இவர்களுக்கு ஆன்மீகத்தில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் எதையும் சரியாக கணித்து சொல்லும் திறன் கொண்டவர்கள்.
இவர்களுக்கு ஏமாற்றுவது பிடிக்காது. இவர்களை ஏமாற்றினாலும் இவர்களால் பொறுத்து கொள்ள முடியாது. சனி ஆதிக்கம் காரணமாக ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதால், முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும்.
இவர்கள் சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது வாழ்க்கையில் முன்னேற்றம் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |