காஞ்சி காமாட்சி: அருளும் அற்புதமும் நிறைந்த திருத்தலம்

By Aishwarya Mar 19, 2025 11:30 AM GMT
Report

அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி.

காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அத்தகைய சிறப்புமிக்க காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்புகளை தெரிந்துகொள்ளலாம்.

காஞ்சி காமாட்சி: அருளும் அற்புதமும் நிறைந்த திருத்தலம் | Kanchi Kamakshi Amman Temple

சக்தி பீடங்களில் சிறப்பு மிக்க காஞ்சி:

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோயில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. புண்ணிய பூமியான பாரத தேசத்தில் (இந்தியாவில்) உள்ள 51 சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது.

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.

இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சிமாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.

ராகு- கேது தோஷத்திலிருந்து விடுபட இந்த பரிகார தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்

ராகு- கேது தோஷத்திலிருந்து விடுபட இந்த பரிகார தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்

பந்தகாசுர வதம்:

முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான்.

பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள்.

பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், ” அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது ” என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

காஞ்சி காமாட்சி: அருளும் அற்புதமும் நிறைந்த திருத்தலம் | Kanchi Kamakshi Amman Temple

காமாட்சியின் அருள்:

அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள்.

தேவர் களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள்.

அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, 18 கரங்களில், 18 வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.  

பைரவி அவதாரம் மற்றும் மகாவிஷ்ணுவின் போர்:

பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர்.

அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.

இறந்த குழந்தையை மூன்று வருடங்களுக்கு பிறகு உயிர்ப்பித்த சிவாலயம்

இறந்த குழந்தையை மூன்று வருடங்களுக்கு பிறகு உயிர்ப்பித்த சிவாலயம்

அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள். அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள்.

அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள். தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறிப் போர் புரிந்தது. இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையன்று உருவாகி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது.

அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்குச் சிவபெருமானை அழைத்தார். சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார்.

அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன. இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார். 

காஞ்சி காமாட்சி: அருளும் அற்புதமும் நிறைந்த திருத்தலம் | Kanchi Kamakshi Amman Temple

காமாட்சி ஆலயத்தின் தோற்றம்:

அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுரனைப் புதைத்த இடத்திற்கருகில், 24 தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள்.

பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள்.

ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள். அந்த நன்னாள், ஸ்வயம்பு மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும்.

எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள். அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள்.

அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன. அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் வாழ அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள்.

அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, 24 தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள். 

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு போறீங்களா? அப்போ இந்த கோயில்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு போறீங்களா? அப்போ இந்த கோயில்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க

கோயில் அமைப்பு:

சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் காமாட்சியின், காமாட்சி பார பத்தாரிகா, தவ காமாட்சி, அஞ்ஜன காமாட்சி, ஸ்வர்ண காமாட்சி, உற்சவ காமாட்சி என ஐந்து வடிவங்களில் தரிசிக்க முடியும்.

108 திவ்ய தேசங்களில் திருக்கல்வனூர் பெருமாள் கோவில் சிதிலமடைந்ததால், அக்கோவிலின் பெருமாள், இங்கு எடுதஅது வந்து வைக்கப்பட்டார்.

அதனால் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் திருமாலின் வராக வடிவத்தை தரிசிக்க முடியும். இக்கோவில் சூரியன், சந்தியன், குபேரன் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

கி.பி.5 முதல் 8 ம் நூற்றாண்டுகளில் பல்லவ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போதுள்ள கோவில் 1783-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

காஞ்சி காமாட்சி: அருளும் அற்புதமும் நிறைந்த திருத்தலம் | Kanchi Kamakshi Amman Temple

காமாட்சி ஆலயத்தின் சிறப்புகள்:

தற்போது, அன்னை காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது.

அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். (பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள்.)

அந்த மூவகை வடிவங்களாவன: 

* காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்)

* அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்)

* காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்) 

காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு. காஞ்சிபுரம் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள்.

இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். 

அஞ்சன காமாட்சி மற்றும் ஸ்ரீசக்கரம்:

மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.

ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள். 

காஞ்சி காமாட்சி: அருளும் அற்புதமும் நிறைந்த திருத்தலம் | Kanchi Kamakshi Amman Temple 

தங்க கோபுர விமானம் மற்றும் திருவிழாக்கள்:

நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது முதுமொழி. ஏராளமான புண்ணியம் தரும் கோவில்களை தன்னகத்தே கொண்ட இந்த நகருக்கு தினந்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சாமிகும்பிட்டு செல்வர். இங்கு தனிகோயிலில் பராசக்தியாய் எழுந்தருளி இருக்கும் உமைக்கு காமாட்சி என பெயர்.

இத் திருக்கோவில் உலகபிரசித்திபெற்றதாகும். காஞ்சிபுரத்தில் எண்ணற்ற சிவாலயங்கள் இருந்தாலும் எந்த கோவிலிலுமே அம்மாள் மூலஸ்தான சன்னதி கிடையாது. காஞ்சியில் காமாட்சியம்மாள் தவக்கோலத்தில் இருப்பதால் தான் இங்கிருக்கும் சிவன் கோவில்களில் அம்மாளுக்கு தனி சன்னதி கிடையாது என கூறுவர்.

ஈரோட்டில் வழிபடவேண்டிய சக்தி வாய்ந்த சில முக்கிய கோவில்கள்

ஈரோட்டில் வழிபடவேண்டிய சக்தி வாய்ந்த சில முக்கிய கோவில்கள்


இத்திருக்கோவிலில் 1841, 1944, 1976, 1995 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேம் நடத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது திருக்கோவில் முழுவரும் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. 70 கிலோ தங்கம் கொண்டு காமாட்சி மூலஸ்தான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் சிரமமின்றி சாமி கும்பிட கோவிலை சுற்றி பிரகார மண்டபங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும்.

இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை.

பிரார்த்தனை :

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவையே இந்த தலத்திற்கு வரும் பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது. இங்குள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தசரத சக்கரவர்த்தி இங்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்து தான் ராமர், லட்சுமணர் ஆகியோர் பிறந்ததாக வரலாறு சொல்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம், அபிஷேகம் ஆகியவை செய்து வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள்.

காஞ்சி காமாட்சி: அருளும் அற்புதமும் நிறைந்த திருத்தலம் | Kanchi Kamakshi Amman Temple

வழிபாட்டு நேரம் :

காலை 5 மணி துவங்கி, பகல் 12.15 மணி வரையிலும், மாலை 4 மணி துவங்கி 08.15 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் இரவு 09.30 வரையிலும், பெளர்ணமி நாளில் இரவு 10.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயில் அமைவிடம் :

காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கும், பஸ் நிலையத்திற்கும் மிக அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது. சங்கர மடத்தை ஒட்டி அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவில் தான், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மற்ற முக்கியமான கோவில்கள் அனைத்திற்கும் துவக்கமாக அமைந்துள்ளது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US