அதிகாலை 2 மணிக்கே நடைதிறக்கும் அதிசய கிருஷ்ணன் கோயில்
பொதுவாக கோவில் என்றால் காலை 4:30 மணிக்கு மேல்தான் நடைதிறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும். ஆனால் இங்கு ஒரு கோவிலில் காலை 2 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. பலரும் அறிந்திடாத இந்த அதிசயமான கோயில் எங்கே இருக்கிறது? என்பதைப் பற்றி பார்ப்போம்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் அமைந்திருக்கிறது திருவார்பு ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம். இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் ஆகும். கேரளாவின் பாரம்பரிய கட்டிட கலைகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் இந்த கோயில் விளங்குகிறது.
பிற கோயில்கள் போல் அல்லாமல் இந்த கோவில் சற்று வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. அதாவது திருவார்பு கிருஷ்ணன் கோவில் அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிருஷ்ண பகவானுக்கு நெய்வேத்தியம், பிரசாதம் படைக்கப்படுகிறது.
காரணம் இங்கு உள்ள கிருஷ்ண பகவான் எப்போதும் பசியுடனே இருப்பதாக ஐதீகம். மேலும் இந்த கோயிலில் இருக்கக்கூடிய மூலவர் கிருஷ்ணரை பற்றி ஒரு விசேஷமான நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது.
அதாவது கம்சனை வதம் செய்த பிறகு உக்கிர நிலையில் இருந்த கிருஷ்ண பகவான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், அந்த உக்கிரத்தினால் அவர் எப்பொழுதும் பசியோடு இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
அதனால் எந்த நேரமும் நெய்வேத்தியம், பிரசாதம் படைக்கப்பட்டு கொண்டே இருப்பதற்காக எந்த நேரமும் கோவில் நடைதிறக்கப்பட்டு வழிபாடு செய்யும் முறை அமைந்துள்ளது. இந்த கோவிலில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் ஒன்று இருக்கிறது.
அதாவது நடைமுறையில் கோவில் நடை சாத்தப்பட்டு திறக்கப்படும் இடைவெளியில் ஏதாவது காரணத்தினால் கதவை திறக்க தாமதம் ஏற்பட்டால் தந்திரியின் கையில் கோடாரி கொடுக்கப்படும்.
காரணம், கிருஷ்ண பகவான் பசியை தாங்க மாட்டார். தாமதமானால் உடனே கதவை உடைத்தாவது திறக்க வேண்டும் என்பது இங்கு இருக்கின்ற ஐதீகம் ஆகும். பொதுவாகவே, கிரகண நேரத்தில் பெரும்பாலான கோவில்கள் நடை சாற்றப்படும்.

ஆனால் திருவர்ப்பு கிருஷ்ணர் கோவில் கிரகண நேரத்திலும் மூடப்படுவதில்லை. இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. ஒருமுறை கிரகண நேரத்தில் கோவில் மூடப்பட்டு விட்டது. பின்னர் திறக்கப்பட்ட பொழுது மூலவரின் இடுப்பு பட்டை கீழே விழுந்து இருந்தது.
அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ண பகவான் பசியால் மிகவும் துன்புற்றதால் இவ்வாறு நிகழ்ந்தது என்று கூறியதாகவும், அதன் பின் கிரகண நேரத்திலும் கோவில் மூடப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
விசேஷ வழிபாடுகள்:
இந்த கோவிலில் வழிபாட்டு முறைகளும் மிகவும் தனித்துவமாகவே அமைந்திருக்கிறது. அதாவது அபிஷேகம் முடிந்தவுடன் முதலில் மூலவரின் தலையை உலர்த்துவார்கள். அதன்பிறகு நெய் வைத்தியம் படைக்கப்படுகிறது.
பிறகு முழு உடலும் உணர்த்தப்படும். இது வேறு எந்த கிருஷ்ணர் ஆலயத்திலும் இல்லாத தனிப்பட்ட நடைமுறையாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதம் பெறாமல் திரும்பி செல்வதற்கும் அனுமதி இல்லை.
ஒவ்வொரு நாளும் கோவில் மூடுவதற்கு முன் பூசாரி சத்தமாக கேட்பார். அதாவது இங்கு இருக்கிறவர்கள் யாராவது பசியோடு இருக்கிறீர்களா? என்று பிறகு அங்குள்ள அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு பிரச்சினை வராது என்றும் எந்த பிறவியிலும் பசியால் வாட வேண்டிய நிலை ஏற்படாது என்று பக்தர்களின் உடைய நம்பிக்கையாகவும் உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |