நித்திய சொர்க்கவாசல் உள்ள ஒரே கோயில் இதுதான் - எங்குள்ளது தெரியுமா?
நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் குறித்த தகவல்களை பார்ப்போம்.
நித்திய சொர்க்கவாசல்
தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற கலியுக வேங்கடேச பெருமாள் கோயிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்துள்ளது.
பொதுவாக அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும். ஆனால் இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள் பின்னர் சொர்க்கவாசலை பயன்படுத்தி வெளியே வருகின்றனர்.
அதேபோல் மற்ற கோயில்களில் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும் நுழைவு வாசலும் இருக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கி மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றுதான். நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார்.
இதன் மேல் தளத்தில் கல்லினால் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த சன்னிதிக்கு தனி விமானமும், சுலசமும் உள்ளது. இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. வைணவத் திருக்கோவிலான இங்கு சிவாலயங்களில் காணப்படும் கணபதி, கொற்றவை, பிச்சாடனர், நடராஜர் ஆகிய தெய்வங்கள் கருவறை கோஷ்டத்தில் இடம்பெற்றுள்ளன.
சிவனுக்குரிய வில்வ மரம் இந்தக் கோயிலில் மகாலட்சுமி அம்சமாகவும், தல விருட்சமாக இருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வேங்கடேச பெருமாள், ‘தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசல் போல நுழைவு வாசல் வைத்து ஒரு கோயில் கட்டு’ என பணித்துள்ளார்.
மேலும், ‘இந்தத் தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கலியுக வேங்கடேச பெருமாள் வரதராஜ பெருமாளாகவும் மகாலட்சுமி சமேதராக சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் இரு கோலத்தில் எழுந்தருளி காட்சி தருவேன். இத்தலத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்திய சொர்கவாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்ற பலனையும் வைகுண்ட பதவியும் தந்தருள்வேன்’ என்று கூறி மறைந்ததாக வரலாறு கூறுகிறது.
தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோயில் இதுதான். இதன் காரணமாக இந்தக் கோயில், ‘நித்திய சொர்க்கவாசல் கோவில்’ என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.