பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மீக சாஸ்திரங்கள்
ஆன்மிகம் என்பது கடல் போன்றது. அதில், தெரிந்தது தெரியாதது என தேட தேட சாஸ்திரங்கள் நமக்கு நிறைய கற்று கொடுக்கும்.
அப்படியாக ,பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக சாஸ்திர குறிப்புகள் சில உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் சுபமங்களம் உண்டாகும். அதை பற்றி பார்ப்போம்
பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி மேலும் குங்குமம் வைப்பதால் பெண்களுக்கு அழகும் கூடுவது மட்டும் அல்லாமல் இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.
மேலும் பெண்களில் நெற்றியில் பொட்டு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.அதுவும் குங்குமப் பொட்டு வைத்தால் உடலுக்கு நல்லது.
பெண்கள் அணியும் தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம்.
நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம். தாலி என்பது ஒரு மங்கலப் பொருள். எனவே அணிகலன்களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.
காலையில் அடுப்பு பற்ற வைக்கும்பொழுது அக்கினியை வணங்கி இன்று சமைக்கும் உணவினை அனைவரும் உண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்.
மேலும் பெண்கள் மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது.
நாம் கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.
முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. இழுத்து சொருக வேண்டும். முந்தானை ஆடினால் குடும்பமும் ஆடிவிடும் அதாவது குடும்பத்தில் பிரச்சனைகள் வந்துவிடும் என்பார்கள்.
பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானைத் துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.
மேலும் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.