விநாயகர் பூ விழுங்கினால் காரியம் வெற்றியாகும்!எங்கே தெரியுமா?
இந்தியாவில் எத்தனையோ அதிசய கோயில்கள் உள்ளன. அந்த அதிசய கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மட்டும் சாதாரணமாக இருந்துவிடுமா என்ன?அந்த சிற்பங்களிலும் கூட கலைநயத்தையும், ஆச்சர்யத்தையும் புகுத்தியே வடிவமைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யத்தை தாங்கி நிற்கும் கோயில்தான், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில், திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் அமைந்துள்ள புராதனவனேஸ்வரர் கோயிலாகும்.
புராதனவனேஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இத்தல இறைவனை புராதனவனேஸ்வரர் என்றும் பார்வதி தேவியை பெரியநாயகி என்றும் அழைப்பார்கள்.
இது தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இங்கு மேலும் என்ன சிறப்பு என்றால் பெரியநாயகி அம்மனை வணங்கினால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும்.
எப்பேர்ப்பட்ட கொடிய நோயும் தீரும், திருமணம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. வரம் கைகூடப்பெற்றவர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
இக்கோயில் பெரியநாயகி சன்னிதியின் வலதுபுறத்தில் வீற்றிருக்கும் விநாயகரை, ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று பக்தர்கள் அழைக்கிறார்கள்.
இங்கே வரும் பக்தர்கள் நந்தியாவட்டை பூவின் காம்பினை கிள்ளி விட்டு விநாயகர் காதுகளில் தெரியும் துவாரத்தில் பூக்களை வேண்டுதலுடன் வைக்கிறார்கள்.
பூ வைத்தவுடன் உள்ளே சென்றுவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று அர்த்தம். பூ உள்ளே செல்ல தாமதமானால் நினைத்த காரியம் நடக்க தாமதம் ஏற்படும் என்று அர்த்தம்.
பூ உள்ளே செல்லாமல் அப்படியே இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறாது என்று அர்த்தம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
இந்த விநாயகர் பக்தர்களுக்கு நல்வழி கூறுவதால் இவரை, ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். நமக்கும் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் விஷயங்களில் சந்தேகம் இருந்தால் சந்தேகம் இருந்தால் இவரை ஒரு முறை தரிசிக்க அதற்கான விடை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |