திருச்செந்தூரில் தவெக விஜய் பங்கேற்ற விஸ்வரூப தரிசனத்திற்கு பின்னால் இருக்கும் சிறப்புகள்
நடிகராக மக்களின் மனதை கவர்ந்த விஜய் தற்பொழுது அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்றார். அந்த வகையில் விஜய் ஏப்ரல் 28ஆம் தேதி அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதில் திருச்செந்தூரில் விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்றார்.
அப்படியாக, விஜய் தரிசனம் செய்த இந்த விஸ்வரூப தரிசனத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய சிறப்புகள் மற்றும் பலன்கள் என்னவென்று பார்ப்போம். இறை வழிபாட்டில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டிய ஒரு தரிசனம் என்றால் அது அதிகாலை முதல் தரிசனமான விஸ்வரூப தரிசனம் தான். அதாவது முந்தைய தினத்தில் அலங்காரத்தில் கடவுளை தரிசிப்பது தான் விஸ்வரூப தரிசனம் ஆகும்.


இன்னும் எளிதாக புரிய வேண்டும் என்றால் முதல் நாள் இரவு கோவில் நடை அடைக்கப்பட்டு மறுநாள் காலையில் நடை திறந்ததும் கருவறையில் திரைவிலக்கப்பட்டு நடைபெறுகிற முதல் தரிசனம் விஸ்வரூப தரிசனம் ஆகும். பொதுவாக, க்தர்கள் இறைவனை காண்பது தரிசனம். ஆனால் கடவுள் பக்தர்களை பார்ப்பதுதான் விஸ்வரூப தரிசனமாகும்.
மேலும், ஐதீகத்தின்படி காலையில் நடை திறந்த நேரத்தில் திரை விலக்கப்படும் பொழுது தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று கடவுள் பார்ப்பாராம். இவ்வாறு கடவுளின் அருள் பார்வை நேரடியாக பக்தர்களின் மீது விழுவதுதான் விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பு ஆகும்.
அதோடு திருச்செந்தூர் முருகன் கோவிலை பொறுத்தவரை குழந்தையாக இருந்த முருகப்பெருமான் தேவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்ததாக வரலாறு சொல்கிறது.
அதோடு முருகப்பெருமான் சூரபத்மனுக்கும் விஸ்வரூப தரிசனம் கொடுத்த பிறகு அவனை ஆட்கொண்டு முருகப்பெருமான் அருள் புரிந்தார் என்றும் இந்த தரிசனத்தின் பொழுது தான் முருகப்பெருமானுக்கு சேனை தலைவராக இருந்த வீரபாகு கடவுள் முருகனின் உடலில் 14 உலகங்களையும் தரிசிக்க முடிந்தது என்றும் புராணம் சொல்கிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட விஸ்வரூப தரிசனம் திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெறும். இந்த விஸ்வரூப தரிசனத்தில் நாம் முருகப்பெருமானை தரிசித்து கேட்கின்ற வரத்தை முருகப்பெருமான் உடனடியாக நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.
அது மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகளில் இருந்து உடனடியாக தீர்வு நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |