குழந்தைப் பொங்கல் வைத்து வழிபடும் வினோதம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் பல வருடங்கள் வழி வழியாக வினோத வழிபாட்டை அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், லம்பாடி இனப் பெண்ணிற்கு கோயில் எழுப்பி, குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்தி, நோய் நொடியின்றி பாதுகாப்பதாகக் கருதி, அக்கோயிலில் குழந்தைப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் வினோதம் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, வாழப்பாடி அருகில் உள்ள ஏ.குமாரபாளையம் மற்றும் மெட்டுக்கல் கிராமங்கள் வழியாக, நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ் லம்பாடி இனப் பெண் ஒருவர் வழிப்போக்கராக வந்திருக்கிறாள்.
இருள் சூழ்ந்ததால் சொந்த கிராமத்திற்குச் செல்ல முடியாத அவர், மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கினார்.
அப்போது அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கொஞ்ச நேரத்தில் மரத்தடியிலேயே அந்தப் பெண் அழகான குழந்தையை பெற்றெடுத்த அவளும், குழந்தையும் அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர்.
அந்தப் பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து அப்பகுதி மக்கள், பெண் காவல் தெய்வமாகக் கருதி, அந்தச் சிலைக்கு அருகில் முறுக்கு மீசை முனியப்பனையும் பிரதிஷ்டை செய்து இன்றளவும் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.
குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் குழந்தையுடன் சென்று, லம்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால், குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்தி, நோய் நொடி வராமல் பாதுகாக்கவும் அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.
ஆனால், குமாரபாளையம் மெட்டுக்கல், கல்லாணகி செக்கடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பற கிராம மக்கள் அம்மனுக்குக் கொண்டு சென்று குழந்தைப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் வினோதம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
லம்பாடி அம்மனுக்கு குழந்தைப் பொங்கல் வைத்துவிட்டு அதன் பிறகு வழி தவறினால் தெய்வக் குற்றம் ஏற்பட்டு குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்களிடையே இன்றளவும் நம்பிக்கை நிலவுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |