தன் பிள்ளைகளின் குறை தீர்க்கும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்
சிவகங்கை மாவட்டத்தில் இளையாங்குடி வட்டத்தில் தாயமங்கலம் என்ற கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் கன்னித் தெய்வம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் ஆகும். இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
ஆடி, பங்குனி மாதங்களில் நடைபெறும் விழாக்களுக்கு இங்கு வருவதற்காக தனி பேருந்துகள் காலையில் அனுப்பப்பட்டு மாலையில் திரும்பிச் செல்கின்றன.
முத்துமாரியம்மன்களில், சமயபுரம் மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், அன்பில் மாரியம்மன், தென்னலூர் மாரியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன், வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் ஆகிய ஏழு பேரும் சகோதரிகள் அவர். இவர்களில் சமயபுரத்தாள் அக்காள்.
எல்லோருக்கும் மூத்தவள். வீர சிங்கம்பேட்டை மாரியம்மன் எல்லோருக்கும் இளையவள். ஆனால் இந்த வரிசையில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் பெயர் சேர்க்கப்படவில்லை. மேலும் மாரியம்மன் சகோதரிகள் ஏழு பேரும் அமர்ந்த காலத்தில் இருக்க தாயமங்கலம் முத்துமாரியம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். பொதுவாக காளி அம்மன் நின்ற கோலத்தில் இருப்பது சமய மரபு.
கோயிலின் தோற்றம்
இராமநாதபுரத்தைச் சேர்ந்த வணிகர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பொருட்களை மதுரையம்பதிக்குக் கொண்டு சென்று பண்டமாற்று முறையிலும் பணத்துக்கும் வணிகம் செய்து வந்தனர். அப்போது முத்து செட்டியார் என்பவர் மதுரைக்கு வியாபார நிமித்தம் வரும்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தனக்குக் குழந்தை வரம் அருளும்படி வேண்டுவார்.
ஒரு நாள் முத்து செட்டியார் மதுரையில் இருந்து இராமநாதபுரத்திற்குத் திரும்பி வரும் வேளையில் சின்ன கண்ணனூர் காட்டில் இருட்டு வேளையில் ஒரு சிறுமியைக் கண்டார். அவளைத் தன்னோடு அழைத்து வந்தார். தாயமங்கலம் வந்து சேர்ந்து அங்குள்ள ஊருணிக்கரையில் அச்சிறுமியை உட்கார வைத்துவிட்டு அவர குளத்தில் இறங்கிக் குளித்தார்.
குளித்துவிட்டு கரையேறி வந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. முத்து செட்டியார் காணாமல் போன சிறுமியை அங்கும் எங்கும் எல்லா இடங்களிலும் தேடிவிட்டு மீனாட்சி கொடுத்தாள் மீனாட்சி பறித்துக் கொண்டாள் என்று வருந்தியபடி ஊர் வந்து சேர்ந்தார். அப்போது ஒரு பெண்ணுக்கு ஆவேசம் வந்து 'நான் கள்ளிக்காட்டில் இருக்கிறேன்.
எனக்கு அங்கேயே கோவில் கட்டி அனைவரும் கும்பிடுங்கள் உங்களுக்கு நான் நல்லது செய்வேன்' என்று அருள்வாக்கு கிடைத்தது. முத்துசெட்டியாரும் ஊர்காரர்களளும் கள்ளிக்காட்டைத் தேடிச் சென்று அங்கு ஒரு ஓலைக் குடிசை போட்டு ஊருணி மண்ணால் அம்மன் செய்து வைத்து வழிபட்டு வந்தனர். முத்து செட்டியார் பெயரால் அம்மன் முத்து மாரியம்மன் அழைக்கப்பட்டாள்.
முத்து செட்டியார் வகையறாக்கள் ஏழு தலைமுறையாக இக்கோவிலைப் பராமரித்து வருகின்றனர். தற்போது இருக்கும் பரம்பரை அறங்காவலர் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது உள்ள அம்மனின் கற்சிலையும் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுப்புற தெய்வங்களும் 1914 இல் தாயமங்கலத்தில் உருவானதாகும்.
நாட்டுப்புறத் தெய்வம்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் ஒரு நாட்டுப்புறத் தெய்வம் ஆவாள். அவளை வைதீக நெறிகளுக்குள் இதுவரை திணிக்கவில்லை. சிவனின் மனைவி என்று சொல்லி அருகில் சிவலிங்கம் வைத்து சிவன் கோவில் கட்டவில்லை. ஸ்தல புராணம் எதுவும் இயற்றப்படவில்லை.
ஆதிசங்கரர் வந்து ஸ்ரீ சக்கரம் எழுதி வைக்கவில்லை. தாடங்கம் பொருத்தவில்லை. அம்மனின் உக்கிரத்தை குறைக்கும் முயற்சி என்று எவரும் எதுவும் செய்யவில்லை. எனவே தாயமங்கலம் மாரியம்மன் எவ்விதப் புற நெறிக் கலப்பும் இல்லாத சுத்தமான தமிழ் நாட்டுப்புறத் தெய்வமாக இருந்து வருகிறாள்.
மக்கள் குறை தீர்ப்பவள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் மக்களின் தெய்வமாவாள். மக்களின் நோய்களைப் போக்குகின்றாள். திருமணமாகாதவர்க்கு திருமண வரம் அருளுகின்றாள். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் தருகின்றாள். தொழில் வாணிகம் செய்பவருக்கு அதில் வெற்றியும் லாபமும் பெற்று தருகின்றாள்.
எனவே மக்கள் இங்கு தினமும் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிச் செல்கின்றனர். ஆடி மாதத்திலும் பங்குனி மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால் சிறப்புப் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆடி மாதம் அனைத்து நாட்களிலும் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கின்றது.
கோவில் அமைப்பு
தாயமங்கலம் மாரியம்மன் கோவில் 1914இல் கட்டப்பட்டது. சுற்றியுள்ள 22 கிராமங்களின் வழிபடு தெய்வமாக விளங்கும் முத்துமாரியம்மன் கருவறையில் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். கருவறைக்கு முன்பு பக்தர்கள் நேரத்திக் கடன்களைச் செலுத்த வசதியாக பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இம்மண்டபம் கருவறையைச் சுற்றிலும் உள்ளது. கருவறையின் மீது கோபுரமும் அதற்கு அருகில் தெப்பக்குளமும் உள்ளன. தாயமங்கலம் மாரியம்மன் கோவிலில் வில்வமும் வேப்ப மரமும் கோவில் மரங்களாக உள்ளன.
பெரிய கருப்பு, சின்ன கருப்பு மற்றும் காளியம்மனுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. அம்மனின் இருபுறமும் விநாயகரும் முருகனும் தனி சன்னதியில் உள்ளனர். தாயமங்கலம் ஊருணிக் கரையிலிருந்து ஆற்று மணலைப் பிடித்து அம்மனை செய்து வைத்ததால் அம்மனுக்கு அபிஷேகங்கள் கிடையாது.
மணல் சிற்பங்கள்
திட்டக்குடியில் உள்ள பிரகன் மாதவன் பெருமாள் கோவில் உள்ள பெருமாளும் ஆற்றின் மணல் மற்றும் சேற்றினால் செய்யப்பட்ட பெருமாள் என்பதால் அதற்கும் அபிஷேகம் கிடையாது. அக்காலத்தில் ஆற்று மணலில் சாமி செய்து வைத்து வணங்கும் பழக்கம் இருந்துள்ளது .
வேளார் (குயவர்) என்ற இனத்தவர், மணல், கரிசல், செம்மண் ஆகியவற்றை கல் செக்கில் அரைத்து சலித்து மண் சிற்பங்கள் செயதனர். இன்றும் நாட்டுப்புற தெய்வங்களை கல்லில் அல்லது சிமெண்ட்டில் செய்தாலும் நேரதிக்கடனுக்கான குதிரைகள், ஆண், பெண் உருவங்கள் வேளாரால் மண்ணில் தான் செய்யப்படுகின்றது.
மண்ணில் செய்யும் கடவுள் சிற்பங்களுக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டும் உண்டு. ஆவணி மாதம் களிமண்ணை எடுத்து விநாயகர் செய்து வழிபடும் பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது. அந்த விநாயகரை மீண்டும் தண்ணீரில் கரைத்து விடுவது மரபு.
காரணம், தண்ணீர் பட்டால் களிமண் சிலை கரைந்து விடும். அதுபோல தாயமங்கலம் மாரியம்மன் சிலையும் தண்ணீர் பட்டால் கரைந்து விடும் என்ற காரணத்தினால் அபிஷேகம் மட்டும் கிடையாது.
பிடிமண் விழா
பங்குனி மாதப் பத்து நாள் திருவிழாவின் போது கோயில் வளாகத்தில் பிடி மண் எடுத்து அதையே தெய்வமாகக் கொண்டு விழாவைத் தொடங்கி நடத்துகின்றனர். இவ் விழா பத்து நாள் திருவிழாவில் முதல் நாள் விழாவாக மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பங்குனிப் பெரு விழா
தாயமங்கலம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் 19ஆம் தேதி பக்தர்கள் பூக்குழி இறங்குவர். 23ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். 24 ஆம் நாள் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வருவார்கள்.
இக்கோயிலில் அங்காப்பிரதட்சணம் செய்வர். இங்கு ஆண்களும் பெண்களும் தீச்சட்டி எடுப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா நடிகை கே ஆர் விஜயா அதிகாலை கோவிலுக்கு வந்து ஆண்டுதோறும் தீச்சட்டி எடுக்கும் நேர்த்திக் கடனை நிறைவேற்றி வந்தார்.
நோயும் நேர்ச்சையும்
தாயமங்கலம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் இப்பகுதி மக்கள் தங்களுக்கு நோய் வரும் போது மருத்துவ சிகிச்சை பெறுவதோடு நின்று விடுவதில்லை, அம்மனுக்கும் நேர்ந்து கொள்கின்றனர். அம்மை நோய் தாக்கினால் ஆயிரம் கண் பானை என்னும் நேர்த்திக் கடனை செய்வார்கள்.
கண்களில் நோய் வரும் போது அம்மனுக்கு கண்மலர் வாங்கி போடுவதாக நேர்ந்து கொள்வார்கள். வயிற்று நோய் தீர மாவிளக்கு எடுப்பது வழக்கம். குழந்தை வரம் வேண்டுவோர் குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கரும்புத் தொட்டில் கட்டி கோவிலை மூன்று முறை சுற்றி வருவார்கள்.
திருமணத் தடை உள்ளவர்கள் அம்மன் பாதத்தில் பொட்டுத் தாலியை வைத்து வணங்கி செல்வர். இக்கோவிலில் பக்தர்கள் தாங்கள் வேண்டும் காரியம் நிறைவேறினால் தரையில் உருண்டு கொடுப்பார்கள் (அங்கப் பிரதட்சணம் செய்வார்கள்)
சிறப்பு வழிபாடுகள்
எல்லா நாட்களிலும் தாயமங்கலம் மாரியம்மனுக்குக் காலையிலும் மாலையிலும் நித்யாகாலப் பூசைகள் நடைபெறும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அமாவாசை நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூசை உண்டு. (அமாவாசை வழிபாடும் அம்மனின் நின்ற கோலமும் இவ் அம்மன் காளியின் வழி வந்தவளோ என்று கருதத் தூண்டுகிறது). சிறப்புப் பூசை நடைபெறும் நாட்களில் அம்மனை நாடிவரும் கூட்டம் அதிகம்.
பெண் பக்தர்கள் சாமி வந்து ஆவேசக் குறி சொல்வது இங்கு அதிகமாக காணப்படுகின்றது. இத்தகைய குறி கேட்கவும் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இங்கு வழங்கப்படும் தீர்த்தம் அம்மை நோய்க்கு அருமருந்தாகும்.
பாலாபிஷேகம், விளக்குப் பூசை
தாயமங்கலம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி நாட்ளில் செவ்வாய்க்கிழமை தோறும் 108 குடம் பாலால் அபிஷேகம் செய்யப்படும். நவராத்திரி ஒன்பது நாளில் வரும் வெள்ளிக் கிழமைகளில் விளக்குப் பூஜை சிறப்பாக நடைபெறும்.
அன்று ஏராளமான பெண்கள் விளக்கு பூசையில் கலந்து கொள்வார்கள் தாயமங்கலம் மாரியம்மன் சகல சக்தியுள்ள கன்னித் தாயம்மன் ஆவாள். தன் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து எல்லா நலமும் வளமும் அருள்கிறாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |