மகாபாரதத்திற்கும் ஆடி 18 ஆம் நாளிற்கும் என்ன தொடர்பு- தெரிந்துக்கொள்ள வேண்டிய புராணங்கள்
ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடிப்பெருக்கு மிகவும் விசேஷம் வாய்ந்தது. அப்படியாக, அந்த நாளில் பல்வேறு விசேஷே வழிபாடுகள் நடைப்பெறும். மேலும், ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும்.
இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். இந்நாள் நதியை பெண்ணாக வணங்கும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அந்த வகையில் இந்த வருடம் 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு 03.08.2025 அன்று கொண்டாடப்படுகிறது.
அப்படியாக, இந்த ஆடிப்பெருக்குக்கு பின்னால் ஒரு புராணக்கதை உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.
புராணங்களில் ஆடி 18 என்பது மகாபாரதத்தில் நடைப்பெற்ற குருச்ஷேத்திரப் போரின் இறுதி நாளான 18 வது நாளை குறிக்கிறது. குருச்ஷேத்திரப் போரில் முதல் நாள் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்ட போதிலும், பீஷ்மரின் அம்புகளால் மிகவும் சேதம் அடைந்தது.
உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப் பட்டனர். அப்படியாக, முதல் நாள் போரில் பாண்டவர் படைகள் தோல்வி அடைந்ததை அடுத்து அதை சரி செய்ய பீஷ்மரைக் கொல்ல பாண்டவர்கள் அணி வகுத்தனர்.
ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. இதை அடுத்து பீஷ்மரை வீழ்த்த சிகண்டியைப் போர்க் களத்தில் அவருக்கு எதிராக நிறுத்தி போரிடும் படி கிருஷ்ணர் ஆலோசனை செய்தார். அவ்வாறே, கிருஷ்ண பகவானின் ஆலோசனைப்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர்.
அந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ஜுனன், சிகண்டியின் பின் இருந்து தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை தன் அம்புகளால் தாக்கி அவரை அம்புப்படுக்கையில் கிடத்தினான். இவ்வாறு, மகாபாரதம் போர் 15 நாட்கள் தொடர்ந்து நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர்.
அதைத் தொடர்ந்து, 16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் தன் பலத்தால் போரில் பல லட்ச பாண்டவர்களை வீழ்த்திக் கொன்றான்.
இருந்தாலும், அர்ஜுனன் ஒரு பக்கம் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்துக் கொண்டு இருந்தான். மேலும், கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய சத்தியத்தின்படி அவர்களை கொல்லாமல் விட்டு விட்டான்.
இவ்வாறு போர் நடந்துக் கொண்டு இருக்க, ஆயிரக்கணக்கான பாண்டவர்களைக் கொன்ற கர்ணன் அடுத்து அர்ஜுனனுக்கு குறிவைத்து அவனின் அம்புகளை வைத்து கடுமையாக போரிட்டான். அப்பொழுது, கர்ணன் அர்ஜுனனைக் கொல்ல அவனின் கழுத்திற்கு குறி வைத்து நாகபாணத்தை ஏவினான்.
அர்ஜுனன் உடன் நிற்பது கிருஷ்ணர் அல்லவா? சும்மா விடுவாரா? கர்ணன் அம்புகள் அர்ஜுனனை நோக்கி வரும் முன் அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அதில், அர்ஜூனனின் தேர் பூமிக்குக்கீழ் ஒரு அடி இறங்கியது.
அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காமல், அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் மிக சிறந்த போர் தந்திரம் அர்ஜுனன் உயிரைக் காப்பற்றியது.
இப்படியாக, போர் நடந்துக் கொண்டு இருக்க, குருச்ஷேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொள்ள கர்ணனின் விதியின் சூழ்ச்சி அங்கு வேலை செய்யத் தொடங்கியது.
கர்ணன் தேர் சகதியில் இருந்து மீட்டு எடுக்கும் நேரத்தில் கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார்.
விதியின் சதியால் கர்ணனின் கவச குண்டலங்களும் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாமல் கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சை அர்ஜுனனின் அம்புகள் துளைத்து போரில் கர்ணன் மடிந்து கீழே விழுந்தான்.
மடிந்த கர்ணனுக்கு கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் கொடுத்தார். இப்படியாக, மகாபாரதத்தில் அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்பட்ட அந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளாகும்.
இன்றைய நாளில் நாம் சந்திக்கும் இன்னல்கள் விலக கிருஷ்ணரை வழிப்பாடு செய்ய கிருஷ்ணர் அருளால் நம் வாழ்க்கை வளமாகும்.
சர்வம் கிருஷ்ணார்பணம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







