தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக்கூடாது ஏன் தெரியுமா?
இங்கு மனிதர்கள் பலரும் ஒருவருடன் பழகி பார்க்கும் முன் அவர்களுடைய தோற்றத்தை வைத்து தான் அவர்கள் யார் எப்படி என்று கணிக்க முயல்கிறார். ஆனால், இந்த உலகம் விசித்திரமானது. பல பக்குவப்பட்ட விஷயங்கள் மிக எளிமையான மனிதர்களிடையே காணமுடிகிறது.
அவர்கள் பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பதால் இவர்களிடம் என்ன இருக்கப் போகிறது? என்று பலரும் அவர்களை உதாசீனம் செய்து விடுகிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் அவர்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. "தான்" யார் தன்னுடைய நிலைமை என்ன? தன்னுடைய நோக்கம் என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் முட்டாள்களிடம் எப்பொழுதும் பேச மாட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த சான்றாக சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் உணர்த்துகிறது. அதை பற்றி பார்ப்போம்.

அதாவது சுவாமி விவேகானந்தர் காவியுடை அணிந்து தலைப்பாகையுடன் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயிலில் இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்தனர்.
அந்த ஆங்கிலேயர்கள் விவேகானந்தரின் தோற்றத்தை கண்டு, இவருக்கு ஆங்கிலம் எங்கே தெரியப்போகிறது என்ற கருதி விவேகானந்தரின் துறவுக்கோலத்தை கேலி கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது, ரயில் ஒரு ஊரில் நின்றது.
சுவாமி விவேகானந்தர் அங்கு இருக்கின்ற ஸ்டேஷன் மாஸ்டயிடம் சென்று குடிக்க தண்ணீர் எங்கே கிடைக்கும் என ஆங்கிலத்தில் கேட்கிறார். இதை கேட்ட ஆங்கிலேயர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சென்று சுவாமி விவேகானந்தரிடம் உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தும் நாங்கள் கேலி பேசியதை ஏன் தடுக்காமல் எங்களிடம் பேசாமல் இருந்தீர்கள் என்று கேட்கிறார்கள்.

அதற்கு சுவாமி விவேகானந்தர் "நான் முட்டாள்களிடம் பேசுவதில்லை" என்று பதில் அளித்தார். சுவாமி விவேகானந்தர் சொன்ன பதிலை கேட்டு அவர்கள் தலை குனித்தனர். இந்த சம்பவம் நமக்கு யாரையும் அவர்களுடைய தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது என்பதற்கு மிகச்சிறந்த சான்றாக இருக்கிறது.
இந்த விஷயங்களை குழந்தைகளிடமும் சொல்லி வளர்க்க வேண்டும். தோற்றம் எதுவாக இருந்தாலும் அவர்களுடைய பின்புலம் எதுவாக இருந்தாலும் சக மனிதர்கள் சக உயிர்களிடத்தில் நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தும் நாமும் அவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் மிகச்சிறந்த சான்றாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |