காமாட்சியம்மன் கோயிலுக்கு போறீங்களா? அப்போ இந்த 5 நபரை தரிசிக்க தவறாதீர்கள்
51வது சக்தி பீடங்களில் அன்னையின் நாவி விழுந்ததாக போற்றக்கூடிய மகா சக்தி இடமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் எண்ணற்ற சக்திகளை கொண்டிருக்கிறது. இந்த திருக்கோயில் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம்நூற்றாண்டு வரை வாழ்ந்த பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது என்பது வரலாறு.
பிறகு சோழர்கள், விஜயநகர அரசர்கள், மராட்டிய மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. பெரும்பாலான, அம்மன் கோவில்களில் அம்மனை நாம் நின்ற கோலத்தில் காட்சி தருவதை தரிசனம் செய்திருப்போம்.
ஆனால், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தென்கிழக்கு திசை நோக்கிநமக்கு அருள் வழங்குகிறார். இது நமக்கு காணக் கிடைக்காத தரிசனமாக இருக்கிறது. மேலும், அம்பாள் கரும்பு வில், மலர் பாணம், பாசம், அங்குசம் தாங்கியவாறு சதுர்புஜ நாயகியாக காட்சி கொடுக்கிறாள்.
முன்பொரு காலங்களில் அம்மன் மிகவும் உக்கிர வடிவமாக இருந்ததாகவும் பிறகு உலக நலன் கருதி ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனை சாந்த படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு அம்மன் சாந்த சொரூபிணியாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். அதனால் இந்த கோயில் "ஸ்ரீ சக்கர பீடம்" என்றும் அழைக்கப்படுகிறது.
அப்படியாக, காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள் இந்த ஐந்து நபரை வழிபாடு செய்ய தவறக் கூடாது. அதாவது இந்த கோவிலில் அம்மன் ஒரே தலத்தில் ஐந்து தெய்வ வடிவங்களில் அருள் புரிந்து வருகிறாள். அதனால் இந்த திருக்கோயில் "பஞ்ச காமாட்சி தலம்" போற்றப்படுகிறது. அந்த வகையில் இந்த பஞ்ச காமாட்சி வடிவங்கள் பற்றி பார்ப்போம்.

1. ஸ்ரீ காமாட்சி:
இவர்தான் மூலவராக கருவறையில் அருள் பாலிக்கிறார். மேலும் இங்கு அம்மன் மூன்று வடிவங்களில் நமக்கு காட்சி கொடுக்கிறார். அதாவது கருவறையில் உருவ வடிவமாகவும், சக்கரத்தில் யந்திர வடிவமாகவும், பிலாகாசத்தில் காரண வடிவமாகவும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இவர் "பரப்பிரம்ம ஸ்வரூபினி" என்று போற்றப்படுகிறார்.
2. தபஸ் காமாட்சி :
அம்மன் மூலவரின் வலது புறத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி பஞ்சாக்னி நடுவே தவம் செய்கிற கோலத்தில் தபஸ் காமாட்சியாக காட்சி கொடுக்கிறாள். இந்த தரிசனம் செய்பவர்களுக்கு தவ பலம் அதிகரிக்கிறது, மன உறுதி கிடைக்கிறது, அவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் கிடைக்கிறது.
3. அஞ்சன காமாட்சி:
இந்த அம்மனை "அரூபலட்சுமி" என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு அம்பாள் சன்னதியின் இடது புறத்தில் வடக்கு நோக்கி நமக்கு அருள்புரிகிறாள். இது ஆன்மீகத்தில் மிகவும் சூட்சுமமான வடிவமாகும். அதோடு, இந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அம்பாளின் திருமேனியில் குங்குமம் சாற்றப்படும் பொழுது அம்பாள் தெய்வீக அழகுடன் உருவம் பெறுகிறாள் என்று கூறப்படுகிறது.

4. பங்காரு காமாட்சி :
பொதுவாக "பங்காரு" என்றால் தங்கம் என்று பொருள். அப்படியாக, இந்த அம்மன் திருமேனி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது ஆகும். ஒருமுறை அந்நிய படையெடுப்பின் போது அம்மனின் பாதுக்காப்பு காரணமாக அம்மன் காஞ்சியிலிருந்து தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த வேளையில் அம்மன் துணியால் மூடப்பட்டு, முகத்தில் புனுகு சாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் இன்றும் பங்காரு காமாட்சியின் முகத்தில் புனுகு சாற்றும் வழக்கம் பின்பற்ற படுகிறது.
அதோடு, தஞ்சாவூரில் மேல வீதியில் பங்காரு காமாட்சிக்கு என்று தனி ஆலயம் உள்ளது. மேலும், பங்காரு அம்மன் வலது கரத்தில் கிளி, இடது கரத்தில் நளினமான அபய ஹஸ்தம் கொண்டவாறு அருள்பாலிக்கிறார். இவரை தரிசனம் செய்பவர்களுக்கு நிலையான செல்வம், திருமண யோகம், குடும்பத்தில் ஒற்றுமை ஆகியவை கிடைக்க பெறுகிறாரகள்.
5. உற்சவ காமாட்சி:
பொதுவாக திருவிழா காலங்களில் வீதியுலா வரும் உற்சவ மூர்த்தியே உற்சவ காமாட்சி ஆவார். இவர் வலது புறத்தில் மகாலட்சுமி, இடது புறத்தில் சரஸ்வதி அமைந்துள்ளனர். காரணம் "காமாட்சி அம்மன், லட்சுமி தேவியையும் சரஸ்வதியையும் தனது கண்களாகக் கொண்டவள்" என்று ஆகமங்கள் கூறுகின்றன.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |