ஆண்டிற்கு ஒரு முறை மஞ்சள் நிறமாக மாறும் குற்றாலம் அருவி - காரணம் தெரியுமா
விடுமுறை நாட்கள் என்றால் எல்லோரும் குற்றாலம் சென்று அங்க இருக்க கூடிய அருவியில் குளித்து நேரம் செலவு செய்ய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அந்த அளவிற்கு குற்றாலம் என்றால் மக்கள் மனதில் ஒரு மிகப்பெரிய அளவில் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் இங்கு பலரும் அறிந்திடாத ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்று நடக்கிறது.
வருடத்தில்ஒரு நாளில் மட்டும் மஞ்சள் நிறத்தில் அருவி விழுகின்ற இந்த ஆச்சரியமான விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம். குற்றாலத்திற்கு மேல் பகுதியில் அமைந்துள்ளது செண்பகாதேவி அருவி இந்த அருவி அருகே செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டிற்கு ஒரு முறை சித்ரா பௌர்ணமி நாளில் மஞ்சள் நிறத்தில் அருவி விழுகின்ற அதிசயம் நடக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தில் இந்த கோவிலில் சிறப்பான திருவிழாவும் நடைபெறுகிறது.

இந்த திருவிழாவின் பொழுது முக்கிய நிகழ்வாக ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உற்சவர் ஆக உள்ள செண்பகாதேவி அம்மனை தோளில் சுமந்து செண்பகாதேவி அருவிக்கு அழைத்து செல்கிறார்கள்.
பிறகு அங்கு அம்மனுக்கு அருவி நீரால் நீராட்டும் வைபவம் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் தூள் கொண்டு வந்து பூஜை செய்து அருவி நீரில் கலக்குகிறார்கள். இதன் விளைவாக செண்பகாதேவி அருவி முழுவதும் மஞ்சள் நிறத்தில் மாறி பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும் பரவசத்திலும் ஆழ்த்துகிறது.
இந்த நிகழ்வு வெறும் வழிபாட்டு சடங்காக மட்டும் பின்பற்றாமல் பக்தியின் உச்ச வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் அன்று தான் முனிவர்களும் தேவர்களும் தேன் அருவி எனப்படும் இடத்தில் கூடுவதாக நம்பப்படுகிறது.

அப்பொழுது பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்ததாகவும் அந்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் வானத்திலிருந்து மஞ்சள் மழையை பொழியச் செய்ததாகவும் புராணங்களில் சொல்லப்படுகிறது.
அதனால் இன்றும் சித்ரா பௌர்ணமி நாளில் தேனருவி அருகே உள்ள பாறை மீது ஒரு வெள்ளை வேஷ்டி விவரித்து வைத்தால் அதன் மேல் மஞ்சள் தூள் விழும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.
இந்த தெய்வீக நிகழ்வை நினைவு கூறும் விதத்தில் தான் செண்பகாதேவி அருவியில் இந்த மஞ்சள் நீராட்டு வைபவம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. நடைபெறுகின்ற இந்த நிகழ்வானது குற்றாலத்தில் மறக்க முடியாத ஆன்மீக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |