பாரிமுனையின் காவல் தெய்வம் - காளிகாம்பாள் கோவில் சிறப்புப் பார்வை
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழம்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் காளிகாம்பாள் கோவில், நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் வீற்றிருந்தாலும், அதன் வரலாறு சென்னையின் தோற்றத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
சென்னையின் சென்னியம்மன்:
ஆரம்ப நாட்களில் வங்கக் கடலை ஒட்டி, மீனவ கிராமத்தினரின் தெய்வமாக காளிகாம்பாள் அமைந்திருந்தாள். அப்போது செந்தூரம் சாத்தி வழிபடப்பட்டதால், சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள்.
இந்தச் சென்னியம்மன் குப்பம் என்பதே பின்னர் சென்னை என மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிக்காக வந்தபோது, திருவண்ணாமலையிலிருந்து கல் எடுத்து வந்து இக்கோவிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
கோட்டையம்மன் முதல் தம்புசெட்டித் தெரு வரை:
1640-ல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியபோது, இக்கோவில் கோட்டைக்குள் அமைந்தது. இதனால் கோட்டையம்மன் என்றும் அழைக்கப்பட்டது.
பின்னர், ஆங்கிலேய வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காளிகாம்பாள் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள். இந்த புதிய கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியபோதும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
சத்ரபதி சிவாஜியும் காளிகாம்பாளும்: ஒரு வரலாற்றுப் புதிர்
1677-ல் சத்ரபதி சிவாஜி சென்னையை நோக்கிப் படையெடுத்து வந்தபோது, மெட்ராஸ்வாசிகள் அச்சத்தில் உறைந்திருந்தனர். 1677, மே 14 அன்று சிவாஜியின் தூதர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்து விலை உயர்ந்த கற்களையும் விஷமுறிவு மருந்துகளையும் கேட்டார்.
பணம் வாங்காமல் ஆங்கிலேயர்கள் பொருட்களை அளித்தனர். மீண்டும் சில கோரிக்கைகளுடன் வந்த தூதருக்கு, இரண்டாம் முறையும் இலவசப் பொருட்களே வழங்கப்பட்டன.
மூன்றாம் முறையாக ஆங்கிலேயப் பொறியாளர்களைக் கேட்டபோது, ஆங்கிலேயர்கள் பணிவுடன் மறுத்தனர். இதனால் சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் மாற்றங்களால் சிவாஜி தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது. இந்த இடத்தில்தான் ஒரு வரலாற்றுப் புதிர் நீடிக்கிறது.
சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என சில ஆய்வாளர்கள் கூற, வேறு சிலரோ, காளியின் தீவிர பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளைத் தரிசித்துவிட்டுச் சென்றதாக நம்புகின்றனர். அக்டோபர் 3, 1677 அன்று சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு இருந்தாலும், இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் இல்லை.
பாரதியார் முதல் ரஜினிகாந்த் வரை:
காளிகாம்பாளின் அருள்! மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் பணியாற்றும்போது, பிராட்வேயில் தங்கி அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து வழிபட வருவாராம். அவரது புகழ்பெற்ற "யாதுமாகி நின்றாய் காளி" என்ற பாடலில் வருவது இந்தக் காளிகாம்பாள்தான்.
சத்ரபதி சிவாஜி, மகாகவி பாரதியார் எனத் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், மூன்று நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.
கடற்கரைக் கோவிலில் காளியின் உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் காளிகாம்பாள் கோவில் சென்னையின் ஆன்மீகச் சின்னமாக விளங்குகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |