தமிழ் புத்தாண்டின் கனி காணுதல் முறை
தமிழ் வருடங்களில் 38வது ஆணடான குரோதி ஆண்டு நாளை(ஏப்ரல் 14ம் திகதி) பிறக்கிறது.
12 ஆண்டுகளுக்கு பின்னர் சூரிய பகவான், குரு பகவானுடன் சேர்ந்து பயணிக்கப் போகிறார், முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில் குரோதி ஆண்டு பிறக்கிறது.
தமிழ் புத்தாண்டு அன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் முறை வழக்கமாக ஒன்றே, அவ்வாறு செய்தால் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.
கனி காணுதல் முறை
புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் வீட்டை முழுவதும், பூஜை அறை என சுத்தம் செய்ய வேண்டும்.
முதல்நாளே பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மங்கள பொருட்களை காணச்செய்வதே கனி காணுதல் ஆகும்.
இரவு உறங்குவதற்கு முன்பாக
தாம்பூலம் ஒன்றில் மா, பலா, வாழை என முக்கனிகளையும் வைக்க வேண்டும், இதுதவிர வேறு பழங்கள் கிடைத்தாலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது தட்டில் மொச்சை, அவரை, துவரை, வெல்லம், பச்சரிசி என தானிய வகைகளை வைக்க வேண்டும்.
மூன்றாவது தட்டில் வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.
நான்காவது தட்டில் மஞ்சள், குங்குமம், கல்உப்பு வைக்க வேண்டும்.
ஐந்தாவது தட்டில் பாதாம், பிஸ்தா, முந்திரி வகைகளை வைத்திடுங்கள்.
ஆறாவது தட்டில் வண்ண வண்ண வாசனை மிக்க மலர்கள், இனிப்பு வகைகளையும் வைக்க வேண்டும்.
ஏழாவது தட்டில் தங்கம், வெள்ளி நாணயங்கள், சிறிய நகை போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
கண்ணாடி ஒன்றை எடுத்துக்கொண்டு அதன் ஓரத்தில் மஞ்சள், குங்குமம் இட்டு வைக்க வேண்டும், ஒரு மேஜை மீது அனைத்து தட்டுகளையும் வைத்து கண்ணாடியில் தெரியுமாறு வைக்க வேண்டும்.
மறுநாள் புத்தாண்டு பிறந்தவுடன் காலையில் இந்த பொருட்களை குடும்பத்தினர் அனைவரும் காணவேண்டும், இதுவே கனி காணுதல் முறையாகும்.
சாமிக்கு படையல் வைத்து பூஜை செய்யும் போது இந்த தட்டுக்களுக்கும் சூடம்- சாம்பிராணி காட்டி வழிபட வேண்டும்.
படையல் வைக்கும் போது அறுசுவைகளுடன் உணவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.