அடுத்தவர்களுடைய கர்ம வினை நம்மை பாதிக்குமா?
கர்ம வினை என்றால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பதே.அதாவது இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைத்து உயிர்களும் பாவம் புண்ணியம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு கடுகு அளவாவது பயம் வேண்டும். சக உயிர்கள் அவர்களை துன்புறுத்தினால் வார்த்தைகளால் காயப்படுத்தினால் அந்த கர்ம வினை நம்மை முற்றிலும் பாதிப்படைய செய்யும் என்பதை தாண்டி ஏழு பிறவிகளுக்கும் அதனின் தாக்கம் நம்மை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு வாழ வேண்டும்.
ஆனால் மனிதன் அதற்கெல்லாம் அஞ்சுவது போல் இல்லை.மிக சாதாரணமாக தவறுகளை செய்துவிடுகின்றனர்.
உண்மையில் இந்த கர்ம வினை எப்படி எல்லாம் கணக்கெடுக்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு முறை அரசன் முனிவர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.அந்த நேரம் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.
பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அந்த அந்தனர் இறந்து போனார்.
அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது. கழுகிற்கா ?பாம்பிற்கா ? அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.
விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றமும் இல்லை. அரசனும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.
இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன். சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என சித்திரகுப்தனை அறிவுறுத்தினான் எமன்.
ஒரு சில நாட்கள் கழித்து அரசனின் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.
அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை கூறியதோடு இல்லாமல் இந்த அரசன் அந்தணர்களை விஷம் கொடுத்து கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறினாள்.
இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று.
காரணம். மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.
உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும். எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |