முருகப்பெருமானுக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடனா? வியப்பில் ஆழ்த்திய பக்தர்கள்
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானுக்கு உலகெங்கும் பக்தர்கள் அதிகம். மேலும் முருகப்பெருமானிடம் நாம் என்ன வேண்டுதல் வைக்கின்றோமோ அதை உடனடியாக நிறைவேற்றி அருள் புரிபவர்.
அப்படியாக, விழுப்புரம் அருகே உள்ள முத்தோப்பு மற்றும் முத்தாம் பாளையம் பகுதிகளில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகப்பெருமானுடைய திருமணத் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பாகவே கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

விழா நாட்களின் பொழுது தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன. அப்படியாக தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்ற பல்வேறு நேர்த்தி கடன்களை பக்தர்கள் மேற்கொண்டனர். தயிர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகங்களுடன் மிளகாய் அபிஷேகமும் இந்த திருவிழாவின் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் பக்தர்கள் உடல் முழுவதும் அரைத்த மிளகாய் விழுதுகளை பூசிக்கொண்டு சுவாமிக்கு மிளகாய் அபிஷேகம் செய்து தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து கற்பூர அபிஷேகம் நடைபெற்றது.

அதாவது எரியும் கற்பூரத்தை சல்லடை வழியாக பக்தர்கள் மீது செலுத்தும் இந்த வழிபாடு பக்தியின் தீவிரத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த வழிபாடுகளை காண பல்லாயிர பக்தர்கள் ஒன்று கூடினர்.
மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் உடலில் அழகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி மற்றும் பன்னீர் காவடிகளை ஏந்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.
பிறகு விழாவை முன்னிட்டு கோவில் மற்றும் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. வித்தியாசமான நேர்த்திக்கடன்களை பார்த்த பக்தர்கள் மெய் சிலிர்த்து முருகப்பெருமானுடைய அருளை பெற்றனர்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |