பதினொரு முகத்துடன் காட்சியளிக்கும் முருகப்பெருமான் திருத்தலம்
இராமநாதபுரம் குண்டுக்கரை என்ற திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுவாமிநாத சுவாமி ஆலயம்.
இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் 11 தலைகளுடனும் 22 கரங்களுடனும் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
போரில் சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமான் இந்தத் தலத்திற்கு வந்து தங்கியதாக தல புராணம் சொல்கிறது.
இங்கு முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
இராமநாதபுரம் பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துவந்த பாஸ்கர சேதுபதி இக்கோயிலுக்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.
ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான் இத்திருத்தலத்தில் உள்ள முருகன் சிலையை மாற்றி புதியதாக ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும், இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு நன்மை விளையும் என்றும் கூறி மறைந்தார்.
அதன்படியே குண்டுக்கரை சென்ற பாஸ்கர சேதுபதி, ஆலயத்தில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றிவிட்டு, தற்போதுள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு சொல்கிறது.
கந்தசஷ்டி விசேஷத்தின்போது திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹாரம் சிறப்பாக இங்கு நடைபெறும்.
இந்த தினத்தில் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |