நான்கு நிலைகளில் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் திருநீர்மலை பெருமாள் கோவில்

By Aishwarya May 24, 2025 12:30 PM GMT
Report

சென்னை பல்லாவரத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருநீர்மலை திவ்யதேசம். இத்தலத்தில் இருநூறு அடி உயரமுள்ள ஒரு சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் ஒரு பெருமாள் சன்னதி மற்றும் மலைமேல் மூன்று சன்னதிகள் உள்ளன.

சுலபமாக ஏறிச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலை அடிவாரத்தில் உள்ள மூலவர், நீலமுகில்வண்ணன் என்ற பெயரில், நின்ற திருக்கோலத்தில் கிழக்கே நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார், அணிமாமலர்மங்கை, தனிக்கோவிலில் நாச்சியாராக எழுந்தருளியுள்ளார். நீர் சூழ்ந்த மலைவட்டத்தில் இருந்ததால் “நீர்வண்ணப்பெருமாள்” என்றும், இத்தலத்திற்கு “திருநீர்மலை” என்றும் பெயர் ஏற்பட்டது.

நான்கு நிலைகளில் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் திருநீர்மலை பெருமாள் கோவில் | Thiruneermalai Perumal Temple

தல வரலாறு:

வால்மீகி முனிவர், ராமாயணத்தை எழுதிய பின், ராமபிரானை நேரில் காணவேண்டுமெனும் தாபத்தில் உலகின் பல புண்ணிய ஸ்தலங்களைத் திரிந்து, இறுதியாக திருநீர்மலையை அடைந்தார். இத்தலத்தில் ஒரு பெரிய புஷ்கரிணி மற்றும் மலை ஒன்றைக் கண்டு, இதேதான் தான் தேடிய தெய்வீக ஸ்தலம் என்று உணர்ந்து, மலைமேல் தவமிருத்தார்.

ஆனால் ராமனைக் காண முடியாமல் மனம் வருந்தினார். அவரது வேதனையைத் துடைக்க, இத்தலத்து பெருமாள், சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமண கோலத்தில் காட்சி அளித்தார். இதைக் கண்ட வால்மீகி, "இந்த நிகரற்ற திருமண கோல தரிசனம் எப்போதும் நிலைத்திருக்கவேண்டும்" என்று வேண்டினார்.

எம்பெருமான் அவர் வேண்டுகோளை ஏற்று, அவ்வாறு எப்போதும் திருமண கோலத்திலேயே நிலைபேறாகக் காட்சி தருகிறார். திருமங்கையாழ்வார், இத்தலத்தை மங்களாசாசனம் செய்து, தாயாரை “அணிமாமலர்மங்கை” எனப் பாடினார்.

பெருமாளின் நான்கு கோலங்களை ஒரே தலத்தில் தரிசிக்க முடியும் என்பதுதான் இத்தலத்தின் சிறப்பு. திருமங்கையாழ்வார், திருநீர்மலை பெருமாளை தரிசிக்க வந்தபோது, மலையைச் சுற்றி முழுவதும் நீர் சூழ்ந்திருந்தது. அவர் அந்த நீரைத் தாண்டி சுவாமியை தரிசிக்க இயலவில்லை.

இருந்தாலும், சுவாமியை தரிசிக்காமல் செல்ல வேண்டாம் எனத் தீர்மானித்தார். எனவே, கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலை மீது தங்கி, நீர் வடியும் வரை காத்திருந்தார். நாட்கள் கடந்தன; ஆனால் நீர் வடியவில்லை. இருந்தும், திருமங்கையாழ்வார் உறுதியோடு காத்திருந்து, கடைசியில் நீர் வடிந்த உடனே, பெருமாளைத் தரிசிக்கச் சென்றார்.

நான்கு நிலைகளில் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் திருநீர்மலை பெருமாள் கோவில் | Thiruneermalai Perumal Temple

தன்னிடம் பிரீதி கொண்ட பக்தனைத் திருப்திப்படுத்த, பெருமாள் நான்கு வடிவங்களில் காட்சி அளித்தார்:

நின்ற கோலத்தில் – நீர்வண்ணப்பெருமாள் (மலையடிவார கோயிலில்)

இருந்த கோலத்தில் – பால நரசிம்மர்

பள்ளிகொண்ட கோலத்தில் – ரங்கநாதர்

நடந்த கோலத்தில் – உலகளந்த பெருமாள் 

இந்த நான்கு கோலங்களிலும் பெருமாளை ஒரே தலத்தில் தரிசிக்கக்கூடிய அதிசய சேத்திரம் இது. இதில் நீர்வண்ணப்பெருமாள் அடிவார கோயிலில் அருள்பாலிக்க, மற்ற மூவரும் மலைக்கோயிலில் வீற்றிருக்கின்றனர். 

கேட்டதை அருளும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலின் சிறப்புகள்

கேட்டதை அருளும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலின் சிறப்புகள்

பால நரசிம்மர்:

இங்குள்ள நரசிம்மர் சாந்த ரூபத்தில், பால நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். ஹிரண்யனைக் கொன்ற பின் கோபத்துடன் இருந்த நரசிம்மரைக் கண்டு ப்ரஹலாதன் பயந்ததும், நரசிம்மர் குழந்தை வடிவத்தில் சாந்தமாக அவனைத் தங்கடைக்கொண்டார். இவருக்கு பின்னே சுயரூப நரசிம்மர் – இரண்டு கரங்களுடன், சங்கு சக்கரம் இன்றி, இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டும் தனிச்சிறப்பு அமைந்துள்ளது.

திருநீர்மலை கோவில், காண்டவ வனத்திற்குள் தோயாத்ரி மலைவாசலில் அமைந்துள்ளது. அழகான அலங்கார நுழைவுவாசல் வழியாக நுழைந்ததும், ஒரே சீரான உயரமுடைய, நல்ல அகலமுள்ள 200 படிக்கட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. படிக்கட்டின் பாதி தூரத்தில் வலப்புறம் ஒரு பிரிவு தெரிகிறது.

அங்கே நான்கு படிகள் இறங்கி எட்டிப் பார்த்தால், சிறிய அளவில் ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று அமைந்துள்ளது. கோவிலின் முகப்பில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. அதற்கு முன் நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் இசைமகுடம் பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமி மற்றும் ‘கல்கி’ சதாசிவம் தம்பதியரால் கட்டப்பட்டது.

நான்கு நிலைகளில் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் திருநீர்மலை பெருமாள் கோவில் | Thiruneermalai Perumal Temple

இவர்களின் திருமணம் இந்தக் கோவிலிலேயே நடைபெற்றது என்பது சிறப்பாகும். உள்வாசலில் நுழைந்ததும், வெளிப்பிரகாரத்தில் இடப்புறம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வலப்புறம் கொடிமரத்தைக் கடந்து பத்து படிகள் மேலேறினால், அந்த படிக்கட்டின் முடிவில் பெரியதிருவடி சிறியதாகக் காட்சி தரும் சந்நிதி அமைந்துள்ளது.

அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்ட திருக்கோலத்தில் இருக்கிறார். கருவறை படிக்கட்டின் இருபுறத்திலும் பழங்காலப் பெண்களின் சிலைகள், பாவை விளக்கேந்தி உள்ளன. பெருமாள் இங்கு சுயம்புவாகத் தோன்றியதால், இது 8 சுயம்பு விஷ்ணு சேத்திரங்களில் ஒன்றாகும்.

சுயம்பு மூர்த்தியாக இருப்பதால், இங்கு பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை, கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் மட்டும் சாம்பிராணி தைலம் பூசப்படுகிறது. தாயார் ரங்கநாயகி, தனிச்சந்நிதியில் உள்ளார். உட்பிரகாரத்தில் பால நரசிம்மர் சந்நிதி உள்ளது. இவரை சாந்த நரசிம்மர் என்றும் அழைக்கிறார்கள்.

ஹிரண்யவதம் முடிந்தபின்பு கோபம் அடங்காமல் இருந்த நரசிம்மரைப் பார்த்த பிரகலாதன் பயந்துவிட்டார். அந்தக் குழந்தையின் முகத்தில் பயத்தை கண்டு, “குழந்தையை பயமுறுத்திவிட்டேனே!” என்று இரக்கமடைந்த நரசிம்மர், அவனுக்கேற்றவாறு, சிறுவர் வடிவமாக, இரண்டு கைகளுடன் வீற்றிருந்தார்.

இவருக்குப் பின்னால், சுய ரூபமாக நின்ற நரசிம்மர், சங்கு சக்கரம் இல்லாமல், இடக்கை ஆட்காட்டி, வலக்கை அபய ஹஸ்தமாகக் காட்டும் வடிவில் உள்ளார். இவ்வாறு இங்கு நரசிம்மர் இரு வடிவங்களில் – பால வடிவமும், சுயரூபமும் – தரிசனம் அளிக்கிறார். கிழக்குப் புறத்தில் உலகளந்த பெருமாள் சந்நிதி உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரை ஒட்டி த்ரிவிக்ரமன் வடிவில் உள்ளார்.

மகாபலியின் தலையில் மூன்றாவது பாதத்தை வைத்து உலகைக் கடந்து அளந்தவர். வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் இவருக்குத் தனி உற்சவம் நடைபெறுகிறது. இக்கோவிலில் மூலவர் ரங்கநாதர் மலைமேல் உள்ள கோவிலில், உற்சவர் அழகிய மணவாளர் அடிவாரத்திலுள்ள கோவிலில் காட்சி தருகிறார்கள்.

நான்கு நிலைகளில் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் திருநீர்மலை பெருமாள் கோவில் | Thiruneermalai Perumal Temple

சுயம்பு மூலவருக்கு அபிஷேகம் செய்ய முடியாததால், திருமஞ்சனம், சேவை எல்லாம் உற்சவருக்கே நடக்கிறது. அவருடன் ஸ்ரீதேவி, பூதேவியர், ஆண்டாளும் உள்ளனர். சித்திரை பிரம்மோற்சவத்தில் கொடியேற்றம், கொடி இறக்கம், மற்றும் பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருமண உற்சவம் – இந்த மூன்று நாள்களில் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கு எழுந்தருளுவார்.

அந்த நாள்களில் மட்டுமே, மூலவரும் உற்சவரும் ஒரே இடத்தில் தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். கீழ் கோவிலில் நீர்வண்ணப் பெருமாள் சந்நிதி உள்ளது. முன்வாசலில் அழகான அஞ்சுநிலைக் கோபுரம் அமைந்துள்ளது.

வழக்கமாக கோவில்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே, ஒரே வரிசையில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை இருக்கும். ஆனால் இங்கு, பலிபீடமும் கொடிமரும் ராஜகோபுரத்திலிருந்து விலகி, தனித்தனியாக அமைந்துள்ளன. 

மலைகளின் அரசன் என்று போற்றப்படும் பர்வதமலை சிவன் கோயிலின் அற்புதங்கள்

மலைகளின் அரசன் என்று போற்றப்படும் பர்வதமலை சிவன் கோயிலின் அற்புதங்கள்

எட்டு சுயம்பு விஷ்ணு தலங்கள்:

ஸ்ரீரங்கம்

ஸ்ரீமுஷ்ணம்

திருப்பதி

ஸாளக்ராமம்

நைமிசாரண்யம்

புஷ்கரம்

பத்ரிகாசிரமம்

திருநீர்மலை

நான்கு நிலைகளில் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் திருநீர்மலை பெருமாள் கோவில் | Thiruneermalai Perumal Temple

இரட்டை உற்சவம்: 

சித்திரை மாதம் – மலைக்கோயிலில் ரங்கநாதருக்கு பிரம்மோற்ஸவம்

பங்குனி மாதம் – அடிவாரத்தில் நீர்வண்ணப்பெருமாளுக்கு பிரம்மோற்ஸவம்

இந்த நாட்களில் மட்டும் உற்சவர் அழகிய மணவாளராக மலைக்கோயிலில் எழுந்தருளுகிறார். எனவே மூலவரான ரங்கநாதரையும், உற்சவரையும் ஒரே சமயம் தரிசிக்க இவை தெய்வீக வாய்ப்புகள் ஆகும்.

மூக்கன் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படும் திருமலை முத்துக்குமர சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்!

மூக்கன் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படும் திருமலை முத்துக்குமர சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்!

 தீர்த்தங்கள்:

திருநீர்மலைக் கோவிலுக்கு முன்பாக உள்ள புஷ்கரிணியில் நான்கு தீர்த்தங்கள் சங்கமிக்கின்றன:

சித்த தீர்த்தம்

சொர்ண தீர்த்தம்

காருண்ய தீர்த்தம்

க்ஷீர தீர்த்தம்

தரிசன நேரம்:

காலை: 8.00 மணி – 12.00 மணி மாலை: 4.00 மணி – 8.00 மணி

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US