2026: மாசி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
தமிழ் மாதங்களில் பதினோராவது மாதமாக மாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார். மேலும், மாசி மாதத்தில் நிறைய ஆன்மீக தொடர்பான முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதில் மிக முக்கியமாக மகா சிவராத்திரி, மாசி மகம் போன்றவை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
சிவபெருமான் குழந்தை வடிவில் வந்து தன்னுடைய திருவிளையாடல்கள் வழியாக அருள் புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பது புராணங்கள் சொல்கிறது.
விஷ்ணுவின் தீவிர பக்தரான பிரகலாதனை கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி தீயில் வெந்து சாம்பலான நிகழ்வு நடந்தது இந்த மாசி மாதம் தான்.

மாசி மகம் அன்று தான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டு எடுத்தார்.
மாசி மகம் திருநாளன்று தான் அன்னை பார்வதி தேவி தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரி சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.
தான் ஒரு தெய்வீக பெண்மணி என்று உணர்ந்த கணவனால் புறக்கணிக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் "இனி எனக்கு இந்த மேனி அழகு வேண்டாம் பேய் உருவம் கொடு" என்று வேண்டி வரம் பெற்றது இந்த மாசி மாதத்தில் தான்.
மேலும் மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி பிராமணர்களுக்கு கம்பளி, சந்தன கட்டை, பசு முதலான தானங்கள் செய்வது மிகுந்த புண்ணியத்தை நமக்கு கொடுக்கிறது.

இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி தான் சிவபெருமானுக்கு மிக உகந்த தினமாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வரும் சிவராத்திரி இரவு முழுவதும் கண்விழிந்து சிவ புராணம் பாராயணம் செய்தால் மோட்சமும் சிவபெருமானுடைய முழு அருளையும் நாம் பெறலாம்.
மேலும் " மாசி சரடு பாசி படரும் " என்று சொல்வார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலையாக வாழ மாசி மாதம் நல்ல யோகம் திதி வரக் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மாங்கல்ய சரடை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டால் அவர்களுடைய கணவனுடைய ஆரோக்கியமும், குடும்பத்தில் நல்ல அமைதியும் உண்டாகும்.
மாசி மாதம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக்குடியேறினால் வாழ்வில் நல்ல மாற்றமும் வசந்தமும் உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் இந்த மாசி மாதத்தில் திருமணம் நடத்தினால் அந்த பந்தமானது நீண்ட நாட்கள் தொடரக்கூடியதாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.
அதைவிட முக்கியமாக பெண்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுடைய குடும்பம் மேம்படும். கணவனுடைய ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |