பூமியில் இருந்து வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது.. எப்படி செல்வது தெரியுமா?
வைணவ மரபில் வைகுண்டம் என்பது மகாவிஷ்ணு வீற்றிருக்கக்கூடிய இருப்பிடம் மற்றும் நமக்கு முக்தி அளிக்கக்கூடிய பரமபதம் ஆகும். அப்படியாக, இந்த வைகுண்டம் பூமியிலிருந்து எவ்வளவு தூரம் என்று ஒரு நாள் ஒரு மன்னனுக்கு சந்தேகம் வந்தது. அதாவது வைகுண்டம் என்று சொல்கிறார்களே.
அது பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்து இருக்கும் என்பது அந்த மன்னனின் சந்தேகம் ஆகும். உடனடியாக அவர் அவையை கூட்டி சபையில் இருக்கின்ற பண்டிதர்களிடம் இந்த கேள்வியை கேட்கிறார். அவர்கள் எல்லோரும் அவர்களுடைய அறிவுக்கு ஏற்றது போல் வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை பற்றி பதில் அளித்தனர்.

ஆனால் அவர்கள் கூறிய பதில்கள் எதுவும் மன்னரை திருப்தி அடையச் செய்யவில்லை. அப்போது சபையில் இருந்த விதூஷகன் எழுந்து மகாராஜா வைகுண்டம் பூமியிலிருந்து வெகு தூரத்தில் எல்லாம் இல்லை, வைகுண்டம் நாம் கூப்பிடுகின்ற தூரத்தில் தான் உள்ளது என்று பதிலளித்தார். அதற்கு மன்னர் வைகுண்டம் கூப்பிடுகின்ற தூரத்தில் தான் இருக்கிறது என்றால் அதற்கு உரிய ஆதாரம் என்ன? நான் எப்படி நம்புவது என்று அவர் கேட்கிறார்.
உடனே, விதூஷகன் கஜேந்திரன் எனும் யானையை முதலை பிடித்த பொழுது அந்த யானை ஆதி மூலமே என்று கத்தியது. அந்த யானையின் குரல் கேட்டு க்ஷண நேரத்தில்மகாவிஷ்ணு இந்த இடத்தில் தோன்றி கஜேந்திரன் என்கின்ற யானையை காப்பாற்றினார்.
இந்த சம்பவம் உண்மை என்றால் வைகுண்டமும் நாம் கூப்பிடுகின்ற தூரத்தில் தான் இருக்கிறது என்பது உண்மைதானே என்று அவர் பதில் அளித்தார். மேலும் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமம் சக்தி வாய்ந்தது.

ஹரி நாமத்தால் இந்த உலகத்தில் துன்பத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் ஏராளம் என்றதும் சபையில் இருப்பவர்கள் எல்லோரும் கரகோஷமிட்டுனர் மன்னரும் மன மகிழ்ந்து விதூஷகனுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
ஆக, இன்பம் துன்பம் நிறைந்த கலியுகத்தில் தாரக மந்திரமே "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே"
இந்த மந்திரத்தை நாம் தொடர்ந்து பாராயணம் செய்து வரும்பொழுது நிச்சயம் பகவான் கிருஷ்ணர் நமக்கு அருள் வழங்குவார். எந்த ஒரு ஆபத்திலிருந்தும் நம்மை காப்பாற்ற ஓடி வருவார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |