கர்ம வினை நம்மை விட்டு எப்பொழுது முழுமையாக அகலும் தெரியுமா ?
நம்முடைய வாழ்க்கை என்பது கர்ம வினைகளோடு தொடர்புடையதாக நம்பப்படும் ஒன்று. இன்று நாம் அனுபவிக்கக்கூடிய துன்பமானது முற்பிறவியில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களின் தொடர் சங்கிலியாகவே பார்க்கப்படுகிறது. அப்படியாக, ஒருவருக்கு கர்ம வினையினால் ஏற்படக்கூடிய துன்பத்திலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் மனதார நன்மைகளும் உதவிகளும் செய்து வாழ்ந்தவராக இருந்தால் கட்டாயமாக அவர்களுடைய நல்ல கர்ம வினையானது அவர்களை மன நிம்மதியோடு வாழக்கூடிய வாழ்க்கையை கொடுக்கும்.
ஆனால், கெட்ட கர்ம வினைகளை ஒருவர் சேர்த்து வைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் படாத பாடும் விடாத துன்பமாக இருக்கும்.

அந்த வகைகளில், ஒருவர் கர்ம வினைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அது எங்கிருந்து எப்படி துவங்கியது? எப்பொழுது முடிவு தரும் என்ற குழப்பத்தை விடுத்து நடப்பதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள தொடங்கும் பொழுது கர்ம வினை ஆனது நம்மை விட்டு வெகு தூரம் சென்று விடும்.
இங்கு மனிதர்கள் பல நேரங்களில் ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் துன்பம் என்கின்ற அலை கடல் சூழ்ந்து விடுகிறது.
ஆக, நீங்கள் ஒருவரிடம் உண்மையாக பழகி அவர்கள் உங்களுக்கு துரோகம் செய்திருந்தாலும் சரி, விதி உங்களுக்கு நன்மையைச் செய்வது போல் தீமையை செய்து முடித்திருந்தாலும் சரி நடந்து முடிந்ததை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்.
துன்பத்தை கண்டு அழுவதாலோ, புலம்பி தீர்ப்பதாலோ உங்களுடைய கர்ம வினை எப்பொழுதும் கரைய போவதில்லை. நடப்பதை எப்பொழுது ஏற்றுக் கொள்ள பழகுகின்றமோ அப்பொழுது தான் நம்முடைய வாழ்க்கை புதுமை அடைகிறது.

இது கடினமான ஒன்றுதான். இதற்காகத்தான் தியானம் என்கின்ற ஒரு முறையை பெரியவர்கள் நம்மை கடைபிடிக்கச் சொன்னார்கள். தியானம் என்றால் நம்முடைய மனதை கட்டுப்படுத்தி நமக்காக ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி நம்மை தேடும் இடமாகும். தியானம் செய்யும் பொழுது உலகம் என்னும் பெரும் சத்தத்திலிருந்து தூரம் செல்கின்றோம்.
அவ்வாறு நாம் தூரமாக செல்லும் வேளையில் உலகத்தின் மீது உள்ள பார்வை வேறுபடுகிறது. ஆக, ஒருவர் மன அமைதியை பெற வேண்டும் என்றால் தினமும் ஒரு 30 நிமிடமாவது அவர்கள் தியானம் செய்து பழக வேண்டும்.
இவ்வாறு தியானம் செய்யும் பொழுது எவ்வளவு பெரிய துன்பம் அவர்களை சூழ்ந்து நிற்கின்ற பொழுதும் அவர்கள் அதை கடந்து விடுவார்கள். அதைவிட மன அமைதியோடு வாழக்கூடிய வலிமையை பெறுவார்கள் கர்ம வினையும் கரையத்தொடங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |