ராவணன் மனைவியிடம் நாம் கற்று கொள்ள வேண்டிய முக்கியமான பண்பு
மனிதனுக்கு நேரம் நன்றாக இருந்தால் அவனுக்கு பணமும் புகழும் கிடைத்து விடும்.ஆனால் அதை தக்க வைத்து கொள்ள கட்டாயம் அவனிடம் நற்பண்புகள் அவசியம்.காரணம் அதே நேரம் அவனுக்கு எதிராக திரும்பும் பொழுது அவன் உண்மை முகம் உலகத்திற்கு தெரிய வரும்.
அப்படியாக மனிதன் எப்படிவேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்பதை தாண்டி இப்படி தான் வாழ வேண்டும் என்று இறைவன் வகுத்த தர்மம் இருக்கிறது.அதன் படி வாழ இனி எத்தனை பிறவி எடுத்தாலும் பயம் இல்லாமல் அவன் மேல் பாரம் போட்டு வாழலாம்.நம் துன்பத்தை அவன் பார்த்து கொள்வான்.
அப்படியாக,மனிதர்கள் தர்ம நெறி தவறினால் என்ன துன்பம் எல்லாம் சந்திக்க நேரும் என்பதை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது ராமாயணம்.அதில் ராமன் இராவணன் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நமக்கு மிக பெரிய வாழ்க்கை பாடத்தை கற்று கொடுக்கிறது.
அதில் மிக முக்கியமான கதாபாத்திரமாக மண்டோதரி திகழ்கிறாள்.இராவணன் மனைவி ஆன மண்டோதரி எவ்வாறு வாழ வேண்டும் என்று மிக பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறாள் அதை பற்றி பார்ப்போம். பொதுவாக நாரதர் என்றாலே கலகம் விளைவித்து மகிழ்ச்சி காண்பவர் என்று அனைவரும் அறிவோம்.
ஆனால் அவர் நடத்தும் நாடகத்திற்கு பின்னால் நிச்சயம் ஒரு நல்ல முடிவு காத்திருக்கும்.அப்படியாக தசரத மகாராஜா மிகச்சிறப்பாக ஆட்சி நடத்தி கொண்டு இருந்தார்.ஒரு நாள் நாரதர் அவர் முன் தோன்றி,எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது.
அதாவது தென் கோசல நாட்டுக்கும், வட கோசல நாட்டுக்கும் திருமண சம்பந்தம் ஏற்பட்டால் நாம் மிக பெரிய சிறந்த பலன் பெறலாம்.அந்த திருமண பந்தத்தால் நாடு பலம் பெற்று எதிரிகளால் ஜெயிக்க முடியாத அளவு ஒரு சூழல் ஏற்படும் என்றார்.
நாரதர் வாக்கை,பெரும் வாக்காக கருதி அரசவையில் இருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து தென் கோசல நாட்டு மன்னன் மகள் கௌசல்யாவை வடகோசலா நாட்டு மன்னன் தசரதருக்கு மணம் பேசித் திருமணம் செய்ய நாள் குறித்தனர்.
இங்கே நாரதர் இவ்வாறு திருமண ஏற்பாடுகள் செய்ய தூண்டுதலாக இருந்து விட்டு,மறுபுறம் ராவணனிடம் சென்று, 'தசரதனுக்கும் கௌசல்யாவுக்கும் திருமணம் நடக்கப்போகிறதாமே உனக்கு தெரியாதா?என்றார். அதற்கு ராவணனும்,அவர்களுக்கு திருமணம் நடப்பதினால் என்ன?நடக்கட்டும் என்றான் இராவணன்.
அதற்கு நாரதரோ, 'ராவணா அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை உனக்கு எதிரி. அந்தக் குழந்தையின் கையால் உனக்கு மரணம்,' என்று எச்சரிக்கை மணி அடித்து விட்டுச் சென்றார். இது இராவணனை தூங்க விடாமல் செய்தது.இவர்களுக்கு முதலில் திருமணம் நடந்தால் தானே குழந்தை பிறந்து என்னை கொல்லும்.
இதோ இப்பொழுதே சென்று இதை தடுத்து நிறுத்துகிறேன் என்று கிளம்பினான்.இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்து ராவணனின் மனைவி மண்டோதரி தனது கணவனால் திருமணம் தடைபட்டு நின்று விடுமோ, சுப காரியம் தடைபடக்கூடாது என்று பயந்த அவன் பின்னே சென்றாள். ஆனால்,அங்கே எந்த தடங்கலும் ஏற்படாதவாறு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.
மிகுந்த முன்னெச்சரிக்கையோடு திருமண மண்டபம் கடல் நடுவில் மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது ஆகாய மார்க்கமாக வந்த ராவணன் அந்த மண்டபத்தை பார்த்து கீழே இறங்கினான்.ஆத்திரத்தில் மண்டபத்தை உடைத்தான்.
மண்டோதரி எவ்வளவோ தடுத்தும் இயலவில்லை.மண்டபம் தூள் தூளானது. இருந்தாலும் இராவணன் வரும் முன் நாரதர் தசரதரையும் கௌசல்யாவையும் தண்ணீருக்கு அடியில் அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்து விட்டதை அறிந்த ராவணன் மிகுந்த கோபத்தோடு தசரதரை பிடித்து இழுத்துக் கொல்ல முயன்றான்.
மண்டோதரி தேவியோ குறுக்கே பாய்ந்து இராவணனைத் தடுத்து நிறுத்தி,இவர்களுக்கு பிறக்க போகும் குழந்தை தானே உங்களுக்கு எதிரி.இவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்.இவர்களை ஏன் கொல்ல வேண்டும்?புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் அவர்கள் சந்தோஷமாக இருந்துவிட்டு போகட்டும்.
அடுத்தவர்களின் சந்தோசத்தை கெடுக்காதீர்கள். அது மிக பெரிய பாவம்,என்று கூறி தன் கணவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றாள். அதாவது மண்டோதரி சுயநலமாக யோசித்து இருந்தால் இராவணனை தடுக்காமல் இருந்து இருக்கலாம்.ஆனால் அவள் தர்ம சிந்தனையோடு செயல்பட்டால்.அவளுடைய தாலி பாக்கியம் போகும் என்று அறிந்து இருந்தும் இராவணன் செய்யும் தவறை அவள் அனுமதிக்கவில்லை.
ஆக,நல்லறிவு, நல் நினைவு, நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்வு, நன் முயற்சி, நல் விழிப்பு, நல் ஒருமை என்ற எண் வகை நெறிகளோடு வாழ்ந்தவள் மண்டோதரி.தம்மால் எந்த உயிரிகளுக்கும் எந்த ஒரு இன்னல்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி அவளின் கணவனுக்கு நல்லதை போதித்தாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |