புதனின் பரிகார தலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில்
சீர்காழி அருகேயுள்ள திருத்தலம் திருவெண்காடு, நவக்கிரக திருத்தலங்களில் இது புதனுக்குரிய பரிகார தலமாகும்.
புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமையப்பெற்றுள்ளதுடன் இத்தலத்தின் இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆவார்.
திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களை பாடி, மூன்று திருக்குளங்களில் நீராடி சிவ தரிசனம் செய்தால் தீராத நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும்.
திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களை பாடினால் ஞானமும் முக்தியும் பெறலாம்.

சிவபெருமானின் 64 வடிவங்களில் 43வது வடிவமான அகோர மூர்த்தி இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார், சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால் வேண்டிய வரங்களை அருள்வார்.
தல வரலாறு
சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வசித்து வந்தனர்.
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் அவர்களை துன்புறுத்தி வந்ததுடன் போர் புரிந்தான்.
சிவனை நோக்கி தவம் புரிந்த அசுரன் சூலாயுதம் பெற்ற ரிடப தேவரை தாக்கி காயப்படுத்தினான், இதுபற்றி அவர் முறையிட சிவன் கோபம் கொண்டார்.
அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றாக அகோர மூரத்தி தோன்றவே, அசுரன் சரணாகதி அடைந்தான்.
சரணடைந்த அசுரனை அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும்கூட காணலாம்.
