பகவத் கீதை: மனிதன் கவனமாக இருக்க வேண்டிய இடம் எது தெரியுமா?
எது தர்மம்:
இந்த பூமியில் நடக்கக்கூடிய நிறைய யுத்தம் வெற்றி வாகை சூடுவதற்காக நடப்பதல்ல. அவை சில சமயங்களில் தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் நடக்கிறது. மகாபாரதத்தில் அர்ஜுனன் போரில் நின்று கொண்டிருக்கிறார்.
அவனுக்கு எதிரே அவனுடைய இரு குடும்பமும் போரிடுவதற்கு தயாராகி கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அவன் செய்வதறியாது பாச போராட்டத்தால் நிலைகுலைந்துபோகிறான். மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடுகிறது.
இங்கு தான் மகாபாரத காவிய படைப்பின் உண்மையை சரியாக நாம் புரிந்து கொள்ளமுடியும். அதாவது, மகாபாரதம் பெருங்காவியம் என்பதை கடந்து ஒரு மனிதனுடைய ஆழ்மனதில் நடக்கக்கூடிய போராட்டங்களுக்கான பதில் என்பதை உணர்த்துகிறது.

எது வலிமை:
மகாபாரதத்தில் ஒரு மனிதனுக்கு எது சந்தோஷத்தை தரக்கூடியதோ அது தர்மம் என்று சொல்லவில்லை. தர்மம் என்பது பிரபஞ்சத்தினுடைய கட்டளை. தர்மம் ஒழுக்கத்தின் அடையாளம். தர்மம் நிறைய தியாகங்கள் நிறைந்தது என்கிறார் கிருஷ்ணர்.
அப்படியாக, அர்ஜுனன் மகாபாரதத்தில் அவன் மிகவும் உடலால் வலிமை வாய்ந்தவன் என்பதற்காகவே அவன் போராடு வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. எந்த சூழ்நிலையிலும் தர்மம் நொறுங்கி விடக் கூடாது என்பதற்காகவே அர்ஜுனனின் கடமையை செய்ய சொன்னார் கிருஷ்ணர்.
என்னதான் அர்ஜுனன் பாச பிணைப்பால் நல்ல எண்ணங்களோடு போரிடுவதை தவிர்க்க வேண்டும் என்று எண்ணம் ஓடி கொண்டு இருந்தாலும் அந்த சமயத்தில்அவனுடைய அந்த எண்ணமானது அதர்மமாகவே கருதப்படுகிறது.
பற்றின்மை உணர்த்துவது என்ன:
மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் அடிக்கடி சொல்லக்கூடிய ஒரு விஷயம் பற்றின்மையை பற்றி தான். காரணம் இந்த பற்றின்மை என்ற ஒரு விஷயத்தினால் நாம் நிறைய விஷயங்களை சாதித்து விடலாம், நிறைய துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம்.
அதோடு அர்ஜுனன் சரியான முடிவு எடுக்கமுடியாத நிலைக்கு காரணம் அவனுடைய குடும்ப பற்று ஆகவே இருந்தது. அது தான் அவனை சரியானதை செய்ய தடுத்தது. மேலும் நாம் நன்றாக கவனித்தால், அர்ஜுனன் பல இடங்களில் துவண்டு நின்ற வேளையிலும், தலை குனிந்தும் மனம் தளர்ந்து நின்ற போதிலும் பகவான் கிருஷ்ணர் அவனை எந்த இடத்திலும் அவனுடைய உணர்வுகளை குறை சொல்லவே இல்லை.

மனிதர்களுக்கு உணர்வு ரீதியாக வரக்கூடிய சிக்கல் என்பது இயல்பானது தான். ஆனால் அந்த உணர்வுகள் எப்பொழுதும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கு தடைகளாகவும் தடங்கலாகவும் இருக்கக் கூடாது என்று தெளிவாக எடுத்துரைத்தார்.
அதாவது பகவான் கிருஷ்ணர் மனிதனுக்கு சோகம், துக்கம், ஆசை இவையெல்லாம் வாழ்க்கையில் ஒரு பகுதி என்றாலும் இந்த உணர்வுகளுக்கு பின்னால் நாம் கண்மூடித்தனமாக எந்த நேரத்திலும் நின்று விடக்கூடாது.
அர்ஜுனன் அவருடைய குடும்பத்திற்காக துக்கப்பட்டது உண்மைதான். அந்த நேரத்தில் தான் கிருஷ்ணர் அர்ஜுனனுடைய ஞான கண்ணை திறக்கிறார். அதாவது அர்ஜுனனின் இந்த குடும்ப பாசம் அவனை தர்மத்தை நிலை நாட்டுவதற்கு தடைகளாக இருக்கக் கூடாது என்று அர்ஜுனனை வழி நடத்துகிறார்.
அதனால் எவ்வளவு பெரிய உணர்வு ரீதியான நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி கண் விழித்து தர்மத்தோடு செயல்படுவது தான் ஒழுக்கத்தின் அடையாளம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
எது தியாகம்:
அதேபோல் தர்மத்தின் வழி செல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. தர்மம் சில நேரங்களில் நிறைய தியாகத்தை எதிர்பார்க்கும்.
அதோடு, உணர்வுகள் நம்மை எப்பொழுதும் ஒரு வசதியான நிலையிலே வைத்து கொள்ள நம்மை பழக்கும். அவ்வாறான விஷயங்களில் சிக்காமல் இருப்பதே சரியான முடிவாகும்.
மகாபாரதத்தில் அர்ஜுனன் நிறைய இடங்களில் அவன் செய்கின்ற சரியான செயலை கூட அவன் ஆழ்மனமானது அவன் ஏதோ தவறு செய்கிறான் என்று அவனை சிந்திக்க வைத்தது. இங்கு தான் அர்ஜுனனை ஆழமாக சிந்திக்க செய்கிறார் கிருஷ்ணர்.
இங்குதான் வலிமை அர்ஜுனனை சோதிக்க கூடிய இடம். வலிமை என்பதை நமக்கு சரியாக உணர்த்துகின்ற இடம். அதாவது, தர்மம் என்ற பாதையில் தியாகங்களை தாங்கிக் கொண்டுபோராடக்கூடிய ஆற்றல் இருக்கிறதோ அவனே உண்மையான வலிமையானவன் என்கிறார் கிருஷ்ணர்.

எது சரி? எது தவறு:
அதேபோல் தர்மம் என்பது இங்கு யாரையும் சரி தவறு என்று எடை போடுவதற்கு அல்ல. மனிதர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரு அற்புத சக்தி. மகாபாரதத்தில் எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும் கிருஷ்ண பகவான் அர்ஜுனனை இதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு கட்டளை இட வில்லை.
மாறாக அர்ஜுனனை வழி நடத்தினார். உண்மையின் பாதையை அவனுக்கு காட்டினார். எது சரி? தவறு? என்று சரியான பாதையை தன் வழிகாட்டுதலால் அர்ஜுனனை தேர்வு செய்ய வைத்தார். ஆக, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றால் நிறைய நேரங்களில் நாம் தனியாக பயணம் செய்ய வேண்டிய நிலை வரும்.
இதற்கு காரணம் நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பது அல்ல. சரியான பாதையை தேர்ந்தெடுப்பதால் சில தியாகங்களை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.

தர்மம் எப்பொழுது வெல்லும்:
மகாபாரதத்தில் அர்ஜுனனை போல் தான் நாமும் சரியான நேரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற இடத்தில் உணர்வு என்கின்ற சிறையில் சிக்கி கண்மூடித்தனமாக நின்று விடுகிறோம். நம்மை அறியாமல் அதர்மத்திற்கு துணை செல்கின்றோம்.
அதனால் மகாபாரதம் நமக்கு உணர்த்தக்கூடியது, உணர்வு என்கின்ற ஒரு விஷயம் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்கின்ற இடத்தில் நம்மை சிறையிடக்கூடாது. அதனால் இந்த ஒரு விஷயத்தை மனிதன் அவன் வாழ்க்கையில் கடைபிடிக்க தொடங்கிவிட்டான் என்றால் அவர்கள் பயணிக்கும் பாதை எல்லாம் பொன் வசந்தமாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |