இறை வழிபாடு செய்தும் துன்பம் வருகிறது என்று வருந்துபவரா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிலர் சொல்லி பட்டு இருப்போம். அதாவது நான் போகாத கோவில் இல்லை, வேண்டாத இறைவன் இல்லை, பாடாத பாசுரம் இல்லை ஆனால் எந்த தெய்வமும் எனக்கு கை கொடுக்கவில்லை என்று அவர்கள் வருந்துவதுண்டு. ஆனால் உண்மையில் தெய்வம் அந்த நேரத்தில் நம்மை கைவிட்டதா? அல்லது நம்மை காப்பாற்றி இருக்கிறதா? என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த உலகத்தில் என்ன நடக்க வேண்டுமோ? அது அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப நடந்து விடும். ஆனால் கர்ம வினையின் தாக்கம் குறைய வேண்டும் என்றால் நிச்சயம் நாம் இறை வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. இருப்பினும்இறைவழிபாடு செய்வதினால் உடனடியாக அந்தப் பிரச்சனை விலகிவிடும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.

ஆனால் கட்டாயம் வருகின்ற பிரச்சனையின் தாக்கத்தை நாம் குறைக்க முடியும். ஊர்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் "தலைக்கு வந்த துன்பம் தலைப்பாகையோடு" சென்றுவிட்டது என்று. அதாவது நம் தலையை நோக்கி வந்த அம்பு தலையில் மேல இருக்கக்கூடிய தலைப்பாகை தாக்கி நம் உயிரை காப்பாற்றியது என்பது அதனுடைய பொருளாக இருக்கிறது.
ஆக, இங்கு இறைவழிபாடு என்பது நம் தலையை காக்கக்கூடிய கவசமாக இருக்கிறது. அம்பு வருவது என்பது விதி என்றால் அங்கு தலைப்பாகையாக இருந்து நம்முடைய உயிரை காப்பாற்ற அருள் பவர் தான் இறைவன். இதற்கு மகாபாரதத்திலும் ஒரு சான்று இருக்கிறது. அதாவது போரில் அர்ஜுனனும் கர்ணனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

கர்ணன் அவனுடைய நாகாஸ்திரத்தை எடுத்து அர்ஜுனனின் தலையை குறிவைத்து அம்பை எய்தினார். அப்பொழுது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்த கண்ணன் தன் காலால் தேரை பூமியில் ஒரு அடி அழுத்தினார். அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த நாகாஸ்திரம் அர்ஜுனனின் தலைப்பாகை தாக்கி அவன் உயிரை காப்பாற்றி விட்டது.
இதனால் தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்று பழமொழி வந்தது. அதனால் இறைவனை வழிபாடு செய்வதால் வந்த துன்பத்தின் தாக்கம் குறைந்து தக்க சமயத்தில் நம் உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு ஆசிர்வாதத்தை வழங்குகிறது. அதை நாம் தீர ஆராய்ந்து பார்த்தால் அதில் இருக்கக்கூடிய ஆழ்ந்த அர்த்தம் இறைவனின் அருளும் நமக்கு புரிய வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |